Posts Tagged கவிதை தொகுப்பு

    என் கவிதைக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்

    பறிக்க படா
    பூக்களைப் போல்
    ரசிக்கப்படா கவிதைகள்
    என்னுடையது…

    என்று நான் கவிதையிலேயே புலம்பிக்கொண்டு இருந்த கல்லூரிக்காலம் அது. என் கிறுக்கல்களுக்கு மத்தியில் நானே ஆச்சர்யப்படும் படியான கவிதைகள் அவ்வப்போது  என்னிலிருந்து வருவதை நான் உணர்ந்தாலும், யாரேனும் அதை படித்து விட்டு நிறை/குறை சொல்லுவார்களா என நான் ஏங்கி இருக்கிறேன். நண்பர்கள் யாருக்கும் அப்போது கவிதைகளை படிப்பதில் சுத்தமாய் ஆர்வம்  இல்லை. கவிதைகள் படிப்பவர்கள் யாரும் எனக்கு அப்போது பழக்கமுமில்லை. நான் எழுதுவது கவிதை தானா? இல்லை கிறுக்கிக்கொண்டு இருக்கிறேனா? என்று பல முறை எனக்கு ஐயம் எழுந்ததுண்டு. எழுத ஆரம்பிக்கும் ஒவ்வொருவரும் அந்த வலியை உணர்ந்து இருப்பர் என நினைக்கிறேன்.

    இந்த சூழ்நிலையில் ஒரு கவிதைப்போட்டியை கேள்விப்பட்டேன். என்னை நானே பரிட்சயத்துப்பார்க்க  இதை விட சிறந்த வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை. ஆனால் நான் கத்துக்குட்டிகளுடன்  போட்டி போடவில்லை. உண்மையாலுமே கவிஞர் என்று பெயர் வாங்கியவர்களுடன். அது ஒரு பெரிய அளவில் நடத்தப்பட்ட போட்டி.  சிறிது தயக்கத்துடன் என்னுடைய ஒரே ஒரு கவிதையை அந்த போட்டிக்கு அனுப்பினேன். அதுவும் என்ன காரணத்தினாலோ அந்த கவிதையின் கடைசி வரியை மட்டும் மாத்திவிட்டு அனுப்பினேன்.. “அவள் சொந்தம் இல்லை.. இருந்தும் முயற்சியுடன் நான்” என்று முடியுமாறு தான் உண்மையில் அதை எழுதி இருந்தேன்.

    சிலவாரங்களில் அந்த ஆச்சர்யம் எனக்கு காத்திருந்தது. “நெய்வேலி கவிஞர்களின் கவிதை” என்ற தொகுப்பில் என்னுடைய அந்த ஒரு கவிதையும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்தேன். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    2004ஆம் ஆண்டு ஜுலை மாதம்.
    ஏதோ ஒரு நல்ல நாள்.
    நெய்வேலி புத்தகக் கண்காட்சி.
    லிக்னைட் ஹால்.

    அந்த கவிதை தொகுப்பில் வெளியான கவிதையின் கவிஞர்கள் அனைவரும் வயதில் மிகவும் பெரியவர்கள். நான் மட்டுமே பத்தொன்பது வயது நிரம்பிய கல்லூரி மாணவன் என்பதால் கொஞ்சம் ஓரத்தில் ஒதுங்கி மேடையில் நின்றுக்கொண்டேன்.  என்னையும் கவிஞனாய் மதித்து, பல பேர் முன்னிலையில், அப்போதைய கடலூர் மாவட்ட கலக்டர், மேடையில் அந்த புத்தகத்தையும், மூன்று நூறு ருபாய் தாளையும் எனக்கு பரிசாக அளித்தார். முதன் முதலாய் என் கிறுக்கல்களுக்கு கிடைத்த அங்கிகாரம் அது.

