Posts Tagged சேலம்

    நாடு கடந்த சேலம் – நக்கீரன் இதழில் எங்கள் பேட்டி

    “நாடு கடந்த சேலம்” என்னும் தலைப்பில் நக்கீரன் செப்டம்பர் 14, 2011 இதழில் எங்களுடைய முயற்சி பதிவு செய்யப்பட்டு உள்ளது!  மேலும் படிக்க கீழுள்ள படத்தை கிளிக் செய்து பெரிதாக்கவும். இம்முயற்சியில் எங்களுடன் இணைய ஆர்வமுள்ளோர் இவ்வலைப்பூவில் உள்ள “தொடர்பு கொள்க” பகுதியில் மூலம் எனக்கு செய்தி அனுப்பவும் அல்லது கீழே கருத்திடவும்.

    Nakkeran Salem 28 Project news

    இம்முயற்சியை பற்றிய மேலும் தகவலுக்கு கீழுள்ள பதிவுகளை வாசிக்கவும்.
    1. சேலம் 28 – ஆனந்த விகடனில் வெளியான என் பேட்டி
    2. சகோதர சேலம் நகரங்களை இணைப்போம் வாரீர்!

    Share

    சேலம் 28 – ஆனந்த விகடனில் வெளியான என் பேட்டி

    “சேலம் 28 – சேலங்களைத் தேடி ஓர் உலக உலா!” - உலகம் முழுக்கப் பரவி இருக்கும் சேலங்களைக் கண்டுபிடிக்க கிளம்பி இருக்கும் பிரவீன்குமாரின் முயற்சிக்குச் சூட்டியிருக்கும் பெயர் இது! உலகம் முழுக்க சேலம் என்கிற பெயரில் இருக்கும் ஊர்களைத் தேடிப் பிடித்து அங்கு உள்ளவர்களுடன் ஒரு வலைப் பின்னல் ஏற்படுத்தும் முனைப்போடு செயல்படுகிறார் பிரவீன்குமார்.

    ”ஊர்ப் பாசம் அதிகம் எனக்கு. சொந்த மண்ணை விட்டுப் போக மனசு இல்லாமல் வெளியூரில் கிடைச்ச நல்ல வேலையை ஏத்துக்கவே இல்லை. ஏற்கெனவே பாலசுந்தரம்னு ஒருத்தர் 1960-ல் சேலத்தைப் பத்தி ஆராய்ச்சிப் பண்ணி இருக்கார்னு கேள்விப்பட்டு அவரைச் சந்திச்சேன். ‘உலகம் முழுக்க பல நாடுகள்ல சேலம்ங்கிற பேர்ல ஊர்கள் இருக்குது. அந்த ஊர்களில் வசிக்கும் முக்கிய நபர்களை எல்லாம் ஒருங்கிணைச்சு ஒரு இணைப்புப் பாலத்தை ஏற்படுத்த முயற்சி செஞ்சேன். என்னால் முடியலை. வயசாயிடுச்சு. நீயாவது செய்’னு சொன்னாரு.

    அவரை மானசீக குருவா ஏத்துக்கிட்டு உலகத்துல சேலங்களைத் தேட ஆரம்பிச்சேன். அமெரிக்காவில் மட்டும் சேலம் என்கிற பேரில் 24 ஊர்கள் இருக்குது. தென் ஆப்பிரிக்கா, சுவீடன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் தலா ஒரு ஊர் இருக்கு. கணக்குப் போட்டுப் பார்த்தா, நம்ம ஊரோடு சேர்த்து உலகத்துல 28 சேலம் இருக்கு. இந்த 28 சேலத்தையும் ஒரு வட்டத்துக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கி இருக்கேன்.

    praveen salem 28 vikatan interview

    அமெரிக்காவின் ஓரிஸான் மாகாணத்தைச் சேர்ந்த சேலத்தில் இருக்கும் ஜர்னலிஸ்ட் டிம்கிங் என்பவர் அறிமுகம் ஆனார். அவருக்கும் என் ஐடியா பிடிச்சுப் போயி என்னோடு கைகோத்துக்கிட்டார். சீக்கிரமே நம்ம சேலத்துக்கு அவர் வரப் போறார். நம்ம சேலத்து மக்களின் வாழ்க்கை முறை, கலாசாரம் போன்றவற்றை ஒரு குறும்படமாக இயக்கி  அவங்க ‘சேலத்தில்’ ஒளிபரப்பும் திட்டத்தோடு வர்றார்.

    இதனால் என்ன லாபம்னு நீங்க கேட்கலாம். எல்லா சேலத்திலும் இருக்கும் சமூக சேவகர்கள், வர்த்தகர்கள்,  அதிகாரிகள் போன்ற பிரபலங்களை ஒருங்கிணைச்சா எவ்வளவு நல்லா இருக்கும். அந்நகர மக்களுக்குள்ள நட்பு உணர்வு ஏற்படும். வர்த்தகரீதியிலான தொடர்பில் துவங்கி கலாசாரப்  பகிர்தல் வரை ஏகப்பட்ட நன்மைகள் உண்டாகும். இந்த அமைப்புக்கு ‘மை சேலம்’னு பேருவெச்சிருக்கோம்.  இந்த அமைப்பில் சேர ஒரே தகுதி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

    www.salemjilla.com என்ற தளத்தில் சேலம் பற்றிய செய்திகள், புகைப்படங்களை தினமும் அப்டேட் பண்ணிட்டே இருப்போம். இப்போ உலகம் முழுக்க இருக்கும் சேலங்களை பத்தின செய்திகளையும் கொண்டுவரப் போறோம். எங்கேயும் சேலம்… எப்போதும் சேலம்… இதுதான் எங்க தாரக மந்திரம்!” சிலாகிக்கிறார் பிரவீன்.

    - நன்றி “ஆனந்த விகடன் (10/08/2011) – என் விகடன்”

     

    பெரிது படுத்தி பார்க்க கிளிக் செய்யவும்.

    Praveen salem 28 vikatan interview coverPraveen salem 28 vikatan interviewPraveen salem 28 vikatan interview 1

    Share

    சகோதர சேலம் நகரங்களை இணைப்போம் வாரீர்!

    சேலம்  டூ சேலம்: உலகில் உள்ள அனைத்து சேலம் நகரத்தையும் இணைக்க நட்பு பாலம் அமைப்போம் வாரீர்.

    நம் நகரம் போலவே, சேலம், அமெரிக்காவில் 24 பிற மாகாணங்களிலும் உள்ளது. அது மட்டுமில்லாமல், சேலம் என்று பெயரிடப்பட்ட நகரங்கள்  ஸ்வீடன், ஜெர்மனி, மற்றும் தென் ஆப்பிரிக்காவிலும் கூட உள்ளது. மற்றுமொரு சுவாரசியமான  தகவல் என்னவென்றால், அமெரிக்காவில் ஒரிஜான் மாகாணத்தில், நம் தமிழகத்தின் மதராஸ்( தற்போது சென்னை) போலே மற்றொரு நகரும் பெயர் கொண்டுள்ளது.

    1960இல் அமெரிக்காவின் ஒரிஜான் மாகாணத்தின் நூலகரும், ரோட்டரி சங்க உறுப்பினருமான திரு ஹக் மாரோ, மற்றும் தமிழக சேலத்தில் நன்கு அறியப்பட்ட நூலகரான டாக்டர் புஸ்நாகி ராஜண்ணன் இருவரும் சேர்ந்து இரு நகரங்களை இணைக்க “சகோதர நகரம்” திட்டத்தை நடைமுறை படுத்த முற்பட்டனர்.

    1962இல் டாக்டர் ராஜண்ணன்  அமெரிக்காவின் ஒரேஜான் மாகாணத்தில் உள்ள சேலத்திற்கு சென்ற போது அங்குள்ள ரோட்டரி உறுப்பினர்களும், நகர முக்கியஸ்தர்களும், செனட்டர்கள், மற்றும் ஓரிகான் மாநில கவர்னரரும்அவரை வரவேற்று உபசரித்தனர். தனது விஜயத்தின் போது, டாக்டர் ராஜண்ணன் அமெரிக்க சேலத்தில் ஆற்றிய தனது உரையில் இரு நகரங்களையும் இணைக்கும் முக்கியத்துவத்தை தெரிவித்தார்.

    salem sister cities
    இந்த கூட்டத்தில் இரண்டு நகரங்களும்  சகோதர நகரங்கள் என முறையாக அறிவிக்கப்பட்டது. 1964இல் அமெரிக்காவின் ஒரிஜான் மாகணத்தின் சேலம் மேயாரான திரு வில்லராட் சி மார்ஷல் தனது குடும்பத்துடன் தமிழ்நாட்டில் உள்ள சேலத்திற்கு வருகை புரிந்தார். அப்போது இங்குள்ள ரோட்டரி சங்க உறுப்பினர்கள், பொது மக்கள், கலெக்டர், நகராட்சி தலைவர் மற்றும் நகர கவுன்சிலர்களின் உட்பட முக்கிய அதிகாரிகள் அனைவரும் அவரை வரவேற்றனர்.

    அவர் அமெரிக்க திரும்பிய பிறகு “சகோதர நகரங்கள் ஒருங்கிணைப்பு குழு” ஒன்றை அங்கு தொடங்கிவைத்தார். அதன் பிறகு, நம்முடைய சேலத்தின் தொழிலதிபரும், ரோட்டரி சங்க உறுப்பினருமான ஜே.ஆர்.மெஹதா நம் சகோதர நகரமான ஒரிஜான் மாகணத்தின் சேலத்திற்கு சென்று அவர்களின் விருந்தோம்பலை ஏற்று அவர்களிடம் நம் நல்லெண்ணங்களை தெரிவித்துவிட்டு வந்தார்.

