Archive for the சினிமா Category

    எங்கேயும் எப்போதும் படமும் – மனதை உறைய வைக்கும் ஒரு நிஜமும்

    engayum eppothum review

    அவன் பெயர் ஆனந்தராஜ். அப்போது அவனுக்கு இறுபத்தி மூன்று வயது இருக்கும். அவனுக்கு அம்மா கிடையாது. அப்பா அவனை சிறுவயதிலேயே கைவிட்டு விட்டு ஒதுங்கி விட்டார். தன்னுடைய தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்து பள்ளிப்படிப்பை முடித்த அவன், நெய்வேலியில் உள்ள அவனது அக்கா வீட்டில் தங்கி என்னுடன் இளங்கலை பட்டம் படித்தான்.

    உடன் படித்த நண்பர்கள் யாருக்கும் இது தெரியக்கூடாது என்று நினைத்தானோ என்னவோ தன்னுடைய தாத்தாவை காட்டி அவர் தான் தன்னுடைய அப்பா என்றே கடைசி வரை கூறிக்கொண்டு இருந்தான். என்னிடம் உட்பட. படிப்பிலும் கெட்டிக்காரன் என்று சொல்ல முடியாது ஆனால் தேர்வின் போது பின்னால் அமர்ந்து இருக்கும் நண்பர்களுக்கு எல்லாம் அவன் தான் தெய்வம். எப்படியும் அறுபது, எழுபது மார்க் வாங்கும் அளவுக்கு அவனுடைய பதில் தாளில் விஷயம் இருக்கும்.

    எல்லோரிடமும் எளிதாக ஒத்துப்போகும் சுபாவம் உள்ளவன் அவன். அந்த வயதிற்கே உரிய குறும்பு அவனுக்கு இல்லாமல் இல்லை. இரவு குரூப் ஸ்டடி என்றாலும் அந்த கூட்டத்தில் அவன் இருப்பான், கல்லூரி கட் அடித்து விட்டு ஊர் சுற்றினாலும், சினிமாவுக்கு போனாலும் அவர்களுடனும் அவன் இருப்பான்.  மூன்று வருட படிப்பு முடிந்ததும் அனைவரும் அவர்களுடைய திசையை நோக்கி பிரிந்தோம். அவன் திருவண்ணாமலை அருகில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.சி.ஏ முதுகலை பட்டம் படிக்க சேர்ந்து கொண்டான்.

    அப்போது வயது முதிர்ச்சி அவனை பக்குவப்படுத்தி இருந்தது.  அவனிடைய பள்ளிபடிப்பு தாத்தாவின் உதவியுடன்.  கல்லூரி படிப்பு அக்காவின் உதவியுடன். அடுத்து?  இந்த கேள்வி அவனுக்கு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு எப்போதாவது அவனை நேரில் பார்க்கும் போதும், போனில் பேசும் போதும் அவனுள் அந்த வித்யாசத்தை உணர்த்தேன். அவன் முன்பு இருந்த ஆனந்தராஜாக இல்லை இப்போது. அவன் கண்களில் கனவு இருந்தது.

    நண்பர் கூட்டம், சினிமா, ஊர் சுற்றுவதை முடிந்தவரை தவிர்த்தான். இரவு பகலாக படித்தான். நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்க வேண்டும் என்ற வெறி அவனுக்கு இருந்திருக்க வேண்டும். அதுவே அவனை முற்றிலும் மாற்றி இருந்தது. படிப்பு முடிந்தது. எதிர் பார்த்த மாதிரி நல்ல மார்க்குகள் பெற்று இருந்தான். கை நிறைய சம்பளம் கூடிய வேலை ஒன்று சென்னையில் அவனுக்கு காத்திருந்தது. அவனுடைய தாத்தாவிற்கு, பாட்டிக்கும் அளவிட முடியா சந்தோஷம். அவனுடைய அக்காவிற்கு பெற்ற தாயின் ஸ்தானத்தை அடைந்து விட்ட ஒரு உணர்வு. இனிமேல் அவனுக்காக யாரும் கவலைபட வேண்டாம், அவன் முன்னுக்கு வந்து விடுவான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.

    சிதம்பரம் அருகே உள்ள காட்டு மன்னார் கோவில்தான் அவர்களது சொந்த ஊர்.  வேலைக்காக சென்னையில் நண்பர்களுடன் தங்குவதற்கு வீடு எல்லாம் பார்த்தாயிற்று. இப்போது தன் சொந்த ஊரில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்று இருந்தான். வேலையில் சேர இன்னும் ஒரு வாரம் இருந்த சூழ்நிலையில் நண்பர்கள் அவனை சென்னைக்கு வர வற்புறுத்தினர்.   வேலைக்கு சென்று விட்டால் மீண்டும் அடிக்கடி இங்கு வர முடியாது, அகவே அதுவரை தன் தாத்தா பாட்டியுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என அவன் போக மறுத்தான்.

    மறுநாள் விடியற்காலை எதிர்வீட்டு நண்பர்கள் ஆனந்த்ராஜின் வீட்டு கதவை தட்டினர். அவர்கள் அண்ணன் தம்பி இருவர். அண்ணன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் மருத்துவம் படித்துக்கொண்டு இருந்தான். தம்பி இன்ஜினியரிங் படித்துக்கொண்டு இருந்தான். அண்ணனுக்கு அன்று பட்டமளிப்பு விழாவாம், இவனையும் உடன் வர அழைத்தனர். முதலில் வர மறுத்தவன், பிறகு அவர்களில் வற்புறுத்தலில் பேரின் வர சம்மதித்தான். அதுதான் அவன் வாழ்க்கையில் செய்த மிகவும் மோசமான முடிவு என அவன் உணர்திருக்கவில்லை.

    அப்போது வெளியில் காரில் அந்த இருவரும் ரெடியாக இருந்தனர்.  இவன் அவசரமாக குளித்து விட்டு, வீட்டு வாசலில் கட்டி இருந்த கொடியில் துண்டையும், தன்னுடைய பனியனையும் காயவைத்துகொண்டு இருந்தான். அதற்குள் ஹாரன் சத்தம் அவனை மேலும் அவசரபடுத்தியது. அவனுடைய தாத்தாவிற்கு அவன் அவர்களுடன் செல்வதில் விருப்பமில்லை.  ஒரு வழியாக அவரை சமாதனபடுத்திவிட்டு, பாட்டியிடம் சொல்லிவிட்டு மீண்டும் ஹாரன் சத்தம் வருவதற்குள் காருக்குள் நுழைந்தான். நேரம் அப்போது காலை ஆறு மணியை கடந்து இருந்தது.  சிதம்பரத்தை நோக்கி கார் சர்ரென பறந்தது. அடுத்து நிகழப்போகும் அசம்பாவிதத்தை பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    அது ஒரு குறுகலான கிராமத்து சாலை. கார் மின்னல் வேகத்தில் சென்று கொண்டு இருந்தது. அன்று டாக்டர் பட்டம் பெறப்போகும் அண்ணன் தான் காரை ஒட்டிக்கொண்டு இருந்தார். அருகே அவரது தம்பி. பின்னால் இவன். மெதுவாய் போனாலே சரியான நேரத்திற்கு போய் விடலாமே எதற்காக இவ்வளவு வேகம் என கூறி வேகத்தை குறைக்கைச்சொல்லி இவன் எச்சரித்து இருக்கிறான். அவன் கேட்கவில்லை. ஊரில் தெரிந்தவர்கள் பல பேர் அப்போது இவர்களின் வேகத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

    சிறு தூரம் தான் சென்றிருப்பார்கள். ஒரு திருப்பத்தில் கார் வளையும் போது எதிரில் திடிரென ஒரு லாரி. அது போதுமான அகலம் கொண்ட சாலை இல்லை. இடது புறம் சைக்கிளில் ஒரு வயதானவர் வேறு சென்று கொண்டிருந்தார். ஆ….. “டேய்.. லாரி டா…”….  “இந்த பக்கம் திருப்பு டா…”  “சீக்கிரம் ப்ரேக் போடு டா”… என்ன செய்வது என்று சிந்திக்கக் கூட வாய்ப்பளிக்கவில்லை அவர்களின் வேகம். டட்…..டா..மா…ர்… .

    கார் இப்போது லாரியின் அடியில் சிக்கி அப்பலமாய் நொறுங்கி இருந்தது. அது பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லாத கிராமத்து பகுதி. அருகில் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும், கிராமத்தில் இருந்தவர்களும் அனைவரும் சில நிமிடங்களில் கூடி விட்டனர். காரின் முன்பகுதி நொறுங்கி போனதால் முன்னால் அமர்ந்து இருந்த சகோதரர்கள் இருவருக்கும் இடுப்புக்கு கீழே உடல்கள் நசுங்கி போய் இறந்திருந்தனர். பின்னால் அமர்ந்து இருந்த ஆனந்தராஜ் அதிஷ்டவசமாக உயிருடன் தான் இருந்தான். அவனுக்கு பெரிதாய் அடி பட்ட மாதிரி அவர்களுக்கு தெரியவில்லை. கார் கதவு நசுங்கி போய் இருந்ததால் அவர்களால் அவனை வெளியே கொண்டு வர இயலவில்லை.  தனக்கு முன்னால் நண்பர்கள் அகோரமாய் இருப்பதை கான முடியாமல் தன்னை சீக்கிரம் வெளியே எடுக்குமாறு கெஞ்சிக்கொண்டு இருந்தான்.

    அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு கார் கதவு பிரிக்கப்பட்டது. உள்ளே இருந்து அவனாகவே எழுந்து வெளியே வந்தான்.  அதற்குள் அவரது உறவினர் ஒருவர் தகவல் அறிந்து ஜீப்பில் வந்து இருந்தார். கண்ணில் கண்ணீர் மல்க அவரிடம் நண்பர்களை காப்பாற்றுங்கள் என்றான். அவர்கள் இறந்து விட்டார்கள் என்று அனைவருக்கும் அப்போது தெரிந்ததால் இவனை பற்றி விசாரிக்க ஆரமித்தார்கள்.  “உனக்கு ஒன்றும் ஆகவில்லையே” என்று கேட்டார் அந்த உறவினர். “எனக்கு ஒன்றும் இல்லை, தலையில் தான் அடி பட்டது போல் இருக்கிறது. சிறிது வலி அவ்வளவுதான்” என்றான்.