    சந்தோசத்தின் உச்சத்தில் அதை வாங்கி விட்டு மேடையில் இருந்து கீழே இறங்கினேன். நண்பன் ஒருவன் “மச்சி நீ நெஜமாவே இத்தனை நாள் கவிதை தான் எழுதின போல” என்று ஆச்சர்யமாய் கேட்டான். எனது அங்கீகாரம் உறுதியானது. உடனே இன்னொருவன் “எப்போ ட்ரீட்?” என்றான்.  கூடவே செலவும் உறுதியானது.

    அடுத்த சில நாட்களில், புத்தகப்புழுவாய் நான் ஊர்ந்துக்கொண்டு இருந்த நெய்வேலி நூலகத்திற்கு வழக்கம் போல் சென்றேன். கவிதை புத்தகப் பகுதியில், நான் மிகவும் விரும்பும் நா.முத்துக்குமார், வைரமுத்து போன்றோரில் கவிதைப்புத்தகங்களுக்கு நடுவே “நமக்கென்ன என்று” என் கவிதை பிரசுரமான அந்த கவிதைத்தொகுப்பும் இருந்ததை ஏதேச்சையாக கண்டேன். நான் காண்பது உண்மை தான் என உணர சில நிமிடங்கள் பிடித்தது….

    Manitha-Muyarchi-Praveen-Poem

     

    namakkena-endru-Neyveli-Poet

    நிலாப்பெண் – கவிதை

    the-girl-and-the-moon-girl-moon_big

    நிலவும் அழகுதான்
    அண்ணாந்து பார்த்து
    ரசிக்குமளவிற்கு.

    பார்த்தால் பக்கம்தான்
    நிஜமோ,
    தொடக்கைகள் நீண்டும்
    தொட்டுவிடா தொலைவிற்கு.

    தனிமையான இரவுப்பொழுதில்,
    நிலவே
    துணையாகிறது.

    கண்கள் காணக்கிடைத்தும்,
    சொந்தமில்லை என்பதே
    நிஜமாகிறது.

    உன்னை நிலவென்று ஒருமுறை
    கவிதை எழுதினேனே,
    இப்போது புரிகிறது
    நீ நிலவுதான்!

    சிறு கவிதைகள் – தொகுப்பு நான்கு

    உயிரெழுத்து நீயானாய்.
    மெய்யெழுத்து நானானேன்.
    இருவரும் சேர்ந்தோம்,
    உயிர்மெய் எழுத்தானது நம் காதல்!
    அதனால் தானோ,
    ஆய்(யு)த எழுத்தாய்
    உன் அப்பா!

    ——————————————————————————————-

    வாழ்வு முழுவதும் சுகம் தர,
    தாசி வாங்கும் பணம் போலே,
    வரதட்சணை.

    ——————————————————————————————-

    இடியை பார்த்து
    நடுங்காத இந்த நெஞ்சம்
    உன் இடையை பார்த்ததும்…..

    ——————————————————————————————-

    மனம் ஒரு குரங்குதான்.
    உன்னை மறக்க நினைக்கும் என் மனம்
    உன் நினைவுகளையும் நினைக்க
    மறப்பதில்லையே.

    ——————————————————————————————-

    என்னுயிர்
    உன்னுயிரோடு
    உறவாடி
    உயிர்தருகிறது
    ஓர் உயிர்க்கு.

    ——————————————————————————————-

    நீ என்னிடம்
    கனவிலாவது பேசுவாய் என்றுறங்கினால்
    கனவு கூட கனவாகியே போனது

    ——————————————————————————————-

    நான் தினமும்
    ரத்ததானம் செய்கிறேன்
    கொசுக்கடி .

    ——————————————————————————————-

    சிதைந்த சூரியன்
    உடைந்த வெண்ணிலா
    உதிர்ந்த விண்மீன்
    நனைந்த மேகம்
    இவை அனைத்தும்
    வானில் சாத்தியமென்றால்
    என் வாழ்வில்
    அவளும் சாத்தியம்

    ——————————————————————————————-

    ஆசிரியப்பா தெரியாது
    வெண்பா தெரியாது
    எதுகை மோனை தெரியாது
    மொத்தத்தில் இலக்கணமே தெரியாது
    இருந்தும் காதலித்துப்பார்
    உனக்கும் கவிதை எழுதத்தெரியும்.