    எதிர்பாராவிதமாக இந்த பயணங்களுக்கு பிறகு சகோதர நகர திட்டத்தை  தொடர முடியாமல் போயிற்று. ஆதலால் டாக்டர் பி.ராஜண்ணன் அவர்கள் தமிழக சேலத்தையும் மற்ற சேலத்தையும் இணைக்க ஏற்படுத்தப்பட்ட முயற்சி ஒரு முன்னோடியாக இருக்கிறது.

    இப்போது, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக, முன்னால் சேலம்வாசி, தர்மபுரி திரு கே.பால சுந்தரம் அவர்கள், உலகில் உள்ள அனைத்து சேலம் நகரங்களை இணைப்பதை தனது வாழ்நாள் நோக்கமாக கொண்டு அதற்காக முழு ஈடுபாட்டோடு முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார்.  1963 முதல், அவர் சர்வதேச-சகோதர-நகர அமைப்பு (www.sister-cities.org) மற்றும் மக்களுடன்-மக்கள் தொடர்பு (www.ptpi.org) அமைப்புடன் இணைந்து இந்தியா மற்றும் அமெரிக்கா சேலத்தின் உள்ளூர் பத்திரிகைகளில் அவரது எழுத்துக்களின் மூலம் இந்த பணியை செய்து கொண்டு இருக்கிறார்.

    tim king

    அவரது இந்த முயற்சியின் பலனாக, அமெரிக்காவின் ஒரிஜான் மாகணத்தில் உள்ள சேலத்தின் பிரபல தொலைக்காட்சி நிருபரும், பத்திரிக்கையாளருமான திரு. டிம் கிங் அவர்களின் தொடர்பு கிடைத்தது. அவர் www.Salem-News.com  எனும் பிரபல இணையதளத்தின் நிறுவனரும் ஆவார்.

    அனைத்து சேலம் நகரங்கள் இணைக்க ஒருவருக்கொருவர் இடையிலான பரஸ்பர ஆர்வம் காரணமாக, திரு. டிம் கிங் அவர்களை தமிழக சேலத்திற்கு மரியாதை நிமித்தமாக விஜயம் செய்யவும், நம் நகரத்தை பற்றிய ஆவண படமொன்றை எடுக்கவும் அழைப்பு விடுத்து இருந்தார். இந்த ஆவணப்படம் ஒரிஜான் மாகணத்தின் சேலம் நகரம் உட்பட பிற மாநிலங்களான அலபாமா, ஆர்கன்சாஸ், கனெக்டிகட், இல்லினாய்ஸ், இண்டியானா, அயோவா, கென்டக்கி, மாஸ், மிசவுரி, நியூ ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி, நியூயார்க், ஓகியோ, தென் கரோலினா, உட்டா, விர்ஜினியா, மேற்கு வர்ஜீனியா, விஸ்கான்சின், மிச்சிகன், மினசோட்டா, பென்சில்வேனியா, வட கரோலினா, ஒன்டாரியோவில் உள்ள அனைத்து சேலம் நகரங்களிலும் திரையிட திட்டமிடபட்டுள்ளது.

    praveen bala arasu

    இந்த முயற்சியை ஆதரித்து, அவருக்கு உறுதுணையாக www.Salemjilla.com இணையதள நிறுவனரும், இணைய தொழில்முனைவருமான திரு.பிரவீன் குமார் அவர்களும் மற்றும் சேலம் லீ பஜாரில், விதை ஏற்றுமதி இருக்குமதி செய்துவரும் ஆறுமுக பண்டாரம் நிறுவனத்தின் தொழிலதிபருமான திரு. திருநாவுக்கரசு அவர்களும் திரு.கே.பால சுந்தரம் அவர்களோடு இணைத்து உள்ளனர். இதில் முதல் கட்டமாக அமெரிக்க ஒரிஜான் மாகணத்தின் பிரதிநிதியாக திரு.டிம் கிங் அவர்களை அழைக்க ஒரு குழுவை அமைக்கும் வேலை தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த முயற்சி மூலம் அமெரிக்க மற்றும் இந்திய சேலம் மக்களின் நட்புறவும், ஒத்துழைப்பு ஊக்கபடுவது மட்டுமல்லாது அனைவருக்கும் இடையே தொழில் முறை தொடர்பு கொள்ளவும், திறமையை உருவாக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதன் நோக்கமே சேலம் நகரம் உள்ள அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளில் உள்ள இதே எண்ணங்கள் உடைய மக்களையும், நிறுவனங்களையும் தொடர்பு ஏற்படுத்தி இணைப்பதேயாகும்.

    இந்த நோக்கம் நிறைவேற உருவாக்கப்படும் குழுவில் இதில் ஈடுபாடு இருக்கும் தனி நபர்களும், தொழிலதிபர்களும், நிறுவனங்களும் யார் வேண்டுமாலும் இணையலாம். இந்த குழுவின் மூலம் திரு டிம் கிங் அவர்கள் வந்து செல்வதற்கான நிதியை திரட்டவும், அவருடைய சேவையை முடிந்தவரையில் பயன் படுத்தி நம்முடைய சேலத்தை பற்றிய ஆவணப்படங்களை மற்ற சேலத்தில் திரையிடப்படவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

    இந்த ஆவணப்படத்தில் நம் சேலத்தின் வரலாற்றையும், கலாச்சாரத்தையும், பலதரப்பட்ட தொழில் சமூகங்களும், பல்வேறு தொழில் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும், சுற்றுலா தளங்களும், அருங்காட்சியகம், கலை மற்றும் விளையாட்டுகளும் பதிவு செய்யப்படும். இந்த திட்டத்திற்கான முயற்சி லாப நோக்கமற்று, வியாபார நோக்கமற்று முற்றிலும் நம்முடைய சேலத்தை சர்வதேச அளவில் எடுத்துச்சென்று உலக மக்களிடைய நட்புக்கொள்ளச்செய்வதே ஆகும். இது நிச்சயம் வணிக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் வெளி உலகில் இருந்து ஒத்துழைப்பு பெற்று பயன்பெற உதவும்.

    sister cities international

    இதில் இணைத்து பணியாற்ற நம்முடைய சேலத்தில் ஆர்வம் உள்ள மக்கள், நிறுவனங்களை வரவேற்கிறோம். தொடர்பு கொள்ள திரு.அரசு மொபைல்: 9443247822 மின்னஞ்சல்: vaparasu@gmail.com, திரு பிரவீண்: 9894834151 மின்னஞ்சல்: praveen @ salemjilla.com
    திரு.பால சுந்தரம். மொபைல்: 95 246 59 164 மின்னஞ்சல்: kbsundram@yahoo.co.in இதற்கு கிடைக்கப்பெறும் ஆதரவு மற்றும் பதிலை பொறுத்து, குழு அமைத்து இந்த திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கூட்டம் ஏற்பாடு செய்யப்படும்.

    Share

    ஊழலுக்கு எதிரான பாரதம் – சேலத்தின் குரல்

    India Against Corruption Movement In Salem

    அன்னா ஹசாரே அவர்களின் “ஊழலுக்கு எதிரான பாரதம்” என்ற போராட்டத்திற்கு ஆதரவாக சேலத்தின் பிரபல கல்வியாளர், சமூக ஆர்வலர் திரு.ஜெயப்ரகாஷ் காந்தி அவர்களின் தலைமையில் 17 ஏப்ரல் அன்று கருத்தரங்கம் நடைபெற்றது. முன்னூறுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு வந்து இதற்கு ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு தரப்பட்ட மக்களும், சங்க நிர்வாகிகளும், தியாகிகளும், சமூக ஆர்வலர்களும் இதில் கலந்துகொண்டு ஊக்குவித்தனர்.  இதில் எழுபத்தைந்து சதவிகிதம் பேர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    அன்னா ஹசாரே அவர்களின் கொள்கையை ஆதரித்து அனைவராலும் கையொப்பம் இடப்பட்டு “ஊழலுக்கு எதிரான பாரதம்” தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கடுத்து அதனின் நகல், இந்தியாவின் பிரதம மந்திரிக்கும், குடியரசு தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. தியாகிகளும், பெரியோர்களும் பேசிய அந்த மேடையில் அவர்களுக்கினையான போதிய அனுபவம் இல்லாவிடினும் ஊழலற்ற இந்தியாவை உருவாக்க ஆதரவாக நானும் என்னுடைய எண்ணங்களை பதிவு செய்தேன். நான் பேசியவற்றை அப்படியே இங்கு எழுத்துக்களாய் பதிவிக்கிறேன் .

    praveen speaking at India Against corruption, Salem

    அனைவருக்கும் என் காலை வணக்கம்,
    இங்கு வந்திருப்பவர்கள் அனைவரிடமும் ஒரே ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுறேன். உங்கள் வாழ்நாளில் இதுவரை  உங்களிடம் லஞ்சமே கேட்கபட்டதில்லை என்று உங்களில் யாரவது இருக்கிறீர்களா? அப்படி இருந்தால் தயவு செஞ்சு கொஞ்சம் கையை உயர்திக்காட்ட முடியுமா? – மேடையில் இருப்பவர் கூட.

    அடுத்த  தலைமுறையில் இந்த கேள்விக்கு எல்லாருமே கையை தூக்க வேண்டும். அந்த ஒரு முக்கிய நோக்கத்திற்கு தான் நாம் அனைவரும் இங்கு ஒன்று கூடி இருக்கிறோம்.

    நான் என் வாழ்வில் சந்தித்த ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வாழும் என்னுடைய Relative ஒருவருக்கு இரண்டு  பிள்ளைகள். எதிர்பாராதவிதமாக பிறக்கும்போதே  இரண்டு பேரும் ஊனமுற்றவர்களா பிறந்துவிட்டார்கள்..  மூளை வளர்ச்சி குன்றிய முதல் மகனையும், வாய்பேச இயலாத இளைய மகனையும் நல்லமுறையில் வளர்ப்பதற்கு அரசின் ஊனமுற்றோரின் உதவித்தொகை அவர்களுக்குதேவைப்பட்டது.