    அவனை அவசரமாக  ஜீப்பில் ஏறச்சொல்லி மருத்துவமனைக்கு அவனது உறவினர் மற்றும் சிலருடன் அனுப்பி வைத்தனர். அவனாகவே சென்று ஜீப்பில் ஏறி அமர்ந்தான். மருத்துவமனைக்கு சென்று கொண்டு இருக்கும் போது விபத்து நடந்தது குறித்து அவன் கூறிக்கொண்டு வந்தான். திடீரென தலை இப்போது மிகவும் வலிக்கிறது என்று தலையை பிடித்துக்கொண்டான். அப்போது தான் அவனது உறவினர் அவனது காதிலும், மூக்கிலும் ரத்தம் வழிவதை கண்டு திடுக்கிட்டார். சில நொடிகள் தான் ஆனது, அதற்குள் தனக்கு மயக்கம் வருவதாக கூறி அப்படியே ஜீப்பில் சரிந்து விழுந்தான். “அவனுக்கு ஹெட் இஞ்சுரி, இங்கு வரும்முன்னே இறந்து விட்டான்” என டாக்டர்கள் ஒரு வரியில் முடித்துக்கொண்டு விட்டனர்.

    நான் அவன் வீட்டிற்கு சென்றடைந்த போது மாலை இருட்டி இருந்தது. வாசலில் நண்பர்கள் உறவினர்களில் ஓலத்தினிடையே கண்ணீரில் நனைந்து கொண்டு இருந்தது ஆனந்தராஜின் சடலம். உடலில் எங்கும் காயம் இல்லை. முகம் மட்டும் வீங்கி அவனுடைய முகத்தோற்றத்தை மாற்றி இருந்தது. அருகில் உள்ள கொடியில் அவன் காலை உலர்த்தி விட்டுச்சென்ற துண்டும் பனியனும் இன்னும் ஈரம் உலராமல் காற்றில் ஆடிக்கொண்டு இருந்தது.

    அவனுடைய தாத்தா விரக்தியில் தூரத்தில் வானத்தை பார்த்தவாறு தனியாக அமர்த்து இருந்தார். அவனுடைய பாட்டிக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை. அவனுடைய அக்கா அவன் சடலத்தின் அருகே அமர்ந்து கடவுளிடம் பேசிக்கொண்டு இருக்கும் நிலையில் இருந்தார்.   அவர் அப்போது கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் நிச்சயம் கடவுளிடம் பதில் இருக்க வாய்ப்பில்லை.  ஆனந்த ராஜின் கனவுகள், ஆசைகள், லட்சியங்கள் அனைத்து அவன் உடலோடு சேர்த்து அன்றிரவே ஏறியூட்டப்பட்டது.

    ############################################

    நாம் தினமும் நாளிதழ்களில், தொலைகாட்சிகளில் பார்க்கும் விபத்துகள் அனைத்தும் வெறும் செய்திகளாகத்தான் தெரிகிறது. ஆனால் நமக்கு வேண்டியவருக்கு நிகழும் பொழுது தான் அது வெறும் செய்தி அல்ல, அது ஒரு ஈடு செய்ய முடியா ஒரு இழப்பு என்ற வலியை உணர்கிறோம். அப்படி ஒரு வலியை உணரச்செய்யும் படம் தான் “எங்கேயும் எப்போதும்”. படம் பார்த்துக்கொண்டு இருந்தபோது எனக்கு ஞாபகப்படுத்திய சம்பவம் தான் மேலே தான் குறிப்பிட்டது.

    “வேகமாக போகதப்பா.. பாத்து பொறுமையா, நிதானமா போ”ன்னு அம்மா பாசத்தோடு சொல்லும் போதும், “வண்டி ஓட்டும் போது செல்போன் பேசாதேனு” அப்பா கண்டிக்கும் போதும் கேட்காத நம்மை, படாரென  ஓங்கி செவிலில் அறைந்து எச்சரிக்கிறது இந்த “எங்கேயும் எப்போதும்”.

    Share

    மங்காத்தா அதிரடி ஆட்டம் – விமர்சனம்

    Mankatha review

    அஜித்தின் ஐம்பதாவது படம் தான் இந்த மங்காத்தா.  தொடர் தோல்விகளால் ஒரு வெற்றியை கொடுத்தே தீர வேண்டிய சூழ்நிலை. அதற்காக வழக்கம் போல் இந்த படத்துல ஹீரோ ஊரையோ அல்லது நாட்டையோ காப்பாத்த கிளம்பல. பணம், பெண் என்று பித்து பிடித்து அலையும் ஒரு நெகடிவ் கதாபாத்திரம். “Strictly No Rules” என்று அஜித் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அனைத்து விதிகளையும் உடைத்து மங்காத்தா விளையாடி அதில் ஜெயித்தும் இருக்கிறார் வெங்கட் பிரபு.

    ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் சூதாட்டத்தில் ஈடுபடுத்தப்படும்  ஐநூறு கோடி ருபாய் பணத்தை தன் வசாமாக்க திட்டம் போட்கிறார் ஜெயப்ரகாஷ். அதை கொள்ளை அடிக்க  புறப்படுகிறது வைபவ், பிரேம் ஜி என்று நால்வர் கொண்ட கும்பல். இதை தெரிந்துக்கொண்டு அவர்களிடம் ஐந்தாவதாக சேர்கிறார் விநாயக் என்ற சஸ்பென்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியான அஜித்.

    அந்த ஐந்து பேரும் திட்டம் போட்டவாறு ஐநூறு கோடியையும் கொள்ளையடித்து விடுகின்றனர் ஆனால் அதை பங்கிட்டு கொள்வதில் தான் பிரச்சனை. பணத்தாசை காரணமாக அனைவரையும் கொன்று அதை ஒரே பங்காக சுருட்ட நினைக்கிறார் அஜித். ஆனால் பணம் அவருக்கே கிடைக்காமல் காணாமல் போகிறது. அதை தேடி தான் மீதி கதை.. இந்த கும்பலை தேடிபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுன். கூடவே எதிர்பாராத க்ளைமாக்ஸ்.

    “எவ்வளவு நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது”னு படத்தோட ட்ரைலர்லேயே கதையை சொல்லிட்டாங்க. அஜித் முதற்கொண்டு படத்தில் வரும் அனைவருமே கெட்டவர்கள் தான்.இவராவது நல்லவராக வராரேனு ஒருத்தரை நினைத்தால் அட அவரும் கடைசியில கெட்டவர் தான். அந்த ஐந்து பேரில் அஜீத்திற்கு மட்டும் முக்கியம் கொடுக்காமல் அவரும் அதில் ஒருவராகவே காண்பித்து கதையை நகர்த்தியது அருமை. அதே போல் பணம் காணாமல் போகும் போது அதை யார் எடுத்திருப்பார்கள் என்று அந்த கதாபாதிரங்களுக்கு எழும் குழப்பங்களும், கேள்விகளும் நமக்கும் எழாமல் இல்லை.

    mankatha trisha lakshmi rai

    அஜீத்தின் இது நாள் வரைய எல்லா படங்களையும் சில நொடிகள் ஒரே காட்சியில் ஓட விட்டு “அஜித் 50” என்று படம் தொடங்கும்போதே அதிரடி. விசில் பறக்கிறது.  அடுத்த மே மாதம் வந்தால் தனக்கு நாற்பது வயது என்ற கூறி நரைத்த முடியுடன் இந்த படத்தில் அஜித் கொஞ்சம் அசத்தலாக வருகிறார். முதல் பாதியில் தனியாக செஸ் விளையாடி கதையை நரெட் செய்யும்போது பின் பாதியில் பணத்தின் மேல் தனக்கு உள்ள பைத்தியத்தை வெளிபடுத்தும் காட்சிகளிலும் மிகச்சிறந்த பர்பார்மென்ஸ்.

    இந்த படத்துக்கு அஜித் வாய்க்குள்ளேயே சென்சார் போர்டு உறுப்பினர்கள் ஒக்காந்து இருந்தாங்க போல. அவர் வாயை திறந்தார்னாலே வெறும் பீப்… பீப்.. சத்தம் தான். அவ்வளவு மோசமான கெட்ட வார்த்தைகள். உதட்டசைவில் அதை புரிந்து கொள்கிறவர்கள் கைதட்டி ஆற்பரிக்கிரார்கள். புரியாதவர்கள் எரிச்சலுடன் முழிக்கிறார்கள். படத்தில் திரிஷா, ஆண்ட்ரியா மற்றும் அஞ்சலி இருந்தும் படத்திற்கு தேவை இல்லாத கதாபாத்திரங்கள். ஆனால் லட்சுமிராய் கொஞ்சம் பயன்ப்பட்டு இருக்கிறார்.

    அஜித் திரிஷா காதலே இந்த கதைக்கு தேவையில்லாத போது அவர் அதற்கு அழுவதும், ஒரு சோக பாட்டும் நம் பொறுமையை சோதிக்கிறது. சோக பாடல் ஆரமித்தபோது எங்கே இன்னும் யுவன் சங்கர் ராஜாவை காணோமே என்று யோசிக்க ஆரமித்த போது கரெக்டாக வந்து அட்டென்டன்ஸ் போட்டு விட்டார். ஆனால் இரண்டு குத்து பாடல்களை தவிர வேறு ஏதும் இதில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. வழக்கம் போல் பின்னனி இசை கலக்கல்.

    ajith-premji-vaibhav-veer-mankatha-still

    வெங்கட் பிரபுவின் படத்தில் வழக்கம் போல் வரும் அத்தனை சகாக்களும் இந்த படத்திலும். இளைஞர்களை டார்கெட் செய்யும் வசனங்கள் மூலம் நிறைய காட்சிகளில் கைதட்டல்கள் பெறுகிறார். ஒரு பாடலில், அஜித் மற்றும் த்ரிஷா நடனமாட, வீட்டின் உட்புறங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே வருவது மிகவும் புதுமையான, ரசிக்கும்படியான முயற்சி. வழக்கம் போல் பிரேம்ஜி இந்த படத்திலும் மற்ற திரைப்படங்களின் வசனம் பேசியே வருகிறார். அவ்வப்போது எரிச்சல் ஊட்டினாலும் பல இடங்களில் டைமிங் வசனத்தால் சிரிக்க வைக்கிறார். உதரணமாக “மனுஷன் கண்டு புடிச்சதுல உருப்படியானது ரெண்டே ரெண்டு தான்.. ஒன்னு சரக்கு… இன்னொன்னு முறுக்கு.” என்று சொல்லும்போது அரங்கமே கைதட்டலில் அதிர்கிறது.

