“லாப்டாப் வாங்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் ஆனா எந்த கம்பனி லாப்டாப் வாங்கறதுன்னு தெரியல”. “வாங்கும்போது நிறைய இலவசம் கொடுத்தானுங்கப்பா பின்னால பிரச்சனைன்னு போனா கண்டுக்கவே மாட்டேங்கறாங்க”. இது எப்போதும் லாப்டாப் எனும் மடிகணினி வாங்குபவர்களும், வாங்கியவர்களும் அடிக்கடி புலம்பும் வார்த்தைதான். அவர்களுக்கு உதவும் வண்ணம் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவே இந்த இடுக்கை.
எல்லா கம்பனியிலும் நாம் தேவைப்படும் கான்பிகுரேசனில் மடிகணினி வாங்கிவிடலாம் தானே. காசு இருந்தால் சந்தைக்கு வந்தவுடனே அந்த மாடலை வீட்டிற்கு வரவைத்து விடலாம் தானே என நாம் எண்ணலாம்.. அது சரி. ஆனால் மடிகணினி வாங்குவதில் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதி ஒன்று இருக்கிறது. அது தான் “ஆப்டர் சேல்ஸ் சர்விஸ்” – After Sales Service.
எவ்வளவு விலைகொடுத்து மடிகணினி வாங்குகிறோம் என்பது முக்கியமல்ல யாரிடம் வாங்குகிறோம் என்பது தான் முக்கியம். இல்லையேல் பின்னால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாம் கொடுக்கும் விலை கொஞ்சம் கொஞ்சமாக அந்த மடிக்கணினியின் உண்மையான விலையை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். தெரியாமல் மாட்டிக்கொண்டால், தேவையற்ற பண விரயமும், நேர விரயமும், மன உளைச்சலும் தான் மிஞ்சும்.
சாதாரண கணிப்பொறி என்றவுடன் நாம் கண்களை மூடிக்கொண்டு அசம்பெல் பண்ணி வாங்கி விடுகிறோம். குறைந்த பட்ஜெட் வைத்திருப்போருக்கு அதுவே சாலச் சிறந்த வழி. ஏதேனும் பாகம் பழுதடைந்தால் கூட விற்பன்னரே கியாரன்டியில் அந்த பாகத்தை மட்டும் மாற்றி வாங்கி தருவார். இல்லையேல் குறைந்த விலைக்கு அதனை தனியே வாங்கி, அதுவும் உடனே வாங்கி பொருத்திவிடலாம்.
ஆனால் மடிகனினியில் இந்த எளிமை இல்லை. பிராண்டட் மடிகனினி தான் வாங்க முடியும். சாதாரண கணிப்பொறி போலில்லாமல் இது பழுதடைவதற்கான சாத்திய கூறுகள் மிக அதிகமாக இருக்கிறது. வெப்பம், தூசி, கீழே விழுதல் இதுவே மூல காரணம். அப்படி ஏதேனும் பழுது ஏற்படின் அந்த பாகத்தை மட்டும் தனியே வெளியே வாங்கி நாம் மாற்ற முடியாது. ஒரிஜினல் பாகம் தேவை. இதற்கு அந்த கம்பனியின் உதவி வேண்டும். இங்கே தான் நாம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
சேலத்தின் என் நண்பர் ஒருவர். இவர் ஆப்பில் பிரியர் (இது திங்கற ஆப்பிள் இல்லைங்னா). இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆப்பில் மாக் மடி கணினிதான் வேண்டுமென ஒற்றை காலில் நின்று பெங்களூர் சென்று வாங்கி வந்தார். ஆப்பில்’னு பேரு வச்சா ஒரு நாள் அழுகி தானே தீர வேண்டும். அந்த ஒரு நாள் வந்தது. முக்கியமாக ஒரு வேலைக்காக அதை ஆன் செய்தார். ஆன் ஆக வில்லை. பல முறை முயற்சித்தும் பலனில்லை. என்ன செய்ய?