    அதற்காக தன்னுடைய மகன்களுக்கு ஊனமுற்றோர் சான்றிதல் பெற அதற்கான அலுவலகத்திற்கு அவங்க தாயார் போனாங்க. அந்த அலுவலரோ, சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்றது மட்டுமல்லாமல், அரசு வழங்கும் உதவித்தொகை மாத மாதம் சிறிது லஞ்சமாக பெற்றபிறகே வழங்கிஇருக்கிறார். இதில்  வருத்தமான விஷயம் என்னவென்றால் அந்த அலுவலரும் ஒரு ஊனமுற்றவரே. ஆயிரம், லட்சம், கோடினு தினமும் ஊழல் நடப்பதை நான் செய்தித்தாளிலேயும், தொலைகாட்சியிலும் பார்த்தாலும் இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. இங்கு அந்த நபர் உடல் ஊனமுற்றிருந்தாலும், அவரை மனம் ஊனமுற்றவராகவே நான் பார்கிறேன்.

    இந்த லஞ்சம், ஊழல் என்பது கீழ்நிலையில் இருந்து மேல்நிலை வரை ஒரு வைரஸ் மாதிரி நம் நாட்டில் பரவி இருக்கிறது. ஒருகுழந்தை பிறக்கும்போது “Birth Certificate” வாங்குவதில் தொடங்கி, வாழ்ந்து முடித்து  “Death Certificate” வாங்குவது வரைக்கும் லஞ்சம் தேவைப்படுது. ஒரு computerக்கு எப்படி virus அழித்துவிடாமல் பாதுகாக்க Anti-Virus Softwareதேவைப்படுதோ அதுபோல நாம் நாட்டை Corruption அழித்து விடாமல் பாதுகாக்க நிச்சயம் இந்த “Anti-Corruption Movement” தேவை.

    அன்னா ஹசாரே எழுப்பிய அந்த நம்பிக்கை அலை இன்று சேலத்தில் ஜெய பிரகாஷ் காந்தி அவர்களின் மூலமாக வந்தடைந்து இருக்கிறது. லஞ்ச ஊழலை எதிர்த்து இன்று நாம் குரல் எழுப்புவதோடு மட்டும் நின்றுவிடாமல்  இதை ஒரு  போரமாக (Forum’) பதிவு செய்து தமிழக அளவில் ஒரு இயக்க சக்தியாக மாற்றவேண்டும். தமிழகம் முழுவதும் எங்களை போன்ற நிறைய இளைஞர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை ஒன்று திரட்டி ஒவ்வொரு ஊரிலும் இந்த போராட்டத்தை நடத்தவேண்டும்.  எல்லா ஊர்களையும் இணைத்து சேலத்தை மையமாக கொண்டு இந்த இயக்கம் இயங்க வேண்டும் என்று என் கருத்தை நான் இங்கு பதிவு செய்றேன்.

    இதற்கு அனைத்து மாவட்டத்தில் இருந்தும் உதவ நண்பர்கள் முன்வரவேண்டும். அனைவரையும் இந்த நோக்கம் சென்றடைந்து ஒன்று திரட்ட மீடியா, பிரஸ் சாப்போர்ட் கண்டிப்பாக தேவை. சேலம்ஜில்லா.காம் (Salemjilla.com) என்ற இணைய தளம் மூலமாக நாங்களும் இந்த நோக்கம் நிறைவேற உறுதுணையாக இருக்கிறோம்.
    எதிர்வரும் காலத்தில் என்னுடைய மகனோ மகளோ லஞ்சம் என்றால் என்ன அர்த்தம்னு டிக்சியனரியில் (Dictionary)  மட்டும் தான் பார்க்க முடியும்னு  ஒரு சூழல்  உருவாகும் என நான் நம்புகிறேன்.

    நன்றி வணக்கம்.

    அனைத்து பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் இந்த கருத்தரங்கை பதிவு செய்து வெளியிட்டு ஆதரவளித்தது. இதில் பாலிமர் சானலின் செய்தி வெளியீட்டை கீழே காணலாம்.

    Share

    ஜெயா டீவியில் ஒளிபரப்பான என் முதல் நேர் காணல்

     

    Praveen Kumar C In Jaya T.V

    ஜனவரி 26, 2011 அன்று சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள ஜெயா டீ.வி அலுவலகத்தில் நுழைகிறேன். ஏதோ ஒரு ஐ.டி கம்பனியில் நுழைந்த ஒரு எண்ணத்தை தோற்றுவித்தது அங்கே இருந்த பாதுகாவலர்களின் அணுகுமுறையும், அதன் அலுவலகத்தின் நுழைவாயிலும். குடியரசு தினம் என்பதாலோ என்னவோ அன்று அவர்களின் வரவேற்பறையில் நடமாட்டம் கொஞ்சம் கம்மியாக இருந்திருக்க வேண்டும். சிறிது உரையாடலுக்கும், சிறிது காத்திருத்தலுக்குப் பின்பு நான் உள்ளே ஸ்டுடியோவிற்குள் அழைத்துச்செல்லப்படுகிறேன்.

    சேலம்ஜில்லா.காம் என்ற இணைய தளத்தின் நிறுவனர் என்பதாலும், கூகிள் சான்றளிக்கப்பட்ட  ஆட்வோர்ட்ஸ் நிபுணர் என்பதாலும் அதை பற்றி “தகவல்டெக்” என்ற நிகழ்ச்சிக்காக கலந்துரையாட வந்ததுதான் இந்த அழைப்பு. எதை பற்றி பேச போகிறோம், என்ன கேள்வி கேட்கப்படும் என்று எதுவுமே என்னிடம் கூறப்படவில்லை. குளிரூட்டப்பட்ட நிசப்தமான அறை. எனக்கான இடத்தில் அமர்த்து மைக் மாட்டப்பட்டு குரல் சரிபார்க்கப்படுகிறது. பளிச்சென்ற வெளிச்சம். மூன்று காமிராக்கள் என்னையே நோட்டமிடுகிறது. இது முகப்புதிது எனக்கு.

    உள்ளே நுழையும் வரை என் மனதுக்குள் ஓடிக்கொண்டு இருந்தது இது தான். முதன் முறை காமிரா முன்பு அமர்கிறோம், சரியாக வருகிறதா என்று இரு நிமிடம் மானிடர் பார்ப்பார்கள் என எண்ணினேன். ஒவ்வொரு கேள்விக்கும் இடையே என்னை நான் தாயார் செய்துக்கொள்ள அவகாசம் கிடைக்கும் என நினைத்தேன். பதிலளிக்கும் போது ஏதேனும் தவறு நேர்ந்தால் மீண்டும் அதை பதிவு செய்வார்கள் என கருதினேன். ஆனால் அவற்றிற்கு எதுவும் வாய்ப்பளிக்காமல் “ரெடி, ஸ்டார்ட்” என்று மட்டும் தான் வந்தது ஒரு குரல்.  காமிரா  ஓடத்துவங்குகிறது. நிசப்தம் உடைகிறது. நினைத்ததிற்கு முற்றிலும் நேர்மாறாக  ஒரே டேக்கில் பதிவு செய்யப்பட்டது முழு நேர்காணலும்.

    அதில் பிப்ரவரி 09 அன்று ஒளிபரப்பான சேலம்ஜில்லா.காம் பற்றி நான் பேசியதன் முதல் பகுதி தான் உங்கள் பார்வைக்கு இங்கே. பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!

    பின்குறிப்பு: என் முதல் தொலைக்காட்சி நேர்காணலிற்கு வாய்ப்பளித்த நிகழ்ச்சியாளர் பழனி அவர்களுக்கும், ஜெயா தொலைக்காட்சிக்கும் என் நன்றிகள்.

    Share

    மற்றவர்களுக்கு உதவும் முன்னர் முதலில் இதை படிங்க

    Salem-central-bus-stand

    இன்று மாலை ஐந்து மணி இருக்கும். சேலம் மத்திய பேருந்து நிலையம் நுழைவாயிலை சிறிது தூரம்தாண்டி காரை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு கீழே இறங்கினேன். சாலையை கடந்து எதிர்புறம் ஒரு கடைக்கு நான் செல்லவேண்டும். இரண்டு அடி முன்னே எடுத்து வைக்கும்போது ஒருவர்  என்னை அழைக்கும் குரல் கேட்டது.. மீண்டும் பின்னோக்கி நடந்து அவர் அருகில் சென்றேன். அந்த நபரை பார்க்க முப்பது சொச்சம் வயது இருக்கும். என்னவென்று கேட்டேன்?… இந்தி தெரியுமா என்று இந்தியிலேயே கேட்டார் அந்த நபர்.. கேட்ட மாத்திரத்திலேயே அவர் ஏதோ விலாசம் தெரியாமல் தடுமாறுவது போல் நான் உணர்ந்ததால், கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்று உடைந்த இந்தியில் பதிலளித்தேன்.

    அதை கேட்டதும் இரண்டு நிமிடம் தொடர்ந்து இந்தியிலேயே ஏதேதோ பேசினார்.. ஆனால் அது எனக்கு முழுதாக புரியவில்லை. ஆங்கிலம் தெரியுமா என்றேன்? தெரியவில்லை… இருப்பினும் அவர் பேசியதின் நடுவில் உதிர்த்த சில சொற்களை வைத்து நான் புரிந்து கொண்டது இதுவே… “தான் மும்பையில் இருந்து வருவதாகவும், கன்னியாகுமரி சென்று கொண்டிருக்கும்போது ரயிலில் தான் கொண்டுவந்த நான்காயிரம் ரூபாய் பணத்தை யாரோ களவாடிவிட்டதாகவும் கூறினார்”. பின்பு தனக்கு பசிப்பதாகவும் காலையில் இருந்து உணவருந்தவில்லை என்பது போல் தன் வயிற்றை தொட்டு பார்த்து காட்டினார். இரண்டு, மூன்று தடவை அவர் திரும்ப திரும்ப இதை கூறியதால் தான் என்னால் இவ்வளவும் புரிந்து கொள்ள முடிந்தது.

    எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. என்னிடம் என்ன உதவி எதிர்பார்கிறார்கள் என்றும் புரியவில்லை. நான் பேசியதும் அவருக்கும் புரியவில்லை. அப்போதுதான் கவனித்தேன், அருகில் ஒரு பெண்மனியும், ஒரு சிறுவனும் மற்றும் ஒரு சிறுமியும் நின்று கொண்டிருந்தனர். சிறுவனின் முதுகில் பேக் மாட்டி இருந்தான். அந்த சிறுமி அந்த பெண்மணியின் கையை பிடித்தவாறு நின்றிருந்தாள். அந்த பெண்மணி என்னிடம் தன்னை என் சகோதரி போல் நினைத்துக்கொள்ள சொல்லி ஏதோ இந்தியில் பேசியது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த சிறுமியை பார்த்தேன். அதன் கண்ணில் கண்ணீர் வழிந்துகொண்டிருப்பதை நான் கண்டதும் எனக்கு என்னவோ போல் ஆயிற்று.

    உங்களுக்கு நூறு ருபாய் தருகிறேன் முதலில் போய் டிபன் சாப்பிடுங்கள் என்று அருகில் இருந்த ஹோட்டலை நோக்கி காண்பித்து அவர்களுக்கு புரிவித்தேன். என்ன நினைத்தேனோ தெரியவில்லை உடனே இருநூறு ருபாய் அவர் கையில் கொடுத்து அந்த சிறுமிக்கு உணவளிக்குமாறு மீண்டும் கூறினேன். ஆனால் அந்த நபரோ மகாராஷ்டிரா போக டிக்கெட் வேண்டும் என்றும், ஒரு டிக்கெட் இருநூற்றி இருபது ருபாய் என்றும் மேலும் இருநூறு ருபாய் கொடுத்து உதவுமாறு கேட்டார்.  இங்கே எனக்கு மொழி பிரச்சனை யாரும் உதவமுன்வரவில்லை என்று என் கையை பிடித்து கெஞ்சினார். உங்களுடைய விலாசத்தை தாருங்கள் ஊருக்கு போய் பணம் அனுப்புகிறேன் என்றும் கூறினார்.

    எனக்கு இந்த நொடியும் என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த பெண்மனியும் இந்தியில் தொடர்ந்து கெஞ்சினார். அந்த சிறுமியை பார்த்தேன். அதன் கண்ணில் கண்ணீர் ஈரம் இன்னும் காயவில்லை. என்னை பரிதாபத்தோடு அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். மனம் கனத்தது.  ஒரு நொடி கூட யோசிக்கவில்லை, மேலும் முந்நூறு ருபாய் கொடுத்துவிட்டு, இதில் மொத்தம் ஐநூறு இருக்கிறது, குழந்தைக்கு முதலில் சாப்பாடு வாங்கி கொடுத்து விட்டு  பஸ்சில் ஊர் செல்லுங்கள் என்று கூறினேன். மிகவும் நெகிழ்ச்சியுடன் அவர்கள் என்னுடைய பணத்தை திரும்ப அனுப்புவதற்காக என் விலாசத்தை மீண்டும் கேட்டனர். நான் பரவாயில்லை பணம் வேண்டாம், பத்திரமாக  ஊருக்கு செல்லுங்கள் என்றேன். என் கையை பிடித்து இந்தியில் மீண்டும் ஏதோதோ கூறி. காட் ப்ளஸ் யூ என கடைசியாக ஆங்கிலத்தில் கூறிவிட்டு சென்றார்.  அவர்கள் நால்வரும் நிம்மதிபெருமூச்சுடன் புன்னகையை முகத்தில் சுமந்தவாறு பேருந்து நிலையத்தை நோக்கி நடப்பதை பார்த்த போது என் மனதில் அவ்வளவு சந்தோஷம். மற்றவர்களுக்கு எதிர்பாரமால் உதவி செய்து அவர்களின் முகத்தில் சந்தோசத்தை காணும் அந்த தருணம் எத்தகையது என்று அப்போது தான் எனக்கு தெரிந்து.

    வீட்டிற்கு வந்தவுடன்  நடந்தவைகள் அனைத்தும் முதலில் அம்மாவிடம் கூறினேன். அவரும் இதை கேட்டவுடன் மிகவும் சந்தோஷப்படுவார் என எண்ணினேன். ஆனால் அவர் கூறியதோ எனக்கு அதிர்ச்சி அளித்தது.  “இதுபோல் நிறைய பேரை இப்படி நூதனமாக சேலம் பேருந்து நிலையத்திலும், ரயில் நிலையத்திலும் ஏமாற்றிக்கொண்டு இருகிறார்கள்” என்றும், அதில் ஏமாந்த எனக்கு  நன்கு தெரிந்த சில நபர்களின் பெயர்களையும் கூறியவுடன்  நான் உறைந்து போனேன். எவ்வளவு கொடுத்தாய் என்றார்? “ஐநூறு” என்றேன். இடையில் புகுந்த அப்பாவும் இது போல் நிறைய பேர் ஏமாந்து இருக்கிறார்கள் என கூறினார். அப்போது தான் நானும் ஏமாந்ததை அறிந்தேன்.

    அப்போது கண்களில் நீர் வழிந்தவாறு என்னையே ஏக்கத்துடன் பார்த்த அந்த சிறுமி ஒரு நிமிடம் என் நினைவில் வந்து போனாள். என்னை அவர்கள் ஏமாற்றியது பெரிதாக அந்த நொடி தெரியவில்லை.  அதற்கு பதில் என்னுடைய பர்ஸை களவாடி இருந்தால் கூட இன்னும் சில நூறு ருபாய் தாள்களும், ஐநூறு ருபாய் தாள்களும் அவர்களுக்கு கிடைத்திருக்குமே? நானும் தொலைத்துவிட்டோம் என்று எண்ணி ஒரு நாள் மட்டும் வருத்தத்துடன் அதை மறந்திருப்பேன்.  ஆனால் அவர்களுக்கு உதவ நினைத்தது குற்றமா? எதற்காக அவர்கள் என் உணர்வுகளில் அவர்கள் விளையாட வேண்டும்?  அது தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

    என் மனதில் எழுந்த ஒரே கேள்வி இது தான். இன்னொரு நாளில், அதே இடத்தில், வேறொரு வட இந்திய குடும்பமோ, அல்லது தமிழ் குடும்பமோ உண்மையாகவே இதே பரிதாப நிலையில், உணவில்லாமல், பசியில் வாடிய சிறுமியை அருகில் வைத்துக்கொண்டு என்னிடம் உதவி கோரினால், அதை நான் எப்படி எதிர் கொள்வது?

    Share

    ஐயம் வேணுகோபால் ப்ரம் டைடல் பார்க் – சென்னை பயணம் பாகம் இரண்டு

    chennai-egmoreபோட்டோ கிரெடிட் – பாண்டியன்

    முந்தைய பாகங்கள்:
    ரயில் பயணங்களில் – சென்னை பயணம் பாகம் ஒன்று (கிளிக்க)
    ஐயம் வேணுகோபால் ப்ரம் டைடல் பார்க் – சென்னை பயணம் பாகம் இரண்டு (கீழே)

    மொபைலில் காலை நான்கு முப்பதிற்கு அலாரம் அடிக்கவும், ரயில் சரியாக அதே நேரத்தில் எக்மோர் ரயில் நிலையத்தை அடைந்து இருந்தது எனக்கு சிறிது ஆச்சர்யம்தான். கீழே இறங்கிய அந்த தூக்க கலக்கத்திலும் போர் ஸ்கொயரில் செக் இன் செய்ய மறக்கவில்லை. வெளியே வந்ததும் வராததுமாக காக்கிச்சட்டை மனிதர்கள் என்னுடைய லக்கேஜை பிடுங்குவதிலேயே ஆர்வம் காட்டினர். “புரசைவாக்கம் சங்கம் தியேட்டர் போகணும் எவ்வளோ” என்றேன். நூறு ரூபாய்க்கு குறைவாக யாரும் வருவதாக தெரியவில்லை. வெறும் ஐந்து நிமிட பயணத்தில் நூறு ரூபாய் சென்னையில் சம்பாதிக்க முடியுமென்றால் எங்க ஊர் பஸ் மற்றும் லாரி உரிமையாளர்கள் கூட சென்னையில் எப்போதோ ஆட்டோ வாங்கி விட்டு இருப்பார்கள்.

    ஆட்டோ இப்போது வந்து சேர்த்த இடம் புரசைவாக்கத்தின் பிளவர்ஸ் ரோடு.. விடியாத அந்த காலைப்பொழுதில் நண்பர் முன்பதிவு செய்து கொடுத்திருந்த அந்த ஹோட்டலை சென்றடைந்த போது இன்னொரு ஆச்சர்யம் எனக்கு காத்திருந்தது. முன்னொரு காலத்தில் நான் சென்னையில் அதிகாமாக சுற்றி திரிந்த பகுதியின் ஒரு தெரு தான் அது. ஆனால் இங்கே இப்படி ஒரு ஹோட்டல் இருந்திருக்கிறது என்று எனக்கு அது நாள் வரை தெரிந்திருக்கவில்லை. அமைதியான, அழகான அதற்கும் மேலே மிகவும் சுத்தமான அந்த அறைக்குள் நுழைத்தும், குளிசாதனப்பெட்டியை முடுக்கி விட்டு மீண்டும் ஒரு குட்டித்தூக்கம் போட்டேன்.