    ——————————————————————————————-

    உன் கூந்தலில் குடியேற
    வாய்ப்பிழந்த பூக்கள் யாவும்
    தற்கொலை செய்தன
    தரையில் குதித்து

    ——————————————————————————————-

    உடலை
    உயிர் பிரிந்ததும்
    எரிப்பது வழக்கம்

    நீ
    என்னை பிரிந்தும்
    நான் இன்னும் பிணமாய்,,,,

    ——————————————————————————————-

    உள்ளத்திற்கும்
    உணர்வுகளுக்கும்
    ஏற்பட்ட உறவினால்
    கற்பமில்லாமல் பிரசவிக்கிறது
    என் கவிதை

    ——————————————————————————————-

    சிறு (சினிமாக்) கவிதைகள் – தொகுப்பு மூன்று

    நானெழுதிய மற்ற சிறுகவிதைகளை போலில்லாமல் இதில் தமிழ் சினிமா பெயர்கள் முடிவடையுமாறு ஒரு சிறு முயற்சி.  படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    எரிமலையை கூட
    பனிமலையாக மாற்றும்
    உன் பார்வையை தரிசிக்க
    பாதையில் காத்திருக்கிறேன்
    நீ வருவாயென.

    ——————————————————————————————-

    அந்திசாயும் ஒரு மாலையிலே,
    நாம் காதல் புரிந்த வேளையிலே,
    முத்தத்தால் எனை மூழ்கடிப்பாயென
    நினைத்துக்கூட பார்த்ததில்லை,
    உன்னை முதலாய்
    சந்தித்த வேளையிலே.

    ——————————————————————————————-
    ஆக்ராவில் இல்லையென்றாலும்,
    என் இதயத்தில் கட்டியிருப்பதால்,
    நானும்
    ஷாஜஹான்.

    ——————————————————————————————-

    காதல் கொண்டேன்.
    கவிஞனானேன்.

    ——————————————————————————————-

    காதல் கொண்டேன்
    கண்ணீர கொண்டேன்.

    ——————————————————————————————-

    பார்வைகளில் நீயெனை உரசிட
    பற்றியெரியும் காதல் தீ
    அனையும் முன்,
    உன்னைக்கொடு என்னை தருவேன்.

    ——————————————————————————————-

    நந்தவனத்தில் தொலைந்த
    பூக்களெல்லாம் புடைசூழ
    நடக்கிறதோர்
    பூமகள் ஊர்வலம்.

    ——————————————————————————————-

    மழைக்கு ஒதுங்கிய மரத்தடியில்,
    தனிமை என்னை பாடாய் படுத்த,
    உன் ஈரச்சேலை என்னுள் தீயை மூட்ட,
    முத்தமிட்டு அதை நீ அனைத்ததை
    மறக்கமாட்டேனென்
    நினைவிருக்கும் வரை.

    ——————————————————————————————-

    புகைப்பதை நிறுத்தச்சொல்லி
    நீ என்னுடன் பகை கொண்டபோது
    உடனே நானதை நிறுத்தினேனே,
    அது உனக்கு உணர்த்தியிருக்கும்
    நான் செய்தது
    காதலுக்கு மரியாதை.

    ——————————————————————————————-

    நான் மறக்கச்சொல்லியும்
    மறுக்கிறதென் இதயம்
    துடிப்பதற்கு,
    பூவே உனக்காக.

    ——————————————————————————————-

    வழக்கமான இரவென்றாலும்,
    வழக்கமான ஆசைகளோடு,
    இன்றும் போர்வைக்குள் பதுங்கினேன்.
    என்னை நனவில் காதலிக்காத நீ,
    கனவிலாவது காதலிக்க வருவாய்
    என்ற ஆசையுடன் கண்களை மூடி
    நினைத்தேன் வந்தாய்.

    ——————————————————————————————-

    ஆதரவாய் உன் தோள்சாயும் போது,
    ஆறுதலாய் உதிரும் உன் வார்த்தைகளுக்காக,
    என்றும் இருப்பேன்
    ப்ரியமுடன்.