தான் வாங்கிய அந்த ஆப்பிள் ஸ்டோருக்கு அலைபேசியில் அழைத்தார். அவர்கள் போனில் சொன்ன சில முறைகளை கையாண்டு பார்த்தார். பலனில்லை. சேலத்திலும் ஆப்பிள் சர்விஸ் சென்டர் இல்லை. உடனே எடுத்துக்கொண்டு ஓடினார் பெங்களூருக்கு.. ஒரு சின்ன பழுதிற்கு. இன்னொரு நண்பர் ஒருவருக்கு தன்னுடைய காம்பாக் லாப்டாப் பழுதடைந்து இருந்தது. அதை சரி செய்வதற்கு அலையோ அலை என்று பல நாட்கள் அலையவைத்ததை நான் பார்த்து இருக்கிறேன்.
இப்படி நிலைமை இருக்கும் இருக்கும் பட்சத்தில், மடிகணினியையே தினமும் சார்ந்து தொழில்/வேலை என்னை போன்றோர்களுக்கு அது பெரிய பிரச்னையாகவே இருந்தது. ஏதேனும் பழுது ஏற்படின் எங்கேனும் எடுத்துக்கொண்டு ஒடுவதில் எனக்கு இஷ்டமில்லை. அதே சமயம் பழுதடைந்த பாகத்தை மாற்ற ஓரிரு நாளுக்கு மேல் ஆகக்கூடாது. இரு வருடங்களுக்கு முன்னர் நான் என் முதல் மடிக்கணினியை வாங்கும்போது எனக்குள் உள்ளுக்குளே ஓடிக்கொண்டு இருந்த கேள்வி அது தான். ஆப்பில் மாக் புக், ஹெச்.பீ, டெல், விப்ரோ, சோனி, லெனோவா, காம்பாக், ஆசுஸ் போன்ற கம்பனிகளில் யார் சிறந்த சேவை வழங்குபவர்கள்?
பல கட்ட இணைய தேடலிற்கு பிறகு அன்று நான் எடுத்த அந்த முடிவு மிகச்சிறந்த முடிவாகவே நான் இப்போது கருதுகிறேன். இந்த மூன்று வருடங்களில் மட்டும் பல முறை எனக்கு தொலைபேசியில் அந்த மடிகணினி கம்பனியின் உதவி தேவைப்பட்டு இருக்கிறது, பல முறை அது பழுது பார்க்கப்பட்டு உள்ளது. பல முறை பாகம் மாற்றப்பட்டும் உள்ளது.
ஐம்பத்தி ஐயாயிரம் விலை போட்டு வாங்கிய என் மடி கணினியிற்கு இது வரை லச்சரூபாய்க்கு மேலே மதிப்புள்ள அளவிற்கு பாகங்கள் மாற்றப்பட்டு உள்ளது. எல்லாம் என் இருப்பிடத்தில் இருந்தே.. அதுவும் இலவசமாக. என்ன நம்ப முடியவில்லையா? ஏன், எதற்கு, எப்படி? அடுத்த பதிவில்…
“கெளதம் மேனன் சொன்னப்போ சிக்ஸ் பேக் கொண்டுட்டு வர கடுமையா வொர்க் அவுட் பண்ண ஆரம்பிச்சேன். அப்புறம் தான் என்னோட உடம்பு கொஞ்சம் கொஞ்சமா பலவீனமடைவது எனக்கே புரிஞ்சது. எல்லாருக்கும் என்னோட அட்வைஸ் ஒன்னே ஒன்னு தான். ஒரு அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர் இல்லாம யாரும் இதை முயற்சி பண்ண வேணாம்” – இது நடிகர் சூர்யா. வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் சிக்ஸ் பேக் ஆப்ஸ் பார்த்து வாயை பிளக்காதவர்களே இருந்திருக்க முடியாது.