    காலை ஒன்பது மணிக்கு நானும் இரு நண்பர்களும் டைடல் பார்க்கை சென்றடைந்த போது மீண்டும் போர் ஸ்கொயரில் ஒரு செக் இன். அங்கு தான் இந்தியா சர்ச் சம்மிட் 2010 நடை பெற இருந்தது. நாங்கள் சென்றதன் நோக்கமே அதில் கலந்துக்கொள்ளதான். சர்ச் சம்மிட் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து இன்டர்நெட் மார்கெட்டிங் நிபுணர்களும் ஒன்று கூடி கலந்துரையாடும் இந்தியாவின் ஒரே கருத்தரங்கம். அதாவது இது யாருக்கு பயன்படுமென்றால் இணையத்தில் வர்த்தகம் புரிபவர்களுக்கும், தங்களுடைய பிராண்டை இன்டர்நெட்டில் வலுப்படுத்த நினைப்பவர்களுக்கும், சோசியல் நெட்வொர்க்கிங் இணைய தளங்களில், கூகிள் போன்ற தேடுபொறிகளில் எப்படி வர்தகங்களுக்காக கையாளுவது, இணையத்தில் வாடிக்கையாளர்களை பெறுவது போன்ற தேவை இருப்பவர்களுக்கும், அதில் ஏற்கனவே அனுபவமுள்ள நிபுணர்களுக்கும், புதிதாக இத்துறையில் நுழைய விரும்புவர்களுக்குமாகும்.

    டைடல் பார்க்கின் முதல் தளத்திலேயே அமைந்து இருந்த குளிரூட்டப்பட்ட ஆடிட்டோரியமும், இலவச வை-பை இன்டர்நெட்டும் இந்த கருத்தரங்கிற்காக ஸ்பான்சர் செய்திருந்தது சிப்பி (SIFY). சுமார் நூற்றி சொச்சம் நபர்களின் வருகையால் அரங்கம் நிறைந்து போயிருந்தது. பல வடஇந்திய வாசனைகளும் ஆங்காங்கே அரங்கத்தில் கலந்திருந்தது. வந்திருந்த அனைவரும் அமர்ந்து இருந்த இடத்திலேயே மைக் வழங்கப்பட்டு சுயஅறிமுகம் செய்துகொள்ளப்பட்டது. அனைவரும் அவர்களது ட்விட்டர் அக்கவுன்ட்டை கூறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது தான் இந்த கருத்தரங்கின் மிக முக்கியமாக ஒன்று. இக்கருத்தரங்கு நடைபெறும் இரு நாட்களும் அனைவரும் நேரடி ட்வீட் பதிப்பாளர்களாக செயல்படவேண்டும் என்பதே நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்களின் வேண்டுகோளாக வைக்கப்பட்டது.

    அது சரி நேரடி ட்வீட் பதிவாளர்கள் என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளால் நடந்த  துப்பாக்கி சூடு ஞாபகம் இருக்கிறதா? அங்கு நடந்த செய்திகளை தொலைக்காட்சி, வானொலியை விடவும் மக்களிடம் நேரிடையாக உடனுக்குடன் கொண்டு சேர்த்த ஊடகமாக செயல்பட்டது இந்த ட்விட்டர் தான். அது போல் இந்தியாவிலும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கண்காணிக்கப்பட வாய்ப்புள்ள இந்த கருத்தரங்கின் நிகழ்வுகளை நேரிடையாக கொண்டு செல்லவே ட்விட்டர் இங்கும் பயன்படுத்தப்பட்டது. அதற்காக பயன்படுத்தப்பட்ட ஹாஸ் டாக் #iss2010

    பேச்சாளர்கள் உரையாற்றிக்கொண்டு இருக்க அங்கே இருந்த அனைவரும் அதை நேரிடையாக தாங்கள் கொண்டு வந்திருந்த மடி கணினி மூலம் ட்விட்டரில் பதிவித்துக்கொண்டு இருந்தனர். நான் முதல் நாள் என்னுடைய மடி கணினியை எடுத்துசெல்லவில்லை இருப்பினும் என்னுடைய ப்ளாக்பெர்ரியில் வந்து விழுந்தது ஒரு ட்வீட்டு. “ஹாய், நிறைய பிரவீன்கள் இந்த அரங்கில் இருக்கிறார்கள் போலும்., நானும் பிரவீன் தான். தேநீர் இடைவேளையின் போது சந்திப்போம்” என்று இருந்தது. அந்த அளவுக்கு அந்த அரங்கில் வெவ்வேறு மூலையில் இருந்தவர்களையும் நேரடி தொடர்பில் வைத்திருந்தது இந்த ட்விட்டர். உலகின் வெவ்வேறு மூலையில் இருப்பவர்களையே தொடர்பில் வைத்து இருக்கும் போது இது என்ன…

    அது சரி விளையாட்டு குணமுள்ளவர்கள் இங்கும் இல்லாமல் போய் விடுவார்களா? அவர்கள் கையில் ட்விட்டர் அங்கே என்ன பாடு பட்டது தெரியுமா? அந்த அரங்கில் யாரோ தெனாலி ராமன் என்கிற பெயரில் பொய்யான ட்விட்டர் கணக்கை தொடங்கி ஒரு நகைச்சுவை தர்பாரே நடத்திவிட்டார். அங்கு நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் டைமிங் காமடியும், நக்கலும் அடித்து கலகலப்பை உண்டு பண்ணிக்கொண்டு இருந்தார் அவர். நல்ல வேலை கைகலப்பு அளவுக்கு போகவில்லை! கடைசி வரை அரங்கில் இருந்த மற்ற ட்விட்டர் பயனாளர்கள் அவரை பார்க்கும் ஆர்வத்தில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டுகோள் ட்வீட் விடுக்க, அவரோ சட்டென்று காணமால் போய்விட்டார். கடைசி வரை அவர் யாரென அவரை தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    அது கூட பரவாயில்லை, மதிய உணவு உண்ட களைப்பில் ஒரு நபர் கருத்தரங்கு நடந்துக்கொண்டு இருக்கும்போதே கண் அயர்ந்து விட, அருகில் இருந்த மற்றொரு நபர் தன் கேமரா போனில் கிளிக்கி ட்விட்டரில் போட, ஐந்தே நிமிடத்தில் அனைவாராலும் மறு ட்வீட் செய்யப்பட்டு அவர் பேமஸ் ஆகி விட்டார். அதற்கடுத்து நடந்த தேநீர் இடைவேளையின் போது அனைவரும் இவரை “அவரா இவர்” என்ற தோணியில் நோட்டம் விட, இவரும் என்னவென்று புரியாமல் அம்மாஞ்சியாக முழித்துக்கொண்டு இருந்தார். (கிளிக்க)

    நேற்று (08-09-2010) ஜெயா பிளஸ் சானலில் கூட  இந்த நிகழ்ச்சியின் பதிவை தொகுத்து வெளியிட்டனர். இந்த கருத்தரங்கின் முக்கியத்துவத்தையும், அதில் நடந்த பயனுள்ள சம்பவங்களையும் இங்கே தமிழில் போட்டால் அது சென்றடையும் மக்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இது வெறும் பயனக்கட்டுரையாக இருக்கட்டும் என எண்ணுகிறேன். அதனால் அதை இன்னும் டீடெயில்டாக  என்னுடைய ஆங்கில வலைப்பூவில் இடுவாதாக உள்ளேன்.  இருந்தாலும் அந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிடத்தகுந்த நிகழ்வை இங்கே நான் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஒரே விஷயம் என்னவென்றால் அது “ரிமோட் வீடியோ கான்பரன்சிங்”.

    ஆம் இரண்டாம் நாள் காலையில் கலிபோர்னியாவிலிருந்து ஒரு பெண்மணி வீடியோ கான்பரன்சிங் மூலம் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இங்கே அனைவரும் பெரிய ப்ரொஜெக்டர் திரையில் அவரை பார்த்தவாறே ஒவ்வொருவராய் கேள்விகள் கேட்க, அவர் அங்கே அறையிலிருந்துக்கொண்டு தன் கணினியின் மூலம் அரங்கில் இருப்பவர்களை பார்த்தவாறே கலந்துரையாடினார். “வீடியோ கான்பரன்சிங்” என்பது என்னை போன்ற இணையத்தில் பிழைப்பை நடந்துவர்களுக்கு பெரிதாக தெரியாவிடிலும், இங்கே அதை பயன்படுத்தி இருந்த விதம் பாராட்டத்தக்கது. இந்தியாவிற்கே வராமல் தன்னுடைய கருத்துக்களை அந்த பெண்மணி பகிர்ந்து கொள்ள இந்த டெக்னாலஜி வாய்ப்பை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    இரண்டாம் நாள் மதிய உணவின் போது அருகில் இரண்டு வட இந்தியர்கள் “Sify has sponsored the auditorium and  free wi-fi internet right? so I dont think 1000 bucks for each ticket is going towards the expenses on organising this event” என்று பேசிக்கொண்டது காதில் வந்து விழுந்தது. குறைகள் பல இருந்தாலும் அனைத்து இன்டர்நெட் மார்க்கட்டிங் ஸ்பெஷலிஸ்டுகளையும் ஒன்று திரட்டிய முயற்சிக்காக பாராட்டலாம் என எங்களுக்குள்ளேயே கூறிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.