    படம் முடிந்து என்டு கார்டு ஓடும்போது அஜித் செய்யும் லூட்டிகள் கொஞ்ச நஞ்சமில்லை. அதில் தனியாக ஒரு நகைச்சுவை குறும்படம் பார்த்த அனுபவம் இருந்தது. மொத்தத்தில் இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படம். அஜித் ரசிகர்களுக்கு இது நிச்சயம் கொண்டாட வேண்டிய படம்

    Share

    என் பார்வையில் தெய்வத்திருமகள் – தரிசிக்க வேண்டியவள்

    deiva thirumagal

    ரிலீசான முதல் நாள் காலையிலேயே, ப்ரீமியர் ஷோவில், சென்னை சத்தியம் திரையரங்கில் தெய்வத்திருமகள் திரைப்படத்தை பார்த்தேன். டைரக்டர் விஜய் அவர்கள் பிரத்தியேகமாக திரையிட்ட காட்சியில் ஓசியில் பார்த்ததால்  அதை விமர்சனம் பண்ணுவது சரியல்ல என உள்ளுக்குள்ளே ஒரு உணர்வு. படம் வந்து பத்து நாள் ஆகிவிட்ட நிலையில்,  அதன் பாதிப்பில் இருந்து இன்னும் மீளாதவனாய் அதை பதிவு செய்தே ஆகவேண்டும் என இப்போது எழுதத்தொடங்குகிறேன்

    நிலா.. நிலா வேணும்… என மன நலம் பிறழ்ந்த விக்ரம், நிலாவை தேடி சென்னையில் அலைவதாக கதை தொடங்குகிறது.   யார் அந்த நிலா? எதற்கு இவர் நிலாவை தேடுகிறார்? அதற்கு விடை இடைவேளையில். அவர்கள் இருவருக்கும் நடக்கும் பாசப்போரட்டம் தான் கதை. கடைசியில் விக்ரம் அந்த நிலாவை கண்டுபிடித்து சேருகிறாரா இல்லையா? அதுதான் முடிவு.இப்படி ஒரு கதைக்கருவை வைத்துக்கொண்டு அதில் பார்வையாளனை முடிந்த வரையில் உருக வைத்து, சிலிர்க்க வைத்து, பரிதவிக்க வைத்து சிரிக்க வைத்து, அழ வைத்து வைத்து, கடைசியில் மனதில் ஒரு பாரத்தை ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைக்க முடியுமென்றால், அதன் இயக்குனர் நிச்சயம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நபர்.

    படத்தின் சில காட்சிகளை நான் பார்த்துக்கொண்டு இருந்தபோது என் உடல் சிலிர்த்து போவதை நான் உணர்ந்தேன். மூன்று முறை என்னை அறியாமல் என் கண்கள் கலங்கியது. சத்தியமாய் நம்புங்கள், படம் முடிந்து வெளியே வந்து வெளிச்சத்தில் பார்த்தால்  ஜீன்ஸ் போட்ட பெண்கள் முதல், சுரிதார் மாட்டிய தாய்க்குலங்கள் வரை கண்ணில் கண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டு இருந்தது.

    அதனால்  இது வழக்கம் போல டிராஜிடி உள்ள அழுகாச்சி படமா என்று நீங்கள் நினைத்தால் அது தான் இல்லை. இது முற்றிலும் ஒரு எமோஷனல் படம். டிராஜிடிக்கும் எமோஷனுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. தான் உயிருக்கு உயிராய் நேசித்த காதலியை, ஒருநாள் தன் கண்ணெதிரே கொடூரமாய் கொலை செய்யப்படுவதை காண்பதற்கும், அவளை வேறொருவன் மணப்பதை காண்பதற்கும் உள்ள வித்யாசம் தான் அது. நிச்சயம் இந்த படம் டிராஜிடி படம் அல்ல ஆனால் உங்கள் மனதை கனக்கச் செய்வாள் இந்த தெய்வத்திருமகள்.

    ஐந்து வயது சிறுவனுக்கு இருக்கும் மனவளர்ச்சி தான் இதில் கிருஷ்ணாவாக நடித்த விக்ரமிற்கு. முதல் காட்சியிலே தன்னுடைய கதாபாத்திரத்தை கட்சிதமாக அனைவருக்கும் உணர்த்தி விடுகிறார். எனக்கு ஏற்கனவே அப்படிப்பட்ட நிலையில் ஒரு நபரை சிறு வயது முதல் தெரியும் என்பதால், விக்ராமின் கதாபாத்திரம் என்னை மிகவும் ஆச்சர்யப்படுதியது. அவர் நடப்பது முதல் பேசுவது ,சிரிப்பது வரை அனைத்தும் உண்மையான மன வளர்ச்சி குன்றிய ஒரு நபரை காண்பது போலவே இருந்தது. எங்கேனும் இம்மியளவு அவர் நடிக்க முயற்சித்து இருந்தால் கூட  படம் வேறு திசையில் தடம் புரண்டு போய் இருக்கும்.

    deivathirumagal

    கனக்கட்சிதாமாக கிருஷ்ணா கதாபாத்திரதித்லேயே பொருந்தி வாழ்ந்து இருக்கிறார் விக்ரம்.  படம் ஆரம்பித்து கடைசி வரை அதில் நடித்தது விக்ரம் தானா என யோசிக்க தோன்றுகிறது. இந்த பாத்திரத்திற்கு வேறு யாரேனும் பொருந்துவார்களா என்று மனதிலேயே ஒவ்வொரு நடிகரை வைத்து யோசித்து பார்த்தேன். விக்ரமை தவிர கண்டிப்பாக யாருமில்லை. அதுவும் உடல் நிலை சரியில்லாத குழந்தைக்கு மருந்து வாங்கி கொடுத்து விட்டு, அந்த அறையில் தானாகவே சென்று நுழைந்து கொள்வதும், உச்சம்.

    இந்த படத்தின் அடுத்த முக்கிய கதாபாத்திரம் நிலா என்ற சாரா. அது குழந்தை இல்லை, குட்டி தேவதை. அவளின் பெற்றோர் கடவுளிடம் வாங்கிய வரம் தான் அவள்.   இந்த வயதில் இப்படி ஒரு அசாதாரண நடிப்பு ஆச்சர்யப்படுத்துகிறது. விக்ரமிடம் கோபித்துக்கொண்டு முகத்தை சுளிக்கும்போதும், வகுப்பறையில் கையெடுத்து கும்பிட்டு விக்ரமை வீட்டிற்கு போகச்சொல்லும் போதும், கிளைமாக்சில் விக்ரமை பார்த்து நடன அசைவுகளோடு காட்டும் முகபாவங்களும் வார்த்தைகள் இல்லை. அந்த குழந்தையை நான் நேரில் பார்த்த போது, செம க்யூட்.

    முதன் முறையாக அனுஷ்கா இதில் உண்மையாகவே நடித்து இருக்கிறார். படத்தில் வக்கீலாக விக்ரமிற்காக அவர் போராடுவது தான் கதாபாத்திரம். வழக்கமான அனுஷ்கா இதில் இல்லை. அப்பாவிடம் பேசாமல் இருந்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குவதும் போல காட்டி இருப்பது அருமை! எதிரணி வக்கீலாக வரும் நாசரும் கொஞ்சமும் சளைக்கவில்லை. க்ளைமாக்ஸ் காட்சியில் அவரின் அந்த முகபாவம் போதும், அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விட.

    ஆனா ஒன்னு வச்சுகோங்க. உங்களுக்கு இந்த படம் பார்க்கும் வரையில் ஆவின் பால், பசும் பால் புடிக்கிதோ இல்லையோ  நிச்சயம் அமலா பால் புடிக்கும். மைனாவிற்கு பிறகு அவர் நடிக்கும் படம் இது. அந்த முட்டை கண்ணை வைத்து செப்படி வித்தை செய்து அனைவரையும் வசீகரித்து இருக்கிறார். ஸ்வேதாவாக அவர் நடித்திருக்கும் அந்த பள்ளிக்கூட கரெஸ், கரெஸ் கரெஷ்பாண்டென்ன்ட் பாத்திரம் கலர்புல்.

    Deiva-Thirumagal review

    சந்தானதிற்கு கூட அருமையான கதாபாத்திரம். அமைதியாக ஆர்பாட்டம் இல்லாமல் ரசிக்கும்படி காமெடி செய்து இருக்கிறார்.  “நான் லாயர் இல்லை டீக்கடை நாயர்” என்று திரையரங்கில் முதல் சிரிப்புச்சத்தத்தை தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு தொடர்ந்து காமடி தான். எம்.எஸ்.பாஸ்கரும் தன் பங்கிற்கு கலக்கி இருக்கிறார்.  இப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுமே சும்மா வந்து போவது இல்லை. செதுக்கி இருக்கிறார்கள். ஒரு மூளைவளர்ச்சி குறைவுடைய ஹீரோவை வைத்து இவ்வளவு காமடி படத்தில் பண்ண முடிந்திருக்கிறது என்றால் ஆச்சர்யம்தான். அதற்கு டயலாக் நன்றாக உதவி இருக்கிறது.

    படத்திற்கு உயிரோட்டமே ஜீ.வி.பிரகாஷின் இசையும், நீரவ் ஷாவின் காமிராவும் தான். ஊட்டியை அப்படியே செதுக்கி காமேரவில் எடுத்து வந்துவிட்டார். திரையரங்கில் உள்ள ஏ.சியில் அமர்ந்து பார்க்கும் போது ஜில்லுனு ஊட்டி குளிரில் பார்க்கும் ஒரு உணர்வு. பாடல்களும் பின்னணி இசையும் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன.   படம் பார்ப்பதற்கு முன்பு நான் ஒரு முறை தான் கேட்டேன், எதுவும் பிடிக்கவில்லை. ஞாபகமும் இல்லை. ஆனால் படம் பார்த்த பிறகோ அதன் பாடல்களை தினமும் கேட்கிறேன். நா.முத்துக்குமார் வரிகள் மனதை கொள்ளை கொள்ளுகின்றன. அதுவும் அந்த ஆரிரோ பாடலும், தீம் இசையும் ஒவ்வொரு முறை கேட்க்கும் போது மனதை என்னவோ செய்துதொலைக்கிறது. உடனே கிருஷ்ணா, நிலா வந்து போகிறார்கள். .

