கையும் களவுமாக வீடியோவில் பிடிபட்ட பெண் இன்ஸ்பெக்டர்

லஞ்சம் மற்றும் ஊழல் தலை விரித்தாடும் இந்திய தேசத்தில் பணத்திற்காக தினந்தோறும் அரங்கேறும் அசிங்கங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை. மனிதன் பணத்தை என்று கண்டு பிடித்தானோ அன்றே அதற்கு பிள்ளையார் சுழி போட்டாயிற்று. மனிதேநேயமில்லாத பணத்தாசை பிடித்த மிருகங்கள் களை எடுக்கப்படாத வரை நம் நாடு கண்டிப்பாக செழிக்காது.

சென்ற மாதம் என்னுடைய நெருங்கிய உறவினர் பெண்மணி ஒருவர் மூளைவளர்ச்சி குன்றிய தன் மகனிற்கு “ஊனமுற்றோர்  சான்றிதழ்”  வாங்க சேலத்தில் உள்ள ஒரு அரசு அலுவலகத்திற்கு சென்றார். “ஊனமுற்றோர்  சான்றிதழ்” வைத்திருந்தால் அரசாங்கமிடமிருந்து சிறிதளவு மாதமாதம் உதவித்தொகை பெற முடியும். அது தன் மகனை பராமரிக்க ஓரளவிற்கு அவருக்கு உதவியது.  ஆனால் அதற்காக இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அந்த சான்றிதழை பெற வேண்டி இருப்பது போல் தெரிகிறது.

அதை வழங்கும் அந்த அரசு அலுவலர் ஒவ்வொரு முறையும் லஞ்சம் பெற்றே உதவி கோரும் அனைத்து ஊனமுற்றோர்களுக்கும் சான்றிதழ் வழங்கி வந்துக்கொண்டு இருக்கிறார். உனமுற்றோர்களுக்கும், மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கும் போய் சேரும் உதவித்தொகையில் கூட லஞ்சமா? இத்தனைக்கும் அந்த அலுவலரும் கால் “உனமுற்றவர்”  என்று அந்த பெண்மனி என்னிடம்  கூறியது தான் வேதனையின் உச்சம். மனிதநேயம் நம்மிடம் எங்கு போயிற்று?

இதே மாதிரி இன்னொரு அசிங்கம் நடந்தேறியது திருப்பூர் நகரில். கொஞ்சம் பழைய செய்திதான் ஆனால் சுரணையுள்ள எந்த மனிதனுக்கும் ஆத்திரத்தை வரவைக்கும் ஒரு வீடியோ அது. தொலைக்காட்சிகளிலும், தினசரிகளிலும் கூட வந்திருக்கிறது. விசாரணைக்கு ஒருவரை அழைக்காமல் இருக்க பத்தாயிரம் பணத்தை  லஞ்சமாக ஒரு கடையில் அவரிடம் பெறுகிறார் இன்ஸ்பெக்டர் பெண்மனி ஒருவர். அந்த காட்சியை வீடியோ சுப்பிரமணி என்பவர் கையும் களவுமாக பதிவுசெய்ததவாறு வீடியோ ஆரம்பமாகிறது.

பிறகு போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து விஷயத்தை சொல்லி போலிசை அந்த இடத்திற்கு வரச்சொல்கிறார் அவர். அந்த நேரத்தில் அந்த  பெண்மனி  தன் மானத்தை(!!!) காத்துக்கொள்ள அவரிடம் காலில் விழுந்து கெஞ்சி தன்னை விட்டுவிடும்படி கதறி அழுகிறார். இவரும் விடுவதாய் இல்லை. தன் வாழ்நாள் முழுதும் துடைத்தெறிய முடியாத அந்த இழுக்கு, கேவலம் வெறும் பணத்தால் தானே. அதுவும் ஒரு பெண்ணாக இருந்துக்கொண்டு… கடைசியில் அங்கு வரும் போலிஸ் வீடியோ எடுத்தவரை அள்ளிக்கொண்டு போகிறது.  இந்த மாதிரி நிகழ்வுகளை வீடியோ பதிவை செய்வதற்கு பதிலாக அந்த நபர்களை சுட்டுக் கொள்ளவேண்டும். ஏன்  ஊருக்கும், உலகிற்கும் பாரமாய். அவர்களை களையெடுக்க கண்டிப்பாக ஒரு இந்தியன் தாத்தா நம் நாட்டிற்கு சீக்கிரம் தேவை.

Share

சிறு கவிதைகள் – தொகுப்பு நான்கு

உயிரெழுத்து நீயானாய்.
மெய்யெழுத்து நானானேன்.
இருவரும் சேர்ந்தோம்,
உயிர்மெய் எழுத்தானது நம் காதல்!
அதனால் தானோ,
ஆய்(யு)த எழுத்தாய்
உன் அப்பா!