இந்தி கஜினி திரைப்படத்திற்காக நடிகர் ஆமிர் கான் மெனக்கெட்டது கொஞ்சம் நஞ்சமில்லன்னு சொல்லலாம். ஒரு வருடம் ஜிம்மே கதின்னு கிடந்தார் மனுஷன். அதை ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் வீடியோ எடுத்தும் வச்சி இருந்தாங்க. மேக்கிங் ஆப் கஜினி மாதிரி, அந்த மேக்கிங் ஆப் சிக்ஸ் பேக் வீடியோ இதுதான்.
அப்புறம் நம்ம புரட்சி தளபதி(அவருக்கே அவரே வச்சிகிட்ட பேரு!) கூட அந்த காக்க காக்க ரீமேக் படத்துல சிக்ஸ் பேக் முயற்சி பண்ணினாரு. ஆனா பாவம், படம் ஊத்திக்கிட்டதுனால அது வேஸ்டா பூடுச்சு. அதுல உள்ள போன அவர் மார்க்கெட்டும், கன்னமும் இன்னமும் மேல வரவே இல்ல. இப்படி இந்திய சினிமா ஹீரோக்களால் சிக்ஸ் பேக் கடந்த சில வருடங்களாக கடை கோடி மக்கள் மத்தியில் கூட பிரபலமானது.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஜிம்மிலும் ஏதோ ஒரு நோக்கத்திற்காக தினமும் மணிக்கணக்காக மனிதர்கள் வியர்வை சிந்தி போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். சிலர் சிக்ஸ் பேக்கிற்கு, சிலர் எயிட்(!) பேக்கிற்கு ஆனால் பலரோ சிங்கிள் பேக்கிற்கு(ஹி ஹீ நானும் தான்). அதை நாம லஞ்ச் பேக்குனு கூட சொல்லலாம்.
அப்பேற்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த உடற்பயிற்சி மையத்தில் டம்மி பீசுகளும், காமடி பீசுகளும் சிலர் வந்து போவதை காண்பது தவிர்க்க இயலாதது.. அவர்களுக்கு தேவை சிக்ஸ் பேக்கோ, இல்லை உடல் எடை குறைப்பதோ தெரியாது ஆனால் அவர்கள் அதற்காக ஜிம்மில் நடத்தும் அரங்கேற்றம் சொல்லி மாளாது. அந்த மாதிரி நபர்கள் சில சமயம் என்ன செய்கிறார்கள் என்று கொஞ்சம் உற்று கவனிச்சா குபீர்னு சிரிப்பு வந்துடும்.. நானும் கடந்த இரண்டு மாதங்களாக ஒரு உடற்பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டு இருந்தேன். அப்போது நான் கண்ட அது மாதிரி சில நபர்களையும், நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.. ஓகே வாங்க ஜம்முனு ஜிம்முக்கு ஒரு ரவுண்டு போலாம்.
சென்ற முதல் நாளே நான் நோட்டமிட்டது என்னவென்றால் அங்கே ஒவ்வொருத்தர் காதிலும் ஒரு ஹெட் செட் தொங்கிக்கொண்டு இருந்தது. உடற்பயிற்சி செய்யும்போது ஹெட் செட் அணியக்கூடாது என்று ஏற்கனவே எங்கோ படித்த அந்த ஞாபகம் கொஞ்சம் நினைவில் வந்து போனது.. காதில் உஷ்ணம் அதிகரிக்குமாம். அதிலும் சிலர் உச்சக்கட்டம், ட்ரெட் மில்லில் ஓடும்போது செல்போனை காதில் வைத்துக்கொண்டு அரை மணி நேரம் யாரிடமோ(!) வருத்துக்கொண்டு இருப்பார்கள்.. பக்கத்தில் நாம் ஓடும்போது அதை காதில் கேட்கவே சகிக்காது… அங்க கூடவா மிஸ்டர்?