    கிருஷ்ணா வந்தாச்சு, நிலா வந்தாச்சு என்று விக்ரமும் நிலாவும் விளையாடுவது கவிதை. எல்லா குழந்தைகளும், சிறு வயதில் ,உலகத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் வருகையில், பார்ப்பதை எல்லாம் காட்டி “அது என்ன”, “இது எப்படி” என்று கேள்விகள் கேட்டு துளைத்து எடுக்கும். நானும் இருந்திருக்கிறேன். நீங்களும் இருந்திருப்பீர்கள். இது இயற்கை. அதே போல் இந்த குழந்தையும், இன்னொரு குழந்தையான கிருஷ்ணாவிடம் கேள்வி கேட்கும் போது வரும் பதில் எப்படி இருக்கும்? “அந்த மரம் ஏன்பா பெருசா இருக்கு?”. “ஏன்னா அவங்க அப்பா பெருசா இருக்குல்ல”. “காக்க என்பா கறுப்பா இருக்கு?” “ஏன்னா அது வெயில்லையே சுத்துது இல்ல அதான்”…. வாவ் ப்ரில்லியன்ட் விஜய்.. ப்ரில்லியன்ட்!!!!

    இயக்குனரின் இன்னொரு புத்திசாலித்தனம் உள்ள காட்சி சொல்ல வேண்டும் என்றார். நாசரின் ஜூனியர், ரெஸ்ட் ரூமில், யுரிநெல்சில், சிறு நீர் கழித்தவாறு நாசர் பேசுவதை ஒட்டு கேட்பார். சந்தேகம் வரமால் இருக்க, அவர்கள் பேசும் போது “போவதை” நிறுத்தியும், அவர்கள் அமைதி ஆகும் போது “போவதை” தொடருவதும் பின்னணி சப்தத்தில் உணர்த்தி இருப்பார்கள். இந்த சின்ன விஷயத்திற்கு கூட மெனக்கெடல்!

    இப்படத்தை பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் இணையத்திலும், மீடியாவிலும் உலவுகின்றன. அது அனைத்தையும் உற்று கவனித்தால் அது இந்த படத்தின் உருவாக்கத்திலாகத்தான் இருக்குமே தவிர இந்த படத்தின் தரத்தில் இருக்காது.  விக்ரமையும், சாரவையும் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.  குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது இத்திரைப்டத்திற்கு நிச்சயம். ஆனால் அது அந்த குழந்தை சாராவிற்கா அல்லது விக்ரமிற்கா என்று தான் தெரியவில்லை.  மொத்தத்தில் தெய்வத்திருமகள் கண்டிப்பாக ஒவ்வொருவரும் தரிசிக்க வேண்டியவள்.

    Share

    அவன் இவன் – என் பார்வையில் (விமர்சனம்)

    avan ivan arya vishal

    வழக்கத்துக்கு மாறான பாலா படம் இது. படம் முழுக்க சிரிக்க வைக்க வேண்டும் என எடுக்கப்பட்ட படம். முதல் முறையாக வருடகணக்கில் இழுக்காமல் குறுகிய காலத்தில் பாலா எடுத்த படம். வித்யாசமான கதாபாத்திரத்தில் விஷால் நடித்த படம். இவை தான் “அவன் இவன்” திரைப்படத்தை பற்றி  பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிய விஷயம். ஆனால் படத்திலோ…

    குறுகிய காலத்தில் எடுக்க வேண்டும் என்பதற்காக பாலா கதையை சுத்தமாக யோசிக்க மறந்துவிட்டார். கதையே இல்லாத போது எதை நோக்கியும் செல்லாத திரைக்கதையில் அவருக்கு பெரிதாய் மெனக்கெடல் தேவைப்படவில்லை. படம் முழுக்க சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக கீழ் தரமான வசனங்களாலும், அவரின் முந்தைய திரைப்படத்தின் கதாபாத்திரங்களை ஒப்பேற்றியும் எடுத்திருப்பதை உணர முடிகிறது.

    ஏற்றுக்கொள்ள முடியா  லாஜிக் மீறல்கள், குமட்டும் அளவிற்கு அருவருப்பு,  எரிச்சலூட்டும் காமெடிகள், தேவையற்ற காட்சி சொருகல்கள், நெளியச்செய்யும் வசனங்கள், அளவுக்கு மீறிய வன்முறை, மனதை பாதிக்கும் குரூரம்.. இவை அனைத்தும் தேசிய விருது பெற்ற பாலாவிடம் இருந்து!

    பிதாமகன் சூர்யாவின் பிரதிபலிப்பே இதில் ஆர்யா. நந்தா லொடுக்கு பாண்டியின் வசனம் பேசும் அதே மாடுலேஷன் தான் இவருக்கு இதில். பிதாமகன் விக்ரமின் வாய்ஸ் மாடுலேசனையும் அவ்வப்போதும், பாடி லாங்குவேஜை ஆக்ரோஷமாகும் போதும்  நினைவுபடுத்துகிறார் விஷால்.. நந்தா ராஜ்கிரனை சற்று கோமாளித்தனாக மாற்றியமைத்ததுதான் தான் ஜமீனாக ஜீ.எம்.குமார் ஏற்று நடித்த “ஐனஸ்” பாத்திரம். பிதாமகன் லைலா போலீஸ்  கான்ஸ்டபிளாக ப்ரோமோஷன் வாங்கியிருக்கும் கதாபாத்திரம் இதில் ஒரு ஹீரோயின் நடித்தது.

    பிதாமகன் சங்கீதா வாயில் வெற்றிலை பாக்கை பிடிங்கிவிட்டு, அதற்க்கு பதில் பீடியை சொருகி, கையில் குவாட்டரை திணித்து, கேட்பவர் காதில் ரத்தம் வரும் அளவிற்கு  கெட்டவார்த்தை பேசுபவர் விஷாலின் அம்மாவாக நடித்த அம்பிகா. அம்பிகாவிற்கு போட்டி போடும் அளவிற்கு கெட்ட வார்த்தை தெரிந்த அம்மாதான் ஆர்யாவின் அம்மா. இவர்கள் இருவருக்கும் கணவனாக சேவை செய்யும் கதாபாத்திரத்தில் விஷாலின், ஆர்யாவின் ஒரு தந்தை. (குழப்புதா? அவருக்கு ரெண்டு பொண்டாட்டி)

    படத்தின் கதை இது தான். மேலே இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் உரையாடுகிறார்கள். கூடவே இன்னும் சில கதாபாத்திரங்களும் அவர்களின் உரையாடல்களில் கலந்து கொள்கிறார்கள். கடைசியில் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் ஜமீன்தார் ஐனஸ் குரூரமாக கொல்லப்படுகிறார். அவரை கொன்றவரை விஷாலும், ஆர்யாவும் பிடித்து வந்து ஐனசின் பிணத்தோடு எரியூட்டுகிறார்கள். இவ்வளோ தான்.

    இத்தனை எரிச்சல்களையும் மீறி படத்தில் எனக்கு பிடித்த பல விஷயங்கள் இருக்கிறது. அது விஷாலின் நடிப்பு.. நடிப்பு என்பதை விட அவரின் கடின உழைப்பு, மெனக்கெடல் என்றே சொல்லலாம். படத்தில் அவரின் அறிமுக காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது. மாறுக்கண் கொண்ட அரவாணியாக நடிக்க நிச்சயம் தைரியம் வேண்டும். அவருக்கு நிச்சயம் இதில் விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது. படத்தின் சில பாடல்கள் பயன்படுத்தப்படவில்லை. ஏனோ தெரியவில்லை யுவனின் பின்னணி இசையை இதில் என்னால் சரியாக கவனிக்க முடியவில்லை. படத்தின் இன்னொரு சிறப்பம்சமே காமிரா தான். படம் முழுக்க பச்சை பசேல்.

    g m kumar

    என்னை கேட்டால் இந்த படத்தின் கதாநாயகன் நிச்சயம் ஜீ.எம் குமார் அவர்கள் தான். “நான் ஐனஸ் சொல்றேன்”… எனும் வசனம்… நான் மிகவும் ரசித்தது.   படம் முழுக்க தன் ஆளுமையை செலுத்தி, அனைவரையும் சிரிக்க வைத்து, ரசிக்க வைத்து, அழ வைத்து, மனதை பதைபதைக்க வைத்து கடைச்யில் அவரை கொண்டாடச்செய்துவிட்டார். அதுவும் தைரியாமாக, முழு நிர்வாணமாக நடித்த காட்சியில்…. சத்தியமாக வார்த்தை இல்லை. ஹாட்ஸ் ஆப் டூ ஹிம்.

    எனக்கு இந்த படத்தில் மிகவும் பிடித்த ஒரு நகைச்சுவை… ஒரு கறிவிருந்திற்கு சென்ற விஷால் அவர் விரும்பும் போலீஸ் கான்ஸ்டபிள் பெண்ணின் எதிரில் தன் புல்லட்டை நிறுத்தி அதில் அமர்ந்து தண்ணி அடித்துக்கொண்டே அவரை லுக் விட்டுக்கொண்டு இருப்பார். வருவோர் அனைவரையும் வரவேற்பதில் பிசியாக இருக்கும் அந்த பெண் தன்னை விஷால் உற்று பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்து அவரை பார்த்து கோபத்துடன் “என்ன வேண்டும்” என முறைப்பார். பதிலுக்கு விஷாலோ அதே ரொமாண்டிக் லுக்குடன் “சோறு எப்போ” என சைகையில் கேட்டவுடன் தியேட்டரே குலுங்கும் அளவிற்கு சிரித்து அடங்கியும், என் சப்தம் மட்டும் தனியே.. இதை பார்க்கும்போது டைமிங்கில் தான் உணர முடியும். இப்படி என்னால் சிரிப்பை நிறுத்த முடியா பல காமடி காட்சிகள் படத்தில் இருக்கிறது.

    எல்லாம் படம் முடிய அரைமணி நேரம் வரை மட்டுமே. பிறகு படத்திற்கு சம்பந்தமே இல்லாமல் திணிக்கப்பட வில்லனாக வரும் நடிகர் ஆர்.கே.கதாபாத்திரமும். அவர் ஜி.எம்.குமார் அவர்களை நிர்வாணப்படுத்தி அடித்து, கொன்று ஒரு பெரிய மரத்தில் கட்டி தூக்கில் தொங்கவிடும் காட்சி வரை பார்வையாளர் அனைவரின் மனமும் பதைபதைத்துவிடும். இந்த வில்லன் நடிகர் ஆர்.கே என்று பிறகு தெரிந்தவுடன் மிகவும் ஆச்சர்யபட்டு போனேன். அருமையான நடிப்பு. மிரட்டி இருக்கிறார். ஆனால் அத்தனை குரூரம் தேவையா என்று தெரியவில்லை. படத்தை கண்ட குழந்தைகளின் மனது நிச்சயம் பாதிக்கப்பட்டு இருக்கும்.