    salemjilla team

    அதன் பிறகு இரண்டாம் நாள் நிறைய முக்கிய பேச்சாளர்கள் மிஸ்ஸிங் போல தெரிந்தது. அதிலிருந்து கொஞ்சம் மந்தமாகத்தான் சென்றது கருத்தரங்கம். அதன் பிறகு பேசிய பேச்சார்கள் கவனத்தை ஈர்க்க தவறிக்கொண்டு இருந்தனர்.  ட்விட்டரிலும் அது எதிரொலித்தது. சூடான விவாதங்கள் ட்வீட்டாக அரங்கேரிக்கொண்டிருந்த நேரம் அது.   மீதமிருந்த ட்விட்டர் பயன்படுத்தாதோர் அநேகமாக குளிரூட்டப்பட்ட அறையின் சொகுசால் மெல்ல மெல்ல கண்ணயர்ந்துக்கொண்டு இருந்தனர். நிகழ்ச்சியின் இறுதிகட்டத்தை நெருங்க பொறுமையிழந்த நண்பர் மெல்லமாய் எங்களிடம்  “ஐயம் வேணுகோபால்…. ப்ரம் டைடல் பார்க்…. ஐயம் பினிஸ்ட்… போலாமா” என்றார். சூழ்நிலையை புரிந்தவர்களாய் மடிகணினியை மடித்துக்கொண்டு டைடல் பார்க்கிலிருந்து விடைபெற்றோம் மூவரும். (அது என்ன ““ஐயம் வேணுகோபால்…. ப்ரம் டைடல் பார்க்…. ஐயம் பினிஸ்ட்” என்று கேள்வி உங்களுக்கு எழும்பினால் இந்த வீடியோவை பார்க்கவும் http://youtu.be/sBidvDcweEk )

    இப்படியே இருநாள்களும் கருந்தரங்கிலேயே முடிந்துபோனதா என்றால் கண்டிப்பாக இல்லை. அந்த இரண்டு இரண்டு நாட்களையும் நாங்கள் மறக்க முடியாத நாட்களாக்கிஇருந்தோம். முதல் நாள் இரவு எக்ஸ்பிரஸ் அவன்யூவில் புதிதாக ஆரம்பம் செய்து இருந்த சத்யம் எஸ்கேப் தியேட்டரில் ஒரு வாரம் முன்பாகவே டிக்கெட் முன்பதிவு செய்து சென்றோம். இன்றைய தேதியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய மால் அது.  எவ்வளவு பெருசு என்றால்  கீழே பேஸ் மென்ட் கார்பார்கிங்கில் காரை நிறுத்துமிடத்தை மறந்து போனால் அதை கண்டு பிடிப்பதற்கே ஒரு நாள் வேனுமுங்கோ… அப்போ மால் எவ்வளவு பெருசு என்று கற்பனை செய்து பாருங்கள்.

    மேலே மேலே எஸ்கலேட்டரில் போய் கொண்டே இருக்கிறோம். முழுதாக சுத்திப்பார்க்க இது சரியான நாளில்லை. ஏற்கனவே சரியாக தூங்காமல் பயண அலைச்சலால் உடல் சோர்வு. திரைப்படம் தொடங்க நேரம் வேறு சிறிது தான் இருந்தது.  அங்குள்ள கே.ஏப்.சீ யில் சீஸ் பர்கரும், சிக்கனையும் அவசரம் அவசரமாக மென்று முழுங்கி பெப்சி குடித்து தியேட்டருக்குள் நுழைந்தோம்.

    அந்த திரையரங்கில் கவுண்டரே கிடையாது. (ரெட்டி இருக்காரானுலாம் கேட்கக்கூடாது!). எல்லாரும் முழுக்க முழுக்க ஆன்லைனில் அவர்களது இணையதளத்தின் மூலமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். வேண்டுமானால் அவர்கள் திரையரங்கில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி தொடு உணர் மிஷினில் தங்களுடய கடன் அட்டையை தேய்த்து டிக்கட் பதிவு செய்துகொள்ளலாம். அவர்களுடைய டார்கெட் முழுவதுமாக மேல்தட்டு மக்களையே குறிவைத்து இருப்பது தெளிவாக தெரிகிறது. அப்போ உள்ளே திரையரங்கம் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். ஸ்டார் ஹோட்டலையே மிஞ்சிவிடும். அமெரிக்கா போன்ற மேல்நாடுகளில் திரையரங்கில் சென்று திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை இங்கயே கிடைக்கச்செய்கிறார்கள் இவர்கள்.

    உதரணமாக மெல்லிய ஒளி பரவிய ரெஸ்ட் ரூமில் ஒவ்வொரு யூரினல்சின் மேலேயும் ஒரு சின்ன ஸ்க்ரீன் வைக்கப்பட்டு திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும் படங்களை காண்பித்துக்கொண்டு இருந்தனர். கூழாங்கற்களால் தரை அலங்கரிக்கப்பட்ட அந்த அறையில் கையை அலம்பிவிட்டு இந்த பக்கம் உள்ள ட்ரையரில் நீட்டினால் மென்சூடான காற்று வீசப்பட்டு மூன்று நொடிகளில் கையை உலர்த்தி விடுகிறது. இது எல்லாம் பாமரனுக்கான சாத்தியமேயில்லை என்று தோன்றுவதால் தானோ என்னவோ அவனால் சாத்தியமில்லாத இணையத்திலும், கடன் அட்டையின் மூலம் மட்டுமே டிக்கெட் வழங்குகிறார்கள் என்பது தெளிவாகிறது.

    அந்த சிறிய அரங்கில், சிறிய ஸ்க்ரீனில் படம் பார்த்தது வீட்டில் ஒரு ஹோம் தியேட்டர் அமைப்பை ஏற்படுத்தி பார்த்த ஒரு அனுபவம். திரையரங்கில் இருக்கிறோம் என்ற எண்ணமே வரவில்லை. ஆபரேட்டர் ரூமே கிடையாது. டிஜிட்டல் ஆர்.டீ.எக்ஸ் தொழில் நுட்பத்தின் மூலம் அந்த ஆபரேட்டர் ரூம் சிறிய பெட்டியில் அடைபட்டு அரங்கில் வெளியே மாட்டப்பட்டு இருந்தது. ஒரு பெரிய எல்.சீ.டீ ஸ்க்ரீனில் பார்ப்பது போன்ற மிகத்துல்லியமான சினிமா. ஆனால் என்ன செய்வது, ஏற்கனவே சொன்னது போல் மிகவும் பயணக்களைப்பில் நானும் மற்றோரும் நண்பரும் அப்போது அமர்ந்திருந்தோம். அந்த தூக்கக்கலக்கத்தில் கனவில் கூட படம் பார்க்க முடியாத போது இப்படி ஒரு கனவு படத்தை எப்படி பார்ப்பது என்று, படம் ஆரமித்து சில நொடிகளிலேயே சீட்டில் சரிந்து விட்ட என் வலப்பக்க நண்பரை, இடைவேளையின் போது  தட்டி எழுப்பி கிளிக்கிய படமே இது.

    அது சரி என்ன திரைப்படம் என்கிறீர்களா?…… ம்ம்ம்ம்….அ….அது..… ஆங்! ரைட்.. “இன்செப்சன்”.

    இரண்டாம் நாள் மாலை திருவான்மியூர் கடற்கரையில் மூவரும் உலாவிக்கொண்டு இருக்கையில் ஒரு ஹெலிகாப்டர் பறந்து கடற்கரை ஒரமாக தாழ்வாக வந்தது. சரி ஞாற்றுக்கிழமை கடற்ப்படை ரோந்துக்கு வருவது சகஜமென்று நண்பர் கூறினார். ஆனால் அவர்கள் திருவான்மியூர் கடற்கரையிலிருந்து பெசன்ட் நகர் கடற்கரைவரை தொடர்ந்து வட்டமடித்துக்கொண்டே இருந்ததும் ஏதோ விபரீதம் என்பது போலிருந்தது. அது என்ன என்று கடைசிவரை தெரியவில்லை. இருட்டும் வரை தென் சென்னையில் இருந்து வட சென்னை வரை பையா படத்தில் வருவது போல் பயணித்து களைத்து விட்டு. ஊருக்கு ஒதுக்கு புறம் என்பது போல், சிட்டியை விட்டு சிறிது ஒதுக்குப்புறமான தமிழ்நாடு ஹோட்டலில் தான் இரவு உணவு முடித்தோம். ஏனோ தெரியவில்லை, அந்த இடம் எனக்கும் நண்பருக்கும் மிகவும் பிடித்திருந்தது. சென்னையில் அமைதியான சூழ்நிலையில் இதை விட வேறு ஏதேனும் இடம் உண்டா என்று தெரியவில்லை.

    இரவு சரியாக பத்து முப்பது மணிக்கு நண்பர் எக்மோரில் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு  “ஐயம் வேணுகோபால்…. ப்ரம் டைடல் பார்க்…. ஐயம் பினிஸ்ட்…” என்று நகைச்சுவையாக கூறி அனைவரும் விடை பெற்ற தருணம் வரை அனைத்தும் நினைவில் நிற்கக்கூடிய தருனங்களே.  ரயில் சென்னை விட்டு விலகிச்சென்று கொண்டிருக்கையில் யோசித்துப்பார்கிறேன். ஏனோ தெரியவில்லை, நான் முதன்முறை சென்னை சென்ற போதிலிருந்து ஒவ்வொரு முறையும் சென்று வந்தபோதும் பல நினைவுகளை சுமந்து கொண்டே திரும்பியிருக்கிறேன். இம்முறையும் தான்… ஆனால் இது மிகவும் இனியமையான பயணமாக  அமைந்தது இருந்தது.

    ஆனால் ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாக சொல்ல முடியும்…. “விருந்தினராக செல்லும் வரையில் தான் சென்னை சொர்க்க பூமி”. விடிந்த பிறகு சேலத்திற்கு ரயிலில் வந்து இருங்கிய மறுகனமே நான் ட்வீட்டியது இதுதான் “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா”.