இன்னொரு வகையறாக்கள் இருக்கிறார்கள்… உடற்பயிற்சி செய்யும்போது போன் பேசக்கூடாது என்று அவர்கள் உணர்ந்து இருக்க வேண்டுமென நினைக்கிறன். அவ்வளவு நல்லவர்கள். அதனால் தானோ என்னவோ அவர்கள் ஜிம்மின் உள்ளேயே வருவதில்லை.. வெளியிலேயே போனும் கையும்மாக நிற்பார்கள். சில மணிநேரம் தொடர்ந்து பேசும் ஜாம்பவான்கள் நேரம் ஆகிவிடும் காரணத்தினால் உள்ளே வராமலேயே அப்படியே சென்று விடுவதையும் கண்டு இருக்கிறேன். தானும் ஜிம்முக்கு போகிறேன் என்பதற்காகவோ அவர்கள் வருகிறார்களோ என்னவோ. அப்படியே உள்ளே வருபவர்கள் விரல்களுக்கு வலிப்பு வந்தார் போல் எஸ்.எம்.எஸ். அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். அந்த பக்கம் பதில் அனுப்புபவருக்கும் வேறு வேலை வெட்டி இருப்பதாக தெரியவில்லை.
இன்னும் கொஞ்சம் பேரு…….. எலும்பும் தோலுமா, வத்தலும் தொத்தலுமா, அப்படின்னு சொல்லுவாங்களே, அந்த வகை பசங்க.. எல்லாம் சின்ன பசங்க. அதுல ஒருவன்.. அனேகமா ஏழாவது, எட்டாவது படிக்கணும்னு நெனைக்கிறேன். பாத்தாலே பாவமா இருக்கும்.. சாப்பிட்டு பத்து நாள் இருக்குமோனு தோணுற மாதிரி இருக்ககூடியவன். வெயிட் தூக்க முடியாம தூக்கறதும், அதுக்காக கஷ்டப்படுறதும் பார்க்க முடியவில்லை. எல்லாம் சிக்ஸ் பேக் சினிமா உசுப்பேத்தி விட்ட விடலைகள்.
இது கூட பரவாயில்லைங்க… இன்னொரு நாள். ஜிம்மில் கண்ணாடி பிம்பத்தில் அதை காண நேர்ந்தது.. தூண் மறைத்துக்கொண்டு இருந்ததால் அவரை நான் முழுமையாக காண முடியவில்லை. பக்கவாட்டில் தெரிந்த அவர் முகத்தை பார்த்தால் நிச்சயம் அவருக்கு வயது ஐம்பது அல்லது ஐம்பத்தி ஐந்து இருக்கலாம்.அவர் ஒரு உயரமான கம்பியை பிடித்து அசால்டாக மேலும் கீழும் தொங்கிக்கொண்டு இருந்தார்.
எனக்கு ஒரே ஆச்சர்யம். இந்த வயசுல என்ன ஒரு ஷ்டாமினா??? ஒவ்வொரு தொங்களுக்கும்.. ஒன்று.. இரண்டு.. மூன்று.. என்று அவர் எண்ணுவது வேறு என் காதில் வந்து விழுந்தது. சர்வசாதரணமாக இப்படி தொங்குகிறாரே மனிதர். நாமும் இருக்கிறோமே. அரைமணி நேரம் ட்ரெட் மில்லில் ஒடுவதற்கே….. ச்சே…
இவ்வாறு மனதில் புலம்பிக்கொண்டே கொஞ்சம் நகர்ந்து அவரை எதேச்சையாக பார்த்தேன்… அவர் இடுப்பை கையில் பிடித்தவாறு அவர் பின்னால் நின்று கொண்டு “டிரைனர்” அவரை மேலும் கீழும் தூக்கி விட்டுக்கொண்டு இருந்தார்…
என்னுடைய மாமாவின் கடைசி மூச்சிற்கு சரியாக இன்றோடு ஒரு வருடம் முடிவடைகிறது. புற்றுநோய்க்கு வயது வித்யாசம் தெரியுமா என்ன? முப்பத்தெட்டு வயதே உடைய மனிதரை அணு அணுவாய் சித்ரவதை செய்து கொலை செய்தது அந்த புற்று நோய். தான் சாகும் நாள் தெரிந்தே வாழ்வது தான் உலகத்தில் மிகபெரிய கொடுமை. அந்த மனவேதனையை சுமந்து கொண்டு இருப்பது சாமன்யமல்ல.