    மொத்தத்தில் வழக்கமாக கதை பின்னணியில்  காணப்படும் அதே மலை பிரதேசம்.  வழக்கம் போல் நந்தா லொடுக்கு பாண்டியை பின்பற்றி, பிதாமகன் சூர்யாவை தொடர்ந்து அதே திருடர்களின் கதைக்களம். நகைச்சுவை படம் என்பதால் படம் முழுக்க ரசிகர்களை சிரிக்க முயற்சித்து விட்டு கடைசி அரைமணி நேரத்தில் பாலாவின் வன்முறை, குரூரச்சிந்தனை, வழக்கம் போல் எட்டி பார்க்கிறது.

    படம் முடியும் போது, சேதுவில் விக்ரம் நடந்து செல்வது போல், பிதாமகனிலும் விக்ரம் நடந்து செல்வது போல், நான் கடவுளில் ஆர்யா நடந்து செல்வது போல் இதில் ஆர்யாவும், விஷாலும் வழக்கம் போல் நடந்து செல்கிறார்கள். அப்படியே வழக்கம் போல் அவர்கள் நடந்தாவரே காட்சி திரையில் உறைகிறது. உடனே வழக்கம் போல் “A Film By Bala” என்று எழுத்து தோன்றுகிறது. உடனே வழக்கம் போல் திரையரங்கை விட்டு நான் வீட்டிற்கு வந்து விட்டேன். நீங்களும் வழக்கம் போல் இந்த விமர்சனத்தை படித்து விட்டு உங்கள் கருத்தை பதிவு செய்துவிடுங்கள்.

    Share

    எந்திரன் விமர்சனம் – இளைஞர்களுக்கான கருத்துள்ள படம்

    பத்து வருட கனவை பசித்து, முன்று வருட கடின உழைப்பை மென்று, கோடி கோடியாக பணத்தை முழுங்கி,  வெளிவந்து இருக்கும் இந்த எந்திரன் எதிர்பார்ப்பை வீணடிக்காத ஒரு தந்திரன். ஹாலிவுட் தரத்திலான முதல் தமிழ் சினிமா இது. இந்திய சினிமா என்றே சொல்லவேண்டும். அசர வைக்கும் இயந்திர மனிதன், மிரள வைக்கும் காட்சிகள் என இயக்குனர் சங்கரின் கனவு மிகப்பிரம்மாண்டமாய் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனால் நிறைவேறி இருக்கிறது. ரஜினியின் இத்தனை வருட சினிமா கேரியரில் எந்திரன் ஒரு மிக முக்கியமான படம்.

    விஞ்ஞானியான டாக்டர் வசிகரன் (ரஜினி) தனது பத்து வருட உழைப்பால் ஒரு இயந்திர மனிதனை உருவாக்குகிறார். இது சாதாரணமான இயந்திரன் அல்ல. மனித மூளையை விட பன்மடங்கு சிந்திக்கக்கூடிய, பன்மடங்கு சாதுர்யமான, அதிவேகத்தில் இயங்கக்கூடிய ஒரு செயற்கை அறிவூட்டப்பட்ட இன்னொரு ரஜினி. இது அனைத்து மொழிகளும் பேசும், அனைத்து கலைகளும் அறிந்திருக்கும், நெருப்பில் செல்ல முடியும், தண்ணீருக்குள் நீந்த முடியும், புத்தகங்களை ஒரே நொடியில் படித்து முடிக்கவும் முடியும். இதன் பெயர் தான் சிட்டி. மனித குலத்திற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட சிட்டி அது அரசாங்கத்தால் அனுமதிக்கப்படும் பட்சத்தில் அதை போன்ற பல இயந்திர மனிதர்களை இந்திய ராணுவத்திற்கு செய்து தருவதே வசீகரனின் லட்சியம்.

    இதே போன்று, இன்னொரு ஆராய்சிக்கூடத்தில் வசீகரனின் குருநாதர்  தீய சக்திகளுக்கு வழி வகுக்கும் வழியில் அதே போன்ற இயந்திர மனிதனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியுறுகிறார்.   இச்சூழ்நிலையில் வசீகரன் உருவாகிய சிட்டியின் மூலக்கருவை (நியூரல் ஸ்கீமா) திருட முயன்று அதுவும் முடியாமல் போகவே சிட்டியை பரிசோதித்து அனுமதி வழங்கும் குழுவில் இருப்பதினால் அதற்கு அனுமதி வழங்க மறுக்கிறார். அதற்கு அந்த இயந்திரத்திற்கு மனித உணர்வுகளான அன்பு, பாசம் போன்றவைகள் புரியாததால் மனிதகுலத்திற்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது என குற்றாம் சாட்டி வசீகரனின் கனவை குலைக்கிறார்.

    மனமுடைந்த வசீகரன் மீண்டும் அதை தன் ஆராய்ச்சிக்கூடத்திற்கு கூட்டி வந்து அதற்கு அனைத்து மனித உணர்வுகளையும் புரிய வைக்கிறார். இங்குதான் பிரச்சினையே ஆரம்பம் ஆகிறது. அதுவரை வெறும் கட்டளைகளை நிறைவேற்றும் இயந்திரமாக செயல்பட்ட அது மனிதனை போல் சிந்திக்கவும் தொடங்குகிறது. விளைவு வசீகரனின் காதலியான சனாவிடம்(ஐஸ்வர்யாவை) அதற்கு காதல் உணர்வு வருகிறது. அதன் உணர்வுகள் வசீகரனின் கட்டுப்பாட்டை மீறி செல்வதை அறிந்ததும் கோபத்தில் அவர் சிட்டியை உடைத்து குப்பைக்கூலத்தில் தூக்கிப்போடுகிறார். விஷயம் அறிந்த வில்லன் அதை மீண்டும் இணைத்து அதன் மூலக்கூற்றை கண்டுபிடித்து அதை தீய செயல்கள் புரிய ப்ரோக்ராம் மூலம் மாற்றியமைக்கிறார். அது சானா மீது வெறித்தனமான காதலில் மீண்டும் எழுகிறது. உலகத்தை அழிக்கவும் அது முற்படுகிறது. ஆனால் இம்முறை யாருக்கும் கட்டுப்படாத இயந்திரமனிதனாய்….

    இந்த திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரம் சிட்டி என்கிற இயந்திர மனிதனே. இதில் ஹீரோவும் அதுதான், காமடியனும் அதுதான், கடைசியில் வில்லனும் அதுதான். ஒரு ரஜினியை திரையில் கண்டாலே ரசிகர்களின் ஆராவாரத்திற்கு அளவு இருக்காது அதவும் நூற்றுக்கணக்கான ரஜினியென்றால்? சொல்லவா வேண்டும் தீபாவளிதான். ரோபோவே ஜொள்ளும் அளவிற்கு பொருத்தமான அழகி ஐஸ்வர்யா ராய்தான் என்பது படம் பார்த்தவர்களுக்கு நிச்சயம் புரியும்.  முப்பத்தி ஏழு வயது மதிக்கத்தக்க திருமணமான ஒரு பெண்மணியை ஹீரோயினாக நம் இந்திய மக்கள் ஏற்றுக்கொள்வார்களேயானால் அது இவர் மட்டும் தான். இப்படத்தில் கொள்ளை அழகு (மேக் அப் உதவியுடன்).   இந்த படத்தில் சந்தானமும், கருணாசும் ஒரு துணை கதாபாத்திரமாக வந்து நகைச்சுவை செய்ய முயல்கிறார்கள். ஆனால் எதுவும் எடுபடவில்லை. அதுவும் அவர்களின் கதாபாத்திரம் இந்த படத்திற்கு துளியும் ஒட்டவில்லை என்பதே அதற்கு காரணம். இரண்டு பேருமே “அட நம்ம இவ்வளவு பெரிய படத்துல நடிக்கிறோமா” என்ற ஆச்சர்யத்தையும், பயத்தையும் முகத்தில் சுமந்தவாரே படம் முழுக்க வருவது போல் தோற்றம் அளிக்கின்றனர்.

    முற்பகுதிகளில் சிட்டி ரோபோ செய்யும் சாகசங்கள் அனைத்தும் அனைவரையும் சீட்டின் நுனியில் உட்காரவைக்கும் அளவிற்கு விறுவிறுப்பு. அந்த ரயிலில் நடக்கும் சண்டை காட்சிகளாகட்டும், நெருப்பில் மாட்டிக்கொண்டவர்களை காப்பாற்றுவதில் ஆகட்டும் கண்டிப்பாக இந்தியாவின் சூப்பர் மேன் சிட்டி தான். ஆங்கில படத்தில் மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்த இந்த மாதிரி காட்சிகள் தமிழ் படத்தில் காணும்போது பெருமையாகத்தான் இருக்கிறது. முக்கியமாக சிட்டி பிரசவம் பார்க்கும் அந்த காட்சியை காணும்போது அனைவருக்கும் கண்டிப்பாக சிலிர்த்துவிடும். சூப்பர் மேன், ஸ்பைடர் மேன்  கதாபாத்திரத்தை போல் இந்த சிட்டியையும் பல படங்களில் தொடர்ந்து இந்திய சினிமாவில் எடுக்கும் அளவிற்கு ஸ்கோப் இருக்கிறது. ஷங்கருக்கு இந்த யோசனை இருக்கிறதா என்று தெரியவில்லை.

    அதே மாதிரி ரஜினியை தவிர வேறு யாராலும் இந்த படத்தை கண்டிப்பாக செய்திருக்க முடியாது. ரோபோவாக நம்ம ஊர் நடிகர்களை நாம் திரையில் ஏற்றுக்கொள்ள தவறினால் முழு படமுமே எள்ளி நகைக்கக் கூடியதாகிவிடும் சூழ்நிலை இருக்கிறது. ரஜினி கணக்கச்சிதமாக இயந்திர மனிதனாக இதில் பொருந்தி இருக்கிறார். இரண்டாம் பகுதியில் வரும் அந்த வில்லத்தனமான இயந்திரனின் சிரிப்பும், ஆடு மாதிரி கத்திக்கொண்டே நடந்து வரும் தோரணையும் ரஜினியை பிடிக்கவில்லை என்று கூறிக்கொண்டு திரிபவர்கள் கூட அவருக்கு தீவிர ரசிகனாகியே தீரவேண்டும். ஸ்டைல் எதுவும் இல்லமால் தன் நடிப்பை வெளிக்கொண்டு வர நல்ல படமாக இது அமைந்துள்ளது. ரஜினியை ரோபோவாக முற்றிலும் நம்பும்படியாகவும் கொஞ்சமும் இம்மி பிசகாமல் இப்படத்தை உருவாக்கிய விதத்தில் இயக்குனர் ஷங்கரை பாராட்டியே ஆக வேண்டும். இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குனர் என்ற பெயர் கண்டிப்பாக எந்திரன் அவருக்கு பெற்றுக்கொடுக்கும்.