    முந்தைய பாகங்கள்:
    ரயில் பயணங்களில் – சென்னை பயணம் பாகம் ஒன்று (கிளிக்க)
    ஐயம் வேணுகோபால் ப்ரம் டைடல் பார்க். சென்னை பயணம் பாகம் இரண்டு (கீழே)
    Share

    ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது

    அது ஒரு அழகிய, அமைதியான ஞாயிற்றுக்கிழமை.. “நாடோடிகள்”ன்னு ஒரு தமிழ் படம் வந்துருக்கு .. சூப்பரா இருக்குன்னு நிறைய பேர் சொன்னாங்க.. நானும் ரெண்டு வாரமா அந்த படத்துக்கு போலாம் போலாம்னு பார்த்தேன் ஆனா நேரமே அதுவரை சிக்கவில்லை. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை எப்படியும் பார்த்தடனும்னு ஒரு முடிவோட இருந்தேன். காலைல எழுந்ததும் வீட்ல இருக்கற எல்லாரையும் மதியம் படத்துக்கு போறோம் எல்லாரும் கிளம்பிடுங்கன்னு  சொன்னேன். யாரும் டக்குனு வரலைனு சொல்லிட்டாங்க.. என்ன பண்றது??? படம் சூப்பரா இருக்கு அப்படி இப்படின்னு பில்ட் அப்  கொடுத்து எல்லாரையும் சம்மதிக்க வச்சுட்டேன். எப்போதாவது தான் படத்துக்கு போகிறோம் நல்ல படமா போலாம்னு எடுத்த முடிவு தான் இது.

    nadodigal

    ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிப்ளெக்ஸ் இனையதளத்துக்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்தேன். அது பல்திரைகள் கொண்ட ஒரு திரையரங்கம்.. மற்ற திரைகளில் ஓடும் எந்த படமும் நன்றாக இருப்பது போல் தோன்றவில்லை.. நாடோடிகளுக்கு படத்திற்கு டிக்கெட் கிடைக்குமா என்று ஆவலுடன் பார்த்தேன். அப்பாட டிக்கெட் இருந்தது.. உடனே அவசர அவசரமாக நான்கு டிக்கெட் மதிய காட்சிக்கு முன்பதிவு செய்தேன்.

    ஏற்கனவே வீட்டில் லேட்.   மதியம்  2:15 மணிக்கு திரைப்படம் என்று டிக்கெட்டில் போட்டு இருந்தது. மணி இப்போதோ 1:50.. டிக்கெட்டை அச்சிடுவதற்கு கூட நேரம்  இல்லை. என் செல்பேசியில் அந்த டிக்கெட்டின் மின்னஞ்சல் நகல் இருந்தது.   கவுண்டரில் அதை காண்பித்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.அவசர அவசரமாக திரையரங்கிற்கு போய் சேர்ந்தால் அதற்குள் மணி 2:10PM

    டிக்கெட் கவுண்டர்:
    நான்: Excuse me, I’ve booked my tickets thru online for this show. Can I get the original tickets?

    பணியாளர்: Yea sure. Can I please have the proof for online reservation?

    நான்: Unfortunately, I did not print  the tickets that I received in my email but I’ve that email on my mobile. என் செல்பேசியின் அந்த மின்னஞ்சலை திறந்து காண்பித்தேன். (நேரம் வேறு ஆகிவிட்டது “நாடோடிகள்” இந்நேரம் ஆரம்பம் ஆகி இருக்குமே…)

    பணியாளர்: என் செல்பேசியை வாங்கிக்கொண்டார். என்ன மாடல் சார் இந்த மொபைல்?

    நான்: (ஆகா. படம் வேற ஆரமிச்சி இருப்பாங்களே.. எல்லாரும் எனக்கு வெயிட் பண்றாங்களே) அது விண்டோஸ் மொபைல் சார். படம் எத்தன மணிக்கு ஆரமிக்கும்?

    பணியாளர்: படம் இப்போ போட்டுடுவாங்க. இந்த மொபைல் என்ன ரேட் வருது சார்?

    நான்: (விடமாட்டார் போல இருக்கே) நான் வாங்கும் போது பதினைந்தாயிரம் இருந்ததுங்க.. எந்த ஸ்க்ரீன்ல சார் இந்த படம்? டிக்கெட் நம்பர் இந்த ஈமெயில்லில் இருக்கும் பாருங்க.
    பணியாளர்: ஸ்க்ரீன் நம்பெர் ஒன்னுல இந்த படம் சார். இந்த மொபைல் என்ன கம்பனி சார், நான் இதுக்கு முன்னாடி பார்த்து இல்லையே. வெளிநாட்டுல வாங்குனீங்களா?

    நான்: (கடவுளே நம்ம அவசரம் நமக்கு தான் தெரியும்) இந்த மொபைல் கம்பெனி பேரு ஹச் டி சீ. இப்போ இந்தியாவிலேயே கிடைக்குது. சார்.. படம் போட்டாச்சுனு நினைக்கிறன்..

    பணியாளர்: ஓ… அப்படியா. சரி சரி.. இதோ ஒரு நிமிஷம் சார். (அவசரம் புரிந்தவராக) உடனே டிக்கெட் பிரிண்ட் எடுத்து கொடுத்தார்.

    கடவுளே… டிக்கெட் வாங்கிட்டு ஊள்ளே போறதுக்குள்ள இவ்ளோ பிரச்சனையா? அவசர அவசரமாக அனைவரும் ஸ்க்ரீன் – 1 வழி நோக்கி வேகமாக நகர்ந்தோம். உள்ளே சென்றால் நல்ல வேலை படம் இன்னும் ஆரமிக்கப்படவில்லை. எங்களுக்காக காத்திருந்த மாதிரி நாங்கள் சென்றவுடன் தான் பெயர் ஆரமித்தது. படத்தின் பெயர் கூட போடவில்லை ஆனால் முதல் காட்சியில் நடிகை லட்சுமி ராய்.. அடடா என்ன இது குழப்பம்? நாடோடிகள் படத்தில் இந்த பொண்ணா நடிச்சிருக்கு? யோசித்து முடிப்பதற்குள் படத்தின் பெயர் வந்தது.. வா……”வாமனன்”. என்னது. இது நாடோடிகள் இல்லையா? வாமனனா? இது என்ன புது கூத்து? ஸ்க்ரீன் மாத்தி உட்காந்துட்டமா? டிக்கெட் எடுத்து பார்த்தேன்.  ஆ.. ஸ்க்ரீன் ஒன்னு.. இல்லையே கரெக்டா தான வந்து இருக்கோம்.!!! ஒரே குழப்பம். படம் கீது மாத்தி போட்டாங்களா? இல்ல.. இல்ல.. அதுக்கு ச்சான்சே எல்லா. பின்ன எப்புடி???

    ஆங்.. செல்பேசியில் மின்னஞ்சலை திறந்தேன்.. டிக்கெட்: 4 , வகுப்பு: முதல் வகுப்பு  திரை: 1 திரைப்படம்.. வாமனன்.. ஆகா நான் தான் மாத்தி புக் பண்ணிட்டேனா.. நம்ம தப்பு தானா? பக்கத்துல எல்லாரும் என்னை முறைக்கராங்கன்னு தெரியது … ஆனா நான் டக்குனு திரும்பல..  ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் ஒரு சொதப்பல். வேற என்ன பண்றது? புக் பண்ணும் போது பார்த்து பண்ணி இருக்கணும். எல்லாரையும் சமாதனப்படுத்தி மறுபடியும் அடுத்த வாரம் நாடோடிகள் கூட்டிட்டு போறேன்னு வாக்குறுதி கொடுத்தேன். என்னுடைய ஒரே எண்ணம் இப்போ பாக்கப்போகிற இந்த படத்திற்கு “ஏன் வந்தோம்” னு இல்லாம இருந்தா போதும்.  கேமரா, காமெடி எல்லாமே பரவாயில்லை… நான் தற்சமயம் மிகவும் ரசித்த “ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது” பாடல் இந்த படம்  என்பது தான் என் ஒரே ஆறுதல். நல்ல வேலை படம் ஒன்னும் மோசமில்லை. வீட்டிற்கு வரும்வரை அந்த பாடல் மட்டும் தான் என் ஞாபகத்தில் இருந்தது..

    நமக்கு பிடித்த பாடல்னா பாட தோணாதா? நானும் பாடினேன். வீட்டிற்கு வந்ததும் அதை பதிவு செய்து பார்த்தேன். ரொம்ப கஷ்டம்ப்பா. ரூப் குமார் ரதோட் பாடிய அந்த பாடல் சான்சே இல்ல. கொஞ்சம் புகைப்படங்களை சேர்த்து மேலும் அதை மெருகேற்ற முயற்சி செய்தேன். இதோ.. பார்த்து விட்டு எப்படி என்று சொல்லவும்..

    ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
    மிக அருகினில் இருந்தும் தூரம் இது
    இதயமே ஓ
    இவளிடம் ஓ
    உருகுதே ஓ…
    இந்த காதல் நினைவுகள் வான்தானே…..
    அது தூங்கும் போதிலும் தூங்காதே……….
    பார்க்காதே…. ஓ………
    என்றாலும்….. ஓ….
    கேட்காதே….. ஓ….

    இது அனைத்தும் நடந்து சரியாக ஒரு வாரம்.. சரி இந்த வாரமாவது நாடோடி படத்திற்கு சரியாக போகணும் நேற்று மறுபடியும் யோசனை.. ஐந்து திரைகள் கொண்ட திரையரங்கிற்கு சென்றால் தானே பிரச்சனை. கே .எஸ். பிக் சினிமாஸ்(ஒரே திரை தான் – So குழப்பமில்லை)  திரையங்கிற்கு நேற்று இரவு காட்சிக்கு ஆன்லைனில் புக் செய்தேன். பத்து முப்பதிற்கு திரைப்படம் , எதற்கு வம்பு..  சரியாக பத்து மணிக்கே போனோம். சீக்கிரம் வந்து விட்டோம்.. சரியான படம் தான். இன்னைக்கு எந்த பிரச்சனையும் வராது என்று ஒரு நம்பிக்கை… இருந்தும் பிரச்சனை வந்ததே.

    டிக்கெட் கவுண்டர்.

    நான்: ஹலோ. நான் ஆன்லைனில் புக் செய்தேன். இதோ எஸ்.எம் எஸ் கன்பிர்மேசன். (என் செல்பேசியை கொடுத்தேன்)

    பணியாளர்: இது என்னாது சார் ஹெச்.டி.சி? மொபைல் போனா?