நிறைய உயிரிழப்புகளை நாம் நம் வாழ்கையில் சந்திக்க நேரிடுகிறது. ஆனால் நமக்கு மிகவும் நெருக்கமானவர்களின், மிகவும் விருப்பமானவர்களின் இழப்பு தான் நம் மனதை புரட்டி போடும். அந்த வகையில் இது என் வாழ்கையில் எனக்கு மிகவும் மறக்க முடியாத சம்பவம்.
என் வாழ்கையில் நான் நிறைய கற்றுக்கொண்டது அவர் இறப்பிற்கு பின்னரே. முதல் நாள், உயிருடன் இருக்கும் வரை நம்முடைய பெயர் நமக்கு சொந்தம். இரண்டாம் நாள், நாம் இறந்த பிறகு நம்முடைய பெயர் பிணம். மூன்றாம் நாளோ அதன் பெயர் ஹஸ்தி. இருக்கும் வரை உயர்திணையில் நம்மை அழைக்கும் இவ்வுலகத்திற்கு இறந்த பின் நாம் வெறும் அக்றினையே.
போட்டி, பொறாமை போன்றவைகள் மனிதனின் வெறும் அற்ப ஆட்டங்கள். ஆட்டம் அடங்கினால் அவன் இந்த உலகத்தின் வாழ்ந்ததற்கான சுவடுகள் கூட இருக்காது. காலம் அதை தேடிச்சென்று அழித்துவிடும். இறந்தபின் நமக்காக சிந்தப்படும் கண்ணீர்த்துளிகளும், அவர்களின் மனதில் எழும் நம்முடைய இழப்பும் தான் நாமும் இந்த உலகத்தில் வாழ்ந்ததற்கான அடையாளங்கள். அவர் எங்களுடைய நினைவில் நீடூழி வாழ்வார். அவருடைய ஆன்மா சாந்தி பெறட்டும்.
எனக்காக பிராத்தனை செய் சகோதரா - இதோ நான் பாடிய ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரு ஆங்கில பாடல் அவர் நினைவாக சமர்ப்பிக்கிறேன். இழப்புகள், அன்பு, கருணை, பரிவு என அனைத்தையும் இந்த பாடலில் உணர முடியும் என நினைக்கிறேன். கீழே அந்த ஆங்கில பாடலின் நான் எழுதிய தமிழாக்கத்தை காணலாம். அனைத்து புற்று நோயாளிகளுக்கும் சுகம் பெறவும், மக்களிடையே அன்பு மலரவும் பிராத்தனை செய்யுமாறு இந்த இடுக்கையை படிக்கும் அனைவரையும் வேண்டுகிறேன்.
என்னுடைய வாழ்கையின்
எல்லா கேள்விகளுக்கும்
பதிலை எதிர்நோக்கியிருக்கிறேன்
என்னை தனியாக விட்டுச்செல்வாயா
இல்லையேல்
என்னருகில் துணையாக இருப்பாயா?
இது ஏதேனும் அவனால் சொல்லப்பட்டதா?
இது ஏதேனும் அவனால் செய்யப்பட்டதா?
எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது…
அவன்
விடைகளை தேடிக்கொண்டு இருக்கிறான்
உயிருடன் இருப்பதற்கு.
சரியான நேரத்தில்,
ஒரே ஒரு தருணத்தில்,
ஒரு நிமிடமாவது,
உன் உள்ளம் சொல்லவதை பொருட்படுத்தி கேட்பாயா?
நம்மை சுற்றி சந்தோசம் நிறைந்து இருக்கிறது,
ஆனால் நமக்கு தேவையான அன்பை
அதில் எப்படி பார்ப்பது என்று எனக்கு காண்பி.
நாம் அன்புடன் இருக்கவேண்டியதற்கான
காரணத்தை தேடுகிறாயா?
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
எனக்காக பிராத்தனை செய் சகோதரி.
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
என்று அவன் சொன்னான்..