    ஒரு விஞ்ஞான அறிவுள்ளவன் அனைவருக்கும் புரியும்படியாக கதை சொல்ல முடியாது. அதே போல் ஒரு படைப்பாளியால் விஞ்ஞானியை போல் டெக்னிக்கல் வார்த்தை அறிந்திருக்க முடியாது. ஆனால் இரண்டையும் கையாளக்கூடிய திறமை படைத்த ஒரே லோக்கல் சரக்கு சுஜாதா மட்டும் தான். அவரில்லாமல் இந்தப்படம் கண்டிப்பாக இந்த அளவிற்கு சாத்தியப்பட்டு இருந்துருக்காது. இந்த கதையின் மூலக்கருவே மறைந்த சுஜாதாவின் ஒரு பழைய சிறுகதையின் தாக்கத்தால் உருவானதே என எங்கோ படித்தாய் ஞாபகம்.
    படத்தின் வசனங்களில் நிறைய இடத்தில், சுஜாதா தான் இறந்தாலும் தன் எழுத்திற்கு அழிவில்லை என்று ஞாபகப்படுத்துகிறார். சந்தானமும், கருணாசும் சிட்டி ரோபோவிடம் “எங்களுக்கு மட்டுமே இருக்கும் ஒன்று உனக்கு இல்லை” என்று அதை உசுப்பேற்றிவிட. அது வசீகரனிடம் சென்று “அது என்ன எனக்கு மட்டும் இல்லை” என்று அம்மாஞ்சியாய் கேட்பது போன்ற நையாண்டி வசனமும். இன்னொரு காட்சியில் மனிதர்களிடம் மட்டுமே இருப்பது போட்டி, பொறாமை, வஞ்சகம், துரோகம் போன்ற உணர்வுகள்தான் என்ற வசனமும் ஹய்லைட். கொசுவிடம் பேசும் அந்த காட்சிகளும் சுஜாதாவின் கைவன்னம்தான்.

    பின்னணி இசையில் ஏ.ஆர் ரகுமானுக்கு சரியான தீனி இந்த படத்தில் கிடைத்துள்ளது. ஹாலிவுட் படத்தில் வருவது போன்ற பின்னணி இசை இந்திய மண்ணில் இவரை தவிர வேறு யாராலும் தரமுடியாது. அட ஹாலிவுட்காரனுங்களுக்கே இவர் மியூசிக் போட போய்ட்டார் அப்புறம் என்ன ஹாலிவூட் போன்ற பின்னணி என்ற அடைமொழி?!!! சும்மா சொல்லக்கூடாது க்ளைமாக்சில் கலக்கிவிட்டார் மனுஷன். அரிமா அரிமா பாடலில் வரும் “எந்திரா எந்திரா” பிட் தான் இனிமேல் அலாரம் டோனாக வைக்கப் போகிறேன். எவ்வளவு தூக்கத்தில் இருந்தாலும் “எந்திரா… எந்திரா,,,” என்று உச்சக்குரலில் கத்தி எழுப்பி விடும் ஒரு பாடல்.

    ஆஸ்கார் விருது பெற்ற ராசூல் பூக்குட்டி இத்திரைப்படத்திற்கு அதே உலகத்தரமான ஸ்பெஷல் எபக்ட்ஸ் செய்துள்ளார். அது படத்தை பார்த்தால் தான் உணர முடியும். ஒளிபதிவாளர் ரத்தினவேலு அபாரம். கிளிமாஞ்சரோ பாடலையும், காதல் அணுக்கள் பாடலையும் திரையில் காணும்போது கண் சிமிட்டாமல் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. கொள்ளையழகாய் தன் காமிராவில் படம்பிடித்து இறக்கிறார். சாபு சிரிலின் கலையும் அப்படியே. படத்தில் எந்த இடத்திலும் கிராபிக்ஸ் எது? செட் எது? என்றே கண்டுபிடிக்க முடியாது.

    இப்படி படம் நெடுக பல பெருமைகள் இருந்தாலும் படத்தில் சில குறைகள் இல்லாமல் இல்லை. என்னதான் மாதக்கனுக்குல பரீட்சைக்கு படிச்சிட்டு போனாலும் சில கேள்விகளுக்கு  சொதப்புவது இல்லையா அது போல தான். லஞ்சம், அரசியல் போன்று தான் தொன்று தொற்று பின்பற்றும் பார்முலாவை இந்த படத்தில் விட்டுவிட்டு வந்தாலும்  ரஜினி இருக்கும் தைரியத்தில் கதையிலும் கவனம் செலுத்தாமல் விட்டு விட்டார் போலும். கதைக்களம் நமக்கு புதியதாய் இருந்தாலும் கதை அரதப்பழசுதான். முக்கோண காதல் கதை. கடைசியில் உண்மையான காதலர்களே சேருகிறார்கள். இந்த படத்திற்கான ரோபோ என்ற கருவை வைத்து படத்தின் கதையில் பூந்து விளையாட வாய்ப்புகள் இருந்தும் ஒரு இந்தியக்கதையை ஆங்கில படத்திற்கு இணையான தரத்தில் சொல்ல மட்டுமே முயன்று இருக்கிறார் இயக்குனர்.

    சில இடங்களில் காட்சிகோர்வைகள் இல்லை. இன்னும் சில இடங்களில் டீடைல்ஸ் பத்தவில்லை. பாமரனுக்கு புரியாது என்று விட்டு விட்டார்களோ என்னவோ. எனக்கு க்ளைமாக்சை காணும்போது ராமநாரயனின் “குட்டி பிசாசு” ட்ரைலரை பார்த்த நியாபகம் தான் வந்தது. (படம் பார்க்கவில்லை). கிளைமாக்ஸில் இன்னும் கொஞ்சம் வித்யாசமாக சிந்தித்து கொஞ்சம் சுவாரசியமாக எடுத்திருக்கலாம். கிராபிக்ஸ் பண்ணிக்காலம் என்ற நம்பிக்கையில் அதை பற்றி கவலைப்படவில்லை போலும். ஆங்கிலப்படங்களை அவ்வளவாக கண்டிராதவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கண்டிப்பாக கிளைமாக்ஸ் பிரமிக்க வைத்து இருந்து இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் நீண்டு போய் தொய்வை ஏற்படுத்துகிறது. இவை அனைத்தும் குறைகள் என்பதை விட படத்தை மேலும் மெருகேற்றகிடைத்த வாய்புகள் என்றும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் நிச்சயம் எந்திரன் தலையில் தூக்கிவைத்து கொண்டாடவேண்டிய ஒரு படம். தமிழ் படமாயிற்றே… இங்கே இருந்து இவ்வளவு தூரம் பண்ணி இருப்பது சும்மாவா?

    இந்த திரைப்படத்தில் சங்கர் சொல்லவந்த விஷயம் இது தான், வஞ்சகம், துரோகம், பழிவாங்குதல் போன்ற மனிதர்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய குணங்களை விட்டொழிந்து வாழ வேண்டும். அது மட்டுமில்லாமல் வசீகரன் தனக்கு துரோகம் செய்துவிட்ட சிட்டியை வெட்டி உடைக்கும் போது “எனக்கு வாழனும் டாக்டர், நான் சனாவை காதலிக்கிறேன்னு” கெஞ்சும்போதும். க்ளைமாக்சில் சிட்டி தன்னை தானே ஒவ்வொரு பாகமாய் கழட்டி உயிர்துறக்கும் சீனும் கண்டிப்பாக ஒவ்வொருவர் மனதிலும் பாரத்தை ஏற்படுத்துவான் இந்த எந்திரன்.

    இந்த படத்தில் இயக்குனர் சங்கருக்கே தெரியாமல்  இன்னொரு  மெசேஜ் இருக்கிறது. அது என்னவென்றால், எப்பேர்பட்ட புத்திசாலியாக இருந்தாலும் ஒரு பெண்ணை மட்டும் காதலிக்க ஆரம்பித்தால் கடைசியில் அவனுக்கு நிச்சயம் சங்கு தான்.  அது ரோபோவாக இருந்தாலும் சரி.   பூம் பூம் ரோபோடா…..yahoo

    Share

    எந்திரன் திரைப்படம் இலவச டவுன்லோட்- இணையத்தில் முதல் முறையாய்

    endhiran-movie-download

    பிற்பாடு சேர்க்கப்பட்டது:

    இன்னுமுமா இந்த உலகம் இதை நம்பிக்கிட்டு இருக்கு? போதும் நிறுதிக்கலாம். இது வெறும் கற்பனை கதை. எந்திரன் இங்கே கிடைக்கமாட்டான். அக்டோபர் ஒன்று முதல் தியேட்டரில் காணுங்கள்…

    ——————————————————————————————————————————————————————-

    இன்னும் இரண்டு நாட்களே எந்திரன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் இந்த சூழலில் சன் பிக்சர்ஸ்க்கு வந்திருக்கிறது ஒரு புது தலைவலி. கடைசிவரை இத்திரைப்படத்தின் துணுக்குச்செய்திகள் முதல் பட ஸ்டில்கள் வரை பொத்திப்பொத்தி வைத்திருந்த இயக்குனர் சங்கர் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதை பிரிண்ட் போடுவதில் கவனக்குறைவாக இருந்துவிட்டார்கள் போலும். அமெரிக்காவின் ஒரு கட்டண திரைப்பட டவுன்லோட் இணையத்தளம் எந்திரன் திரைப்படத்தின் ஹெச்.டீ எனப்படும் ஹய் டெபனிஷன் (மிகத்துல்லிய) வீடியோ பதிவை இன்று வெளியிட்டுள்ளது. இதை டவுன்லோட் செய்ய அந்த இணையத்தில் பதிவு செய்து கிரிடிட் கார்டு மூலம் பத்து அமெரிக்கன் டாலர் (US$10) கட்டணம் செலுத்த வேண்டும். இரண்டு மணி நேரம் முப்பத்தைந்து நிமிடம் ஓடும் அந்த படம் இணையத்தில் முதல் முறையாக அங்கு மட்டும் தான் வெளியிடபட்டு இருக்கிறது. இதை அமெரிக்க வாழ் நண்பர் ஒருவர் அந்த இணையத்தின் டவுன்லோட் முகவரியுடன் இன்று எனக்கு ஈமெயிலில் அனுப்பிவைத்து இருந்தார்.