——————————————————————————————-

வாழ்வு முழுவதும் சுகம் தர,
தாசி வாங்கும் பணம் போலே,
வரதட்சணை.

——————————————————————————————-

இடியை பார்த்து
நடுங்காத இந்த நெஞ்சம்
உன் இடையை பார்த்ததும்…..

——————————————————————————————-

மனம் ஒரு குரங்குதான்.
உன்னை மறக்க நினைக்கும் என் மனம்
உன் நினைவுகளையும் நினைக்க
மறப்பதில்லையே.

——————————————————————————————-

என்னுயிர்
உன்னுயிரோடு
உறவாடி
உயிர்தருகிறது
ஓர் உயிர்க்கு.

——————————————————————————————-

நீ என்னிடம்
கனவிலாவது பேசுவாய் என்றுறங்கினால்
கனவு கூட கனவாகியே போனது

——————————————————————————————-

நான் தினமும்
ரத்ததானம் செய்கிறேன்
கொசுக்கடி .

——————————————————————————————-

சிதைந்த சூரியன்
உடைந்த வெண்ணிலா
உதிர்ந்த விண்மீன்
நனைந்த மேகம்
இவை அனைத்தும்
வானில் சாத்தியமென்றால்
என் வாழ்வில்
அவளும் சாத்தியம்

——————————————————————————————-

ஆசிரியப்பா தெரியாது
வெண்பா தெரியாது
எதுகை மோனை தெரியாது
மொத்தத்தில் இலக்கணமே தெரியாது
இருந்தும் காதலித்துப்பார்
உனக்கும் கவிதை எழுதத்தெரியும்.

——————————————————————————————-

உன் கூந்தலில் குடியேற
வாய்ப்பிழந்த பூக்கள் யாவும்
தற்கொலை செய்தன
தரையில் குதித்து

——————————————————————————————-

உடலை
உயிர் பிரிந்ததும்
எரிப்பது வழக்கம்

நீ
என்னை பிரிந்தும்
நான் இன்னும் பிணமாய்,,,,

——————————————————————————————-

உள்ளத்திற்கும்
உணர்வுகளுக்கும்
ஏற்பட்ட உறவினால்
கற்பமில்லாமல் பிரசவிக்கிறது
என் கவிதை

——————————————————————————————-

Share

எந்திரன் விமர்சனம் – இளைஞர்களுக்கான கருத்துள்ள படம்

பத்து வருட கனவை பசித்து, முன்று வருட கடின உழைப்பை மென்று, கோடி கோடியாக பணத்தை முழுங்கி,  வெளிவந்து இருக்கும் இந்த எந்திரன் எதிர்பார்ப்பை வீணடிக்காத ஒரு தந்திரன். ஹாலிவுட் தரத்திலான முதல் தமிழ் சினிமா இது. இந்திய சினிமா என்றே சொல்லவேண்டும். அசர வைக்கும் இயந்திர மனிதன், மிரள வைக்கும் காட்சிகள் என இயக்குனர் சங்கரின் கனவு மிகப்பிரம்மாண்டமாய் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனால் நிறைவேறி இருக்கிறது. ரஜினியின் இத்தனை வருட சினிமா கேரியரில் எந்திரன் ஒரு மிக முக்கியமான படம்.

விஞ்ஞானியான டாக்டர் வசிகரன் (ரஜினி) தனது பத்து வருட உழைப்பால் ஒரு இயந்திர மனிதனை உருவாக்குகிறார். இது சாதாரணமான இயந்திரன் அல்ல. மனித மூளையை விட பன்மடங்கு சிந்திக்கக்கூடிய, பன்மடங்கு சாதுர்யமான, அதிவேகத்தில் இயங்கக்கூடிய ஒரு செயற்கை அறிவூட்டப்பட்ட இன்னொரு ரஜினி. இது அனைத்து மொழிகளும் பேசும், அனைத்து கலைகளும் அறிந்திருக்கும், நெருப்பில் செல்ல முடியும், தண்ணீருக்குள் நீந்த முடியும், புத்தகங்களை ஒரே நொடியில் படித்து முடிக்கவும் முடியும். இதன் பெயர் தான் சிட்டி. மனித குலத்திற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட சிட்டி அது அரசாங்கத்தால் அனுமதிக்கப்படும் பட்சத்தில் அதை போன்ற பல இயந்திர மனிதர்களை இந்திய ராணுவத்திற்கு செய்து தருவதே வசீகரனின் லட்சியம்.

இதே போன்று, இன்னொரு ஆராய்சிக்கூடத்தில் வசீகரனின் குருநாதர்  தீய சக்திகளுக