இப்போதே என்ன கூற விரும்புகிறாயோ கூறு
ஆனால் உன் மனதை திறந்து வைத்துக்கொள்.
இப்போதே நீ எப்படி இருக்க விரும்புகிறாயோ அப்படி இருந்துக்கொள்
குழப்பங்களை அனைத்தும் மறைந்து போகட்டும்..
என்னக்காக பிராத்தனை செய் சகோதரா.
நீ கொடுக்க விரும்பாத போது
என்னை எடுக்க விடாதே…
என்னை வாழவிடு
அது போதும்…
நீ கொடுக்க விரும்பாத போது
என்னை எடுக்க விடாதே…
என்னை வாழவிடு
அது போதும்…
சமீபத்தில் சேலத்தில் யாரும் இப்படி ஒரு மழையை பார்த்து இருக்க முடியாதென்று நினைக்கிறன். இரண்டு நாட்களாக மாலை வேளைகளில் அனைத்து மக்களையும் அவர்கள் இருக்குமிடத்திலேயே சிறைபிடித்து வைத்துக்கொண்டது. வீட்டில் இருப்பவர்கள் வீட்டுக்குள்ளேயும், கடைக்கு சென்றவர்கள் கடைக்குள்ளேயும் சில மணி நேரம் முடங்கி கிடக்க வேண்டியதாயிற்று.
நேற்று மாலை நான் ஏர்டெல் அங்காடிக்கு சென்று இருந்ததால் அங்கேயே மாட்டிக்கொண்டேன்.. இல்லை… தப்பித்து கொண்டேன் என்றே சொல்லலாம். பேய்மழைனு சொல்லுவாங்களே. அது போல இது குட்டி சாத்தான் மழைன்னு நினைக்கிறன். இரண்டு மணி நேரமே பேய்ந்தாலும் ஒரு கலக்கு கலக்கிடுச்சு. மழை நிற்கும் வரை கண்ணாடி சுவர் வழியாக வெளியே பார்த்துக்கொண்டே நேரத்தை கடக்க வேண்டியதாயிற்று.
பிறகு தான் தெரிந்தது மழையின் தாக்கம் .. தெரிஞ்சவங்க ஒருத்தங்க வீட்டு மாடி அறையில் பதிக்கப்பட்ட ஆஸ்புஸ்தாஸ் சீட் பக்கத்துக்கு வீட்டுக்கு பறந்து போயிடிச்சாம்… இன்னொருத்தங்க மாடியில காயப்போட்டிருந்த துணி மணி எல்லாம் எங்க போச்சுனே தெரியலயாம். அடுத்தநாள் சிலது மட்டும் பக்கத்துக்கு தெருவில் கிடைத்ததாக தகவல். அப்போ மீதி? ”போலீசுல கம்ப்ளைன்ட் பண்ணுங்கோ மாமி.. கண்டுபிடிச்சு கொடுப்பாங்க..”
இது நடந்தது நேற்று.. . இன்னைக்கும் அதே மாதிரி சாயங்கால நேரம். ஆறு மணி அளவிலேயே இருட்டிடுச்சு.. பயங்கர காற்று.. சரியாய் சொல்லனும்னா பி.சி.ஸ்ரீராம் படத்துல வர காட்சி மாதிரி இருந்துச்சு.. வெளியே போய் மாட்டிக்க கூடாதுன்னு உள் மனசு சொல்லுது.. வீட்டில் வேற யாரும் இல்ல. கரண்ட் காட்டானால் மாட்டிக்குவமேனு நினைக்கறதுக்குள்ளே.. டப்… கரண்ட் போயுடுச்சு..
நான்.. என் லேப்டாப்.. இன்னும் சிறிது நொடியில் உயிரிழக்க போகும் வைபை(Wi-Fi) இணைய தொடர்பு.. பீப்.. பீப்.. பீப். ஐந்து நிமிடம் “யுபிஎஸ்” கத்தி ஓய்ந்தது… இணையம் துண்டிக்கப்பட்டது. வீட்டிலேயே தனிமைசிறை… யாரும் இல்லையே என்ன செய்ய? வீடு வேறு ஒரே இருட்டாக இருக்கிறது. கதவை திறந்து வெளியே போகலாம் என்றால்,, ம்ம்ம்.. வெளியே கொஞ்ச நஞ்ச காற்றா? மழையை ரசிக்கலாம் என்று நினைத்தால் அதுவும் முடியவில்லையே..