    எந்திரன் திரைப்படம்  வெளியிடுவதற்கு முன்பாகவே இணையத்தில் அதை வெளியிட்டதை பார்த்ததும் எனக்கு பயங்கர அதிர்ச்சி. இதை நான் நம்ப மறுப்பதாக அவர் ஈமெயிலிற்கு பதில் அனுப்பினேன். பிறகு நண்பர் அதை பணம் கட்டி டவுன்லோட் செய்து வேறொரு இலவச கோப்புகள் போட்டு வைக்கும் ஒரு இணையத்தளத்தில் அதை இரண்டு பகுதிகளாக பதிவேற்றம் செய்து அந்த டவுன்லோட் முகவரியை மீண்டும் அனுப்பி  வைத்து இருந்தார். ஆச்சர்யம் ஆனால் உண்மை. இதை எழுதும்போது ஒரு பகுதி பதிவிறக்கம் செய்து நான் பார்த்து முடித்தாயிற்று. படம் சூப்பர்…. சான்ஸ்சே இல்ல…. விஞ்ஞானி ரஜினியின் பெயர் வசீகரன். படத்தின் ஆரம்பத்திலேயே சிட்டி ரோபோ வந்து விடுகிறது. அதன் பிறகு அது செய்யும் அட்டகாசம் கொஞ்சநஞ்சமல்ல. பாதி படம் தான் பார்க்க முடிந்தது.  விமர்சனம் மிக விரைவில். இன்னொரு பகுதி பதிவிறக்கம் ஆகிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் அந்த டவுன்லோட் முகவரியை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இதை எழுதுகிறேன். யாரேனும் அதை கண்டுபிடித்து அகற்றுவதற்கு முன்னர் டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். சங்கேத குறியீடு (password) போட்டால் தான் பதிவிறக்கம் செய்ய முடியும், மறந்து விடாதீர்கள்.

    எந்திரன் திரைப்படத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்ய சொடுக்குங்கள்.

    சங்கேத குறியீடு(Password):   www.cpraveen.com

    எந்திரன் பகுதி 1: Click Here

    எந்திரன் பகுதி 2: Click Here

    பின்குறிப்பு: திரைப்படங்களை திருட்டுத்தனமாக காண்பது தவறு என்ற கொள்கை உள்ளவர்கள் தயவு செய்து இதை சொடுக்க வேண்டாம். தியேட்டரில் வழக்கம் போல் டிக்கெட் எடுத்து பாருங்கள். எந்திரனை ஓசியில் காண விரும்புகிறவர்களுக்கு மட்டுமே  இந்த பதிவிறக்கம். இந்த திருட்டு பதிவிறக்கத்தால் ஏற்படும் யாதொரு பிரச்சனைகளுக்கும், மனசோர்வுகளுக்கும் கம்பெனி பொறுப்பல்ல.

    பிற்பாடு சேர்க்கப்பட்டது:

    29-09-2010: 8:30 PM IST:  நண்பர்களே….. இந்த பதிவின் மூலமும்,  ட்விட்டர் மற்றும் பேஸ்புக் மூலம் இந்த பதிவை நீங்கள் பகிர்ந்து கொள்ளுவதாலும் எனக்கு யாதொரு “பண வரவும்”, “வியாபார நன்மையும்” இல்லை என்பதை இந்த பிற்சேர்க்கை மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். எந்திரன் வீடியோவை நீங்கள்  கண்டுகளித்து இன்புற்றதை உங்கள் நண்பர்களிடம் பகிர்த்து கொள்ளுவதே அதன் நோக்கம்.

    Share

    சூப்பர் ஸ்டாரின் பக்தர்களுக்கு மட்டும்

    எந்திரன் திரைப்படம் விரைவில் திரைக்கு வருவதை முன்னிட்டு இதோ ரஜினியின் துதி பாடல்கள்… சூப்பர் ஸ்டாரின் பக்தர்களுக்கு மட்டும்…

    (கீழுள்ள போட்டோவை கிளிக்  செய்தால் இன்னும் பெரிதாகும்)

    உங்களிடம் இன்னும் வேறு எதாவது இதை போன்ற ரஜினியின் துதிகள் இருந்தால் கீழே பகிர்ந்துக்கொள்ளவும்… மற்றவர்களும் ரசிக்கட்டும்…

    Share

    சிரித்தே தொலைக்க வேண்டிய பாஸ் என்கிற பாஸ்கரன் – விமர்சனம்

    Boss-Engira-Baskaran

    நீண்ட நாள் கழித்து ஒரு முழுநீள நகைச்சுவை திரைப்படத்தை பார்த்த திருப்தி. “இரும்புக்கோட்டை முரட்டு சிங்கத்தில்” எதிர்பார்த்து, “தில்லாலங்கடியை” நம்பி சென்று கிடைக்காத திருப்தி இந்த படத்தில் கிடைத்தது என்றே சொல்லலாம். சண்டை இல்லை, அழுகாச்சி இல்லை, செண்டிமெண்ட் இல்லை. அட சோக சீன் வரும் இடத்தில கூட ரசிகர்களை சிரிக்க வைத்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்ட இந்த திரைப்பட இயக்குனர் ராஜேஷை என்னவென்று சொல்ல! கடைசி சீன் வரை சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் வேறு வழி இல்லை.

    ஆர்யா பல வருடங்களாக அரியர் எழுதிக்கொண்டு வீட்டுக்கு பாரமாய் வாழும் ஒரு உதவாக்கரை ஹீரோ. சந்தானம் முடி திருத்தும் நிலையத்தை நடத்தி ஆர்யாவின் இதர செலவுகளையும் கவனித்துக்கொள்ளும்  “நண்பேன்டா”. ஆர்யாவின் அண்ணியின் தங்கை தான் இந்த நயன்தாரா. அண்ணியிடம் தான் காதலிக்கும் நயன்தாராவை பெண் கேட்க அவரோ உன்னை போன்ற உதாவாக்கரைக்கு எதை நம்பி என் தங்கையை கொடுப்பது என்று மறுத்துவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த ஆர்யா வீட்டை விட்டு வெளியேறி ஒரு டுடோரியல் சென்டர் தொடங்கி நயன்தாராவை கைபிடிப்பதே கதை.

    இதை கேட்டவுடன் ஏதோ சீரியசான கதை என்று பயந்து விடாதீர்கள். பெயருக்கு கூட சீரியசான சீன் படத்தில் இல்லை. அதே மாதிரி வழக்கம் போல தமிழ் படத்தை போல் ஒரே பாடலில் ஹீரோ வளர்ந்து விடவுமில்லை. நான் முதலில் சொன்ன மாதிரி சோக சீன் என்று நீங்கள் நினைத்தால் கூட சிரித்தே தொலைய வேண்டும். எடுத்துக்காட்டாக, வீட்டை விட்டு  வெளியேறும் ஆர்யா மழையில் நனைந்தபடி தெருவில் நடக்கும் போது ஆர்யாவின் அண்ணன் வீட்டிலிருந்து அவரிடம் ஓடி வருகிறார். ஆர்யா அவரிடம் “நீ இப்படி எல்லாம் ஓடி வந்து கூப்ட்டாலும் நான் வருவதாய் இல்லை” என்று சொல்ல. அதற்கு அவர் அண்ணனோ “சீ.. உன்னை யாரு கூப்பிட வந்தா. மழை பேஞ்சிட்டு இருக்கு இதை சாக்கா வச்சி திரும்ப வீட்டுக்கு கீது வந்துடாத இந்தா குடை” என்று கொடுத்துவிட்டு செல்வார். இப்படியே படம் முழுவதும் சீரியசான காமடிகள்.

    Boss-Engira-Baskaran-review

    இந்த படத்தில் கதை கிடையாது, திரைக்கதை கிடையாது வெறும் டயலாக்கை நம்பியே எடுக்கப்பட்ட படம். ஒவ்வொரு டயலாகிற்கும் ஒரு காமடி என்ற பார்முலாவில் எழுதியுள்ளார் இதன் இயக்குனர்.  ஆர்யா எது சொன்னாலும் அதற்கு டைமிங் காமடி கொடுத்துக்கொண்டே இருப்பார் சந்தானம். சந்தானம் தான் இந்த படத்தின் பிளஸ். ஆர்யா அவரிடம் “உனக்கு அந்த இங்கிலீஷ் வார்த்தைக்கு அர்த்தம் கேட்டப்போ ஒன்னு தெரியும்னு சொல்லி இருக்கணும் இல்லேன்னா தெரியலன்னு சொல்லி இருக்கணும்.  ஏன்டா தப்பான அர்த்தத்தை சொன்னே”னு கேட்க்க. அதற்கு சந்தானமோ “ஒரு வேலை பிரிட்டிஷ் இங்கிலிஸ்ல அவ பேசியிருப்பா” னு சொன்னப்ப சிரிப்ப அடக்க முடியல.  இந்த மாதிரி ஒவ்வொரு டயலாக்கும் படத்துல நகைச்சுவை தான்.

    நயன்தாரா இந்த படத்துடன் தன் கலை உலக சேவையை நிறுத்திக்கொள்ளலாம். அவருடைய முகமும் ஹேர் ஸ்டைலும் பார்க்க சகிக்கவில்லை. யுவனின் இரண்டு பாடல்கள் மட்டுமே இதில் ரசிக்கும் படி உள்ளது. பின்னணி இசையில் அவருக்கு சரியான வேலை இல்லை படத்தில். பழைய திரைப்படத்தின் பாடல்களையே நிறைய இடத்தில நகைச்சுவைக்காக பின்னணியில் சேர்த்து விட்டிருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் இயக்குனரான ராஜேஷின் முதல் படமான சிவா மனசுல சக்தியை விட இதில் காமடி நிரம்பி வழிகிறது. அந்த படத்தில் நடித்த ஜீவா கூட இதில் ஒரு சிறப்பு தோற்றத்தில் வந்து மனசை அள்ளுகிறார். அதுவும் சிவா மனசுல சக்தி படத்தில் வருவது போன்ற அதே வாய்ஸ் மொடுலேசனில் நயன்தாராவின் அப்பாவை பார்த்து “மாமா அப்டியே ஒரு கோட்டர் சொல்லேன்”னு சொல்லி ஸ்கோர் பண்ணிவிடுகிறார். பாஸ் என்கிற பாஸ்கரன் கண்டிப்பாக நாற்பது வயதுக்கு உட்பட்டவர்களால் மட்டுமே ரசிக்க முடியும்.