    ——————————————————————————————-

    கஷ்டமான காலங்களில்
    மனம் சிக்கித்தவிக்கும் வேளைகளில்
    நான் கண்ணீர சிந்தும் நேரங்களில்
    உன் புன்னகையை
    பார்த்தாலே பரவசம்.

    ——————————————————————————————-

    பிடியின்றி விழுந்த குழி
    புதைக்குழி என்றறிந்தும்
    உன் இதயக்குழி என்பதால்
    எழுந்துவர மனமில்லையென்
    ப்ரியமானவளே.

    ——————————————————————————————-

    என் உயிரைக் கொல்லாமல்
    உடலில் மின்சாரம் பாய்கிறது நீயென்
    கன்னத்தில் முத்தமிட்டால்.

    ——————————————————————————————-

    கெஞ்சிக்கேட்டும் கிடைக்காத,
    காலில் விழுந்தும் கிடைக்காத,
    காதலியின் முத்தம்
    எதிர்பாராமல் கிடைத்தால்
    துள்ளாத மனமும் துள்ளும்.

    ——————————————————————————————-

    ஆண்களின் இதயங்கள் எரிக்கப்பட
    பெட்ரோல் தேவையில்லை.
    தீ கூட தேவையில்லை.
    பெண்களின்
    பார்வை ஒன்றே போதுமே.

    ——————————————————————————————-

    தோற்றம்: http://www.cpraveen.com/suvadugal/tamil-short-poems-part-three

    சிறு கவிதைகள் – தொகுப்பு இரண்டு

    பெண்கள் பூவென்றிருந்தேன்
    என் இதயம் குத்தப்படும் வரை.

    ரோஜாவை அழகாக படைத்தவன்
    முள்ளையும் மறக்கவில்லை!

    ——————————————————————————————-

    காதலன்களை ஒன்று கூட்டுங்கள்.
    காவிரியில் தண்ணீர் இல்லையாம்
    கண்ணீராவது ஓடட்டும்!

    ——————————————————————————————-

    தமிழ்நாட்டிற்கு
    புதிய மின்சார விநியோகம்
    உன் விழிகளிலிருந்து!

    ——————————————————————————————-

    நான் தவமிருந்தது உண்மைதான்
    உன் வரம் கிடைக்குமென!

    சாபம் கொடுத்துவிட்டாயே
    கடைசிவரை கண்ணீரென!

    ——————————————————————————————-

    உனக்கும்
    நல்ல மனதுதான்
    உன் நினைவுகளையாவது
    காதலிக்க விட்டாயே…

    ——————————————————————————————-

    தடுக்கித்தான் விழுந்தேன்.
    அவள் நெஞ்சம்,
    புதைக்குழி என்றறியாமல்….

    ——————————————————————————————-
    தாடி கூட,
    சரியாக முளைக்கவில்லை,
    தேவதாஸ் ஆகிட!

    ——————————————————————————————-

    தமிழ்நாட்டில்,
    மின்சார தட்டுப்பாடு
    அவள் கண் சிமிட்டும்போது.

    ——————————————————————————————-

    விடியும் என்றுதான்
    தினமும் உறங்குகிறேன்!

    ——————————————————————————————-

    மின்னி மின்னி
    மறையும் மின்மினிப்பூச்சி
    உன் விழி!

    ——————————————————————————————-
    நீ தீண்டினாலும்
    சுகம்தான்!
    திட்டினாலும்
    சுகம்தான்!

    ——————————————————————————————-

    காதல் வலையே
    பிடியில்லாமல் விழுந்துவிட்டேன்
    என்று பீற்றிக்கொள்ளாதே
    அவளை
    பிடித்துத்தான் விழுந்தேன்

    ——————————————————————————————-

    என் இதயமாளிகையில்
    இருக்கும் என்னவளுக்கு
    மூச்சு திணறுகிறதாம்
    புகைப்பதை நிறுத்திவிடுகிறேன்!

    – பிரவீன் குமார் செ

    http://www.cpraveen.com/suvadugal/tamil-short-poems-part-two

←Older