ஆங். ஐடியா.. “ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது…” மெல்லிய சப்தத்தில் என் லாப்டாப்பில் இசைவித்தேன்.. கடந்த இரண்டு நாட்களாக நான் மிகவும் ரசித்து கேட்கும் வாமணன் திரைப்பட பாடல்.. இருள் சூழ்ந்த அறை.. தனிமை.. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த அந்த பாடல் இப்போது சற்று மேலும் மனதை வருடுகிறது..
நான் புதிதாக வாங்கிய என் கம்பியில்லா பிராட் பான்ட் இணைப்பு கருவியை(EV-DO Broadband Wireless Terminal) லேப்டாப் பில் சொருகி இணையதொடர்பு ஏற்படுத்திக்கொள்ள பார்த்தேன்.. கன மழையால் சிக்னல் சரியாக கிடைக்கவில்லை. என்ன செய்ய? இருட்டில் ஒவ்வொரு அறை ஜன்னலிலும் லாப்டாப்பை தூக்கிக்கொண்டு மெல்ல ஊர்ந்து ஊர்ந்து சென்றேன்.. விளக்கு வேறு பற்ற வைக்கவில்லை. ஒரே இருட்டு வேறு. ஒரு இடத்தில் மட்டும் கொஞ்சம் சிக்னல் கிடைத்தது.. சிறிய அளவில் ஜன்னலை திறந்து அருகிலேயே அமர்ந்து இணையத்தொடர்பை ஏற்படுத்திக்கொண்டேன்..
பிறகு என்ன? என்னதான் மழை பெய்தாலும்.. கரண்ட் கட்டானாலும்.. டெக்னாலஜி இருக்கு மாமே.. டெக்னாலஜி.. மனதிற்குள்ளே சொல்லிகொண்டே நான் என்னுடைய ப்ரொஜெக்டை தொடர்ந்து செய்துக்கொண்டு இருந்தேன்.. சுமார் அரைமணி நேரம் இருக்கும். மழை தண்ணீரில் காலை வைத்தது போல் ஜில்லென்று இருந்தது.. நான் கண்டுகொள்ளவில்லை.. மேலும் சில நிமிடங்கள் சென்று இருந்த வேலையில் என் கால்சட்டையும் நனைந்தது போல் ஒரு உணர்வு.. குனிந்து பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. அட என்னப்பா இது.. ஒன்றும் விளங்கவில்லையே.. கரண்ட் வரட்டும் பார்போம் என உள்மனது சொல்லியது…
கரண்ட் வந்தது.. ஆச்சர்யம் குறையாமல் கீழே குனிந்து பார்த்தேன். குட்டை போல் வீட்டின் ஒரு பகுதியே தண்ணீர் சேர்ந்துள்ளது.. ஆ.. ஆ .. எப்படி அது? மேல பார்த்தேன்.. கீழே பார்த்தேன்.. அட… கடவுளே.. இன்டர்நெட் சிக்னலுக்காக ஆர்வத்தில் ஜன்னலை சிறிது திறந்திருக்கிறேன்.. அது மெல்ல மெல்ல சத்தமில்லாமல் வீட்டை குளமாக்கிக்கொண்டு இருந்திருக்கிறது.. ஹய்யோ பிரவீன்… இப்படி சொதபிட்டயேடா? கம்முனு நல்லபிள்ளையா தூங்கி இருக்கலாமேடா.. இப்போ பீல் பண்ணி என்ன பண்றது.
பின் குறிப்பு : இந்த இடுக்கை தலைப்பின் அர்த்தம் இப்போது புரியுமே…
சில நாழிகைக்கு முன்பு JOOMLA எனும் ஒரு Content Management System முடைய FORUM மை பார்க்க நான் நேரிட்டது. அது முற்றிலும் ஒரு இணைய தளத்தை உருவாக்கி பயன்படுத்த உதவும் ஒரு மென்பொருளுடைய இணைய தளமாகும். அத்தகைய இணையத்தளத்தில் “தமிழ் குழுமம் (Tamil Translation)” என்று ஒரு தலைப்பை நான் பார்த்த மாத்திரத்திலேயே அதை ஆவலோடு படித்தேன். அதிகமாக ஆங்கில பயனாளர்கள் உலவும் அந்த தளத்தில் தமிழ் குழுமமா? எந்த தமிழனுக்கு தான் ஆவல் வராது அதை படிக்க?
தமிழில் விவாதிக்க, தூய தமிழில் எழுத முடியாத வார்த்தைகளை தமிழாக்கம் செய்து எழுத அனைத்து ஜூம்லா பயன்படுத்தும் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார் அந்த தமிழன்பர். நல்ல முயற்சி.. அடுத்து என்ன? வளர்ந்ததா தமிழ்? இல்லையப்பா… இல்லை… அடுத்த விவாதமே “எனக்கு தமிழ் எழுத்துக்கள் புரியவில்லை! யாரவது அவர் எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அனைத்து மொழிதரப்பினற்கும் பயன்படும்” என்ற தோணியில் எழுதப்பட்டு இருந்தது… என்ன கொடுமை சரவணன் இது??
“ஆங்கிலத்தில் எழுதாதீர்கள்… தமிழில் எழதுங்கள்” என்று எழுதவேண்டுமானால் , அதையும் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் போல இருக்கிறதே? அடேங்கப்பா. இதில் மேலும் கொடுமை என்னவென்றால் தமிழில் அழைப்பு விடுத்த அந்த நண்பரே ஆங்கிலத்தில் அதை மொழிபெயர்க்க வேண்டிய சூழ்நிலையில் இருந்துள்ளார். இதில் கவனிக்கத்தக்க விஷயம், கடைசி வரை தமிழயே அதில் காணவில்லை. பின்பற்றி எழுதிய அனைவரின் விரல்களில் இருந்து ஆங்கில எழுத்துக்களே சிதறியுள்ளது…
ஒரு பக்கத்தில், இலங்கையில் தமிழ் மொழியை கற்பிக்க விடாமல் ஒரு மொழியை அழித்து அதன் இனத்தை அழிக்க முயற்சி நடக்கும் வேலையில். தமிழனை திரட்டி தமிழில் இணையபக்கத்தில் எழுத வைக்க முடியவில்லை என்பது வேதனை அழிக்கக்கூடிய விசயமாக இருக்கிறது. தமிழை வளர்க்க தமிழனே முன்வராததால் தான் இன்னும் இணையத்தில் தமிழில் எழுச்சி மற்ற மொழிகளை காட்டிலும் மந்தமாகவே இருக்கிறது.
தமிழில் எழுத வாரீகளோ? தமிழில்!!!!!!
அட யாரவது வாங்கப்பா…..
நான் மிகவும் நேசித்த என் மாமாவின் இறப்பு , என் நம்பிக்கைக்குரிய ஒரு நட்பின் இழப்பு என்று என் வாழ்நாளில் மறக்க முடியாத வருடம் கடந்த வருடம். மின்சார தட்டுபாடு முதல், வேலை இழப்புவரை பல தரப்பட்ட மக்களின் வேதனைகளை குவித்து விட்டது இந்த 2008 ஆம் வருடம்.
இதோ அணைத்து துயரங்களையும் அள்ளிக்கொடுத்த அந்த வருடம் நிறைவு பெறுகிறது. இதோ… புதிய நம்பிக்கையுடன் வரவேற்போம் இந்த புத்தாண்டை.. அனைவருக்கும் இனிய வருடமாக இருக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன்… அனைவரும் செல்வசெழிப்புடனும், மனிதநேயத்துடனும் வாழ உளமாற வாழ்த்துகிறேன்…