    Share

    பஞ்சாயத்து பால்டாயில் குடிச்சிட்டான் – களவாணி விமர்சனம்

    kalavaani review

    இப்படி ஒரு படம் பார்த்து எவ்வளோ நாள் ஆச்சு… படம் முடியும் வரை இருக்கையில் நெளியாமல் அமர வைக்கும் நேர்த்தியான திரைக்கதை. நரசிம்மராவ் போன்றோரரையும் சிரிக்கவைத்து விடும்  குபீர் வசனங்கள். கை இல்லாதவர்களையும்  அடிக்கடி கைதட்ட வைத்துவிடும் காட்சி அமைப்புகள். காதில் ரத்தம் வரவழைக்காத  பாடல்கள் பின்னணி இசை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் களவாணி திரைப்படத்தை. கதை ஒன்றும் தமிழுக்கு புதிதில்லை. திரைக்கதை, காட்சி அமைப்புகளே இந்த படத்திற்கு பக்க பலம். இந்த படத்தில் விமலின் நடிப்பு அருமை. இதே மாதிரி இன்னும் ரெண்டு படம் அவருக்கு கெடைச்சா போதும். சிம்பு, தனுஷ் வரிசையில அவரும் வந்துடுவாரு. அந்த ஹீரோயின் பொண்ணு நெஜமாவே இஸ்கூல் பொண்ணா?  யூனிபார்ம்ல பள்ளிக்கூட மாணவி போல இருக்கு. சீலை கட்டுனா டீச்சர் கணக்கா இருக்கு? எப்புடி இருந்தா என்ன? நல்லா இருக்குல்ல  அவ்ளோதான்.

    படத்தோட முக்கிய கதாபாத்திரமே கஞ்சா கருப்புதான். பருத்தி வீரனுக்கு அப்புறம் கண்டிப்பா இந்த படத்துலதான் அவருக்கு காமெடி சூப்பரா வொர்க் அவுட் ஆகி இருக்கு.  அவர் வருகிற காட்சி எல்லாம் சிரிச்சே தொலையனும் வேற வழியே இல்ல. அதுவும் அந்த “பஞ்சாயத்து பால்டாயில் குடிச்சிட்டான்” காமடி இருக்கே. தியேட்டர்ல போயி கண்டிப்பா பாருங்க.இன்னும் நிறைய இருக்கு.. படத்தோட கிளிமாக்ஸ்ல கூட எதிர்பாராத காமெடி இருக்கு. படம் முடிஞ்ச ஒடனே வெளியே போய்டாதீங்க அவசர குடுக்கை மக்களே. படம் முடிந்து எழுத்து ஒடும் போதும் அதில் சிரிப்பை ஒளித்து வைத்துள்ளார் இயக்குனர். குடுத்த காசுக்கு கடைசி வரை சிரிச்சிட்டு வாங்க. நான் வெளிவே வந்து பார்கிங்கில் வண்டி எடுக்கும் வரை சிரிப்பை நிறுத்த முடியவில்லை.

    இந்த படத்துக்கு ஒரே ஒரு பிரச்சனை என்னன்னா, போதுமான விளம்பரம் இல்லை.. “கலாநிதி மாறன் பெருமையுடன் வழங்கும்” அப்படின்னு இந்த மாதிரி நல்ல படத்துக்கு விளம்பரம் கெடச்சி  இருந்தா இந்த வருடத்தின் சிறந்த படம் இதுவே. வசூல் சாதனை புரிந்திருக்கும் படமும் இதுவாக தான் இருந்து இருக்கும். இந்த  படம் பார்த்து ஒரு வாரம் ஆகுது ஆனால் இந்த விமர்சனத்தை எழுத முடியவில்லை. எழுதாமல் இருக்கவும் முடியவில்லை. . ஏனென்றால் கண்ட படங்களுக்கு விமர்சனம் எழுதிட்டு இந்த மாதிரி நல்ல படத்தை எழுதாமல் விட மனம் வரவில்லை.  நம்மால் ஆன விளம்பரமாக இது  இருக்கட்டும். ஒருத்தர் கூடவா இத படிச்சிட்டு இந்த படம் பார்க்க போக மாட்டாங்க. இந்த மாதிரி படத்திற்கு மக்களே வெற்றிபெற உதவ வேண்டும்.. நல்லா இருந்தா நீங்களும் நாலு பேருகிட்ட சொல்லுங்க.. என்ன சொல்றீங்க?

    இதோ போனஸாக களவாணி ரிங்டோன் – இலவச டவுன்லோட்.

    Share

    சுறா விமர்சனம் – சொந்த காசில் சூனியம்

    பெரியோர்களே, தாய்மார்களே இதனால் தெரிவிப்பது என்னவென்றால் சுறானு ஒரு உலக தமிழ் சினிமா வந்திருக்கிறது. தெரியாம அந்த தியேட்டர் பக்கம் கூட போயிடாதீங்க. நாலு நாளைக்கு தூங்க மாட்டீங்க.  நானும் விஜய் விசிறியாக தான் இருந்தேன். அது இஸ்கூல் காலேஜு படிக்கும் போது. இப்போ மட்டும் அந்த உலக நடிகனை நேரில்  பார்த்தேன் அவ்ளோதான். ஒரு மனசாட்சியே இல்லாம ஒரு படத்தை எடுத்து இருக்காங்க. பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு மிஸ்டர் விஜய். கடந்த ஐந்து வருடமா ஒரே படத்தை அதுவும் உங்க படத்தையே ரீமேக் பண்ணிட்டு இருக்கீங்களே. இது உங்களுக்கே நியாயமா?

    ஒரு வருசமா ரூம் போட்டு யோசிச்சு எழுதின  சுறா கதை என்னன்னா, விஜய் ஒரு மீனவ குப்பத்துக்கே தலைவர். அவரை  கேட்காமே அந்த ஊர்ல குழந்தை கூட சூ சூ போகாது. அவ்ளோ பவர்புல் ஆள் அவரு. அதுக்கு கைமாறாக அங்க இருக்க ஆயிரம் குடும்பங்களுக்கும் வீடு கட்டி கொடுக்கறது தான் அவருடைய வாழ்க்கை லட்சியம். இதுல வில்லன் அந்த குப்பத்த அழித்து தீம் பார்க் கட்ட திட்டம் போடுறார். அதை தடுத்து, வில்லன் பணத்தையே லவுட்டி குப்பத்தில் வீடு கட்டுகிறார் விஜய். இடையில் ஐந்து சண்டை, ஐந்து பாட்டு… பாட்டுக்கு முன்னாடி தமன்னா வந்து அட்டண்டன்சு போட்டுடுவாங்க. அப்பேற்பட்ட சென்சிடிவ் கதையை தன்னுடைய ஐம்பதாவது படத்திற்கு தேர்ந்தெடுத்த விஜயின் வியூகம் புல்லரிக்கிறது. நான் இயக்குனரை குறை கூற மாட்டேன். விஜய்கிட்ட கால்ஷீட் வாங்கனும்னா எப்படிப்பட்ட கதை பண்ணனும்னு அவருக்கு தெரிஞ்சி இருக்கு. ஆக மொத்தம் ரெண்டு பெரும் சேர்ந்து பொது மக்களை மொக்க போட்டுட்டாங்க.

    வடிவேலு அப்போ அப்போ தனி ட்ராக்ல வந்து காமெடி பண்ண ட்ரை பண்ணி எரிச்சல் பண்றார். ரெண்டு வாட்டி சிரிக்கலாம் அவ்ளோதான். தமன்னா பாவம் படத்துல வேலையே இல்ல. விஜய் படத்துல எந்த நடிகைக்கு வேலை இருக்கும். விஜய் பேசறதுக்கே இரண்டரை மணி நேரம் போதவில்லை அப்படி இருக்க தமன்னா என்ன பண்ணுவாங்க? தமன்னாவினுடைய தற்கொலை முயற்சி அறுவையோ அறுவை. விஜய் தம்பி  படம் முழுக்க பஞ்ச் டயலாக்கு பேசியே கொல்றார். பேசற ஸ்டைல் இருக்கே சான்சே இல்ல. கொடுமை. அப்போ மழை மட்டும் பேயவில்லை என்றால் பாதி படத்துலேயே எந்திரிச்சு வந்து  இருப்பேன்.

    படத்துல எனக்கு பிடிச்ச ஒரே விஷயம் வில்லன் தான். சூப்பரா நடிச்சிட்டு இருந்தார் விஜயை பார்க்கும் வரை. ஆனால் அவர்கிட்ட பஞ்ச் டயலாக்கு பேசி பேசியே அவரையும் ஒரு வழி பண்ணிட்டார் நம்ம விஜய். யாரை தான் பேச விடறார் படத்துல. ஒரு சாம்பில் “உன் வலைல மாட்ட நான் ஒன்னும் இறா இல்லடா. சுறா….”. இந்த படத்துக்கு செலவு பண்ணின தண்ட காசுக்கு மேற்கூறிய அந்த ரெண்டு ஆயிட்டதையும் ஒரு நல்ல ஹோட்டல்ல வாங்கி சாப்பிட்டுவிட்டு போயிருக்கலாம். அப்புறம் ஏன் இந்த படத்துக்கு போனிங்கன்னு கேட்பது எனக்கு புரியுது. இன்டர்நெட்ல ஒரு ப்ளாகுல விமர்சனம் படிச்சிட்டு ஏமாந்துட்டேன். இனிமேல் விஜய் படத்த பார்க்கப்போறதா இல்லை.அப்படியே பார்க்கறதா இருந்தால் விஜய் ரசிகர் அல்லாத பிளாக் தேடி கண்டு பிடித்து படித்து விட்டு முடிவு செய்வேன்.

    எப்புடி நடிச்சாலும் தியேட்டருல கூட்டம்  கூடுதுன்னு ஒரு காரணத்துக்காக விஜய் பண்ற அட்டகாசம் தாங்கல. அவரிடம் யாரும் உலக சினிமாவை யாரும் எதிர்பாக்கல ஜஸ்ட் ஒரு உருப்படியான சினிமா கொடுத்து ரசிகர்களை முட்டாளாக்காமல் இருக்க வேண்டாமா? கடைசியாக  ஒரே ஒரு வேண்டுகோள். சுறாவை டிஸ்கவரி சேனலில் பாருங்க தப்பே இல்லை. அட கடலுக்கு சென்று நேரில் கூட பாருங்கள் ஒன்னும் பண்ணாது. ஆனால் தியேட்டர்ல பார்த்துடாதீங்க அது பெரிய ரிஸ்க். விஜய் அவருடைய ஒரு ரசிகரை இழக்க வேண்டியது வரும்.

    Share
←Older