    (ஆகா கேலம்பிடாங்கயா.. கேலம்பிடாங்க…)

    நான்: ஆமாம். மொபைல் தாங்க.

    பணியாளர்: எவ்ளோ சார் இது.. இந்தியாவுல கிடைக்குதா? கொஞ்சம் உள்ள வாங்க சார்.

    நான்: (மறுபடியுமா…??? போனா வாரம் அங்க.. இந்த வாரம் இங்கயா? சரி  சரி இந்த வாரம் தான் நமக்கு இன்னும் நேரம் இருக்கே. உள்ள போய் தான் பாப்போம்…) இந்த மொபைல் நம்ம சேலம்லயே கிடைக்குதுங்க. இப்போ சுமார் பதினைத்தாயிரம் இருக்கும்னு நினைக்கிறன்.

    பணியாளர்: ஓஹோ.. அப்படியா? அதெல்லாம் சரி. இந்த ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்றீங்களே, அது எப்படி சார்.

    நான்: உங்களோட வெப் சைட்டுல போய் பண்ணலாம்க. ஜஸ்ட் தியேட்டர், ஷோ, தேதி செலக்ட் பண்ணி கார்டு மூலமா பணம் கட்டின போதும்.

    பணியாளர்: சார் கொஞ்சம் உங்க மொபைல்ல புக் பண்ணி காட்ட முடியுமா…

    நான்: இல்லைங்க. நான் லேப்டாப் ல பண்ணினேன்.

    பணியாளர்: ஓ.. லேப்டாப் ல புக் பண்ணி மொபைல்க்கு அனுப்பிடீங்களா? இப்போ புரியுது சார். இந்தாங்க சார் உங்க டிக்கெட். .
    (ஒரு வழியாக கடைசியில் ஓரளவு அவர் புரிந்து கொண்டதால் எனக்கு டிக்கெட் தரப்பட்டது)

    நல்லவேளை இந்த வாரம் எப்படியோ நாடோடிகள் பார்த்து விட்டோம். படம் எப்படீன்னு கேட்கறீங்களா? அந்த திரைப்படத்தை பற்றி விமர்சனம் எழுதி இந்த இடுக்கையை மேலும் இழு……..க்க  விரும்பவில்லை. படம் சூப்பர். அவ்ளோ தான்.. நீங்களாவது என்னை மாதிரி ஆன்லைன்ல புக் பண்ணி மாட்டிக்காதிங்க. அதுதான் முக்கியம். அப்படி ஏற்கனவே மாட்டி, இல்ல வேறு ஏதேனும் சுவாரசியமான சம்பவம் ஏதாவது இருந்தா கீழே பகிர்ந்துக்கோங்க.

    Share

    சேலத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம்

    சமீபத்தில் சேலத்தில் யாரும் இப்படி ஒரு மழையை பார்த்து இருக்க முடியாதென்று நினைக்கிறன். இரண்டு நாட்களாக மாலை வேளைகளில் அனைத்து மக்களையும் அவர்கள் இருக்குமிடத்திலேயே சிறைபிடித்து வைத்துக்கொண்டது. வீட்டில் இருப்பவர்கள் வீட்டுக்குள்ளேயும், கடைக்கு சென்றவர்கள் கடைக்குள்ளேயும் சில மணி நேரம் முடங்கி கிடக்க வேண்டியதாயிற்று.

    நேற்று மாலை நான் ஏர்டெல் அங்காடிக்கு சென்று இருந்ததால் அங்கேயே மாட்டிக்கொண்டேன்.. இல்லை… தப்பித்து கொண்டேன் என்றே சொல்லலாம்.   பேய்மழைனு சொல்லுவாங்களே. அது போல இது குட்டி சாத்தான் மழைன்னு நினைக்கிறன். இரண்டு மணி நேரமே பேய்ந்தாலும் ஒரு கலக்கு கலக்கிடுச்சு. மழை நிற்கும் வரை கண்ணாடி சுவர் வழியாக வெளியே பார்த்துக்கொண்டே நேரத்தை கடக்க வேண்டியதாயிற்று.

    weather-picture-photo-mist-rain-salemபிறகு  தான் தெரிந்தது மழையின் தாக்கம் ..  தெரிஞ்சவங்க ஒருத்தங்க வீட்டு மாடி அறையில் பதிக்கப்பட்ட  ஆஸ்புஸ்தாஸ் சீட் பக்கத்துக்கு வீட்டுக்கு பறந்து போயிடிச்சாம்… இன்னொருத்தங்க மாடியில காயப்போட்டிருந்த துணி மணி எல்லாம் எங்க போச்சுனே தெரியலயாம். அடுத்தநாள் சிலது மட்டும் பக்கத்துக்கு தெருவில் கிடைத்ததாக தகவல். அப்போ மீதி? ”போலீசுல கம்ப்ளைன்ட் பண்ணுங்கோ மாமி.. கண்டுபிடிச்சு கொடுப்பாங்க..”

    இது நடந்தது நேற்று.. . இன்னைக்கும் அதே மாதிரி சாயங்கால நேரம். ஆறு மணி அளவிலேயே இருட்டிடுச்சு..  பயங்கர  காற்று.. சரியாய் சொல்லனும்னா பி.சி.ஸ்ரீராம் படத்துல வர காட்சி மாதிரி இருந்துச்சு..  வெளியே போய் மாட்டிக்க கூடாதுன்னு  உள் மனசு சொல்லுது.. வீட்டில் வேற யாரும் இல்ல. கரண்ட் காட்டானால் மாட்டிக்குவமேனு நினைக்கறதுக்குள்ளே.. டப்… கரண்ட் போயுடுச்சு..

    நான்.. என் லேப்டாப்.. இன்னும் சிறிது நொடியில் உயிரிழக்க போகும்  வைபை(Wi-Fi) இணைய தொடர்பு.. பீப்.. பீப்.. பீப்.  ஐந்து நிமிடம் “யுபிஎஸ்” கத்தி ஓய்ந்தது… இணையம் துண்டிக்கப்பட்டது. வீட்டிலேயே  தனிமைசிறை…  யாரும் இல்லையே என்ன செய்ய? வீடு வேறு ஒரே இருட்டாக இருக்கிறது. கதவை திறந்து வெளியே போகலாம் என்றால்,, ம்ம்ம்.. வெளியே கொஞ்ச நஞ்ச காற்றா? மழையை ரசிக்கலாம் என்று நினைத்தால் அதுவும் முடியவில்லையே..

    ஆங். ஐடியா..    “ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது…” மெல்லிய சப்தத்தில் என் லாப்டாப்பில் இசைவித்தேன்.. கடந்த இரண்டு நாட்களாக நான் மிகவும் ரசித்து கேட்கும் வாமணன் திரைப்பட பாடல்.. இருள் சூழ்ந்த அறை.. தனிமை.. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த அந்த பாடல் இப்போது சற்று மேலும் மனதை வருடுகிறது..

    நான் புதிதாக வாங்கிய என் கம்பியில்லா பிராட் பான்ட் இணைப்பு கருவியை(EV-DO Broadband Wireless Terminal)  லேப்டாப் பில் சொருகி இணையதொடர்பு  ஏற்படுத்திக்கொள்ள பார்த்தேன்.. கன மழையால் சிக்னல் சரியாக கிடைக்கவில்லை. என்ன செய்ய? இருட்டில் ஒவ்வொரு அறை ஜன்னலிலும் லாப்டாப்பை தூக்கிக்கொண்டு மெல்ல ஊர்ந்து ஊர்ந்து சென்றேன்.. விளக்கு வேறு பற்ற வைக்கவில்லை. ஒரே இருட்டு வேறு.   ஒரு  இடத்தில் மட்டும் கொஞ்சம் சிக்னல் கிடைத்தது.. சிறிய அளவில் ஜன்னலை திறந்து அருகிலேயே அமர்ந்து  இணையத்தொடர்பை ஏற்படுத்திக்கொண்டேன்..

    பிறகு என்ன? என்னதான் மழை பெய்தாலும்.. கரண்ட் கட்டானாலும்.. டெக்னாலஜி இருக்கு மாமே.. டெக்னாலஜி..  மனதிற்குள்ளே சொல்லிகொண்டே  நான் என்னுடைய  ப்ரொஜெக்டை தொடர்ந்து செய்துக்கொண்டு இருந்தேன்.. சுமார் அரைமணி நேரம் இருக்கும்.  மழை தண்ணீரில் காலை வைத்தது போல் ஜில்லென்று இருந்தது.. நான் கண்டுகொள்ளவில்லை.. மேலும் சில நிமிடங்கள் சென்று இருந்த வேலையில் என் கால்சட்டையும் நனைந்தது போல் ஒரு உணர்வு.. குனிந்து பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. அட என்னப்பா இது.. ஒன்றும் விளங்கவில்லையே.. கரண்ட் வரட்டும் பார்போம் என உள்மனது சொல்லியது…

    கரண்ட் வந்தது.. ஆச்சர்யம் குறையாமல் கீழே குனிந்து பார்த்தேன். குட்டை போல் வீட்டின் ஒரு பகுதியே தண்ணீர் சேர்ந்துள்ளது.. ஆ.. ஆ .. எப்படி அது? மேல பார்த்தேன்.. கீழே பார்த்தேன்.. அட… கடவுளே.. இன்டர்நெட் சிக்னலுக்காக ஆர்வத்தில் ஜன்னலை சிறிது திறந்திருக்கிறேன்.. அது மெல்ல மெல்ல சத்தமில்லாமல் வீட்டை குளமாக்கிக்கொண்டு  இருந்திருக்கிறது.. ஹய்யோ பிரவீன்… இப்படி சொதபிட்டயேடா? கம்முனு நல்லபிள்ளையா தூங்கி இருக்கலாமேடா.. இப்போ பீல் பண்ணி என்ன பண்றது.

    பின் குறிப்பு : இந்த இடுக்கை தலைப்பின் அர்த்தம் இப்போது புரியுமே… :)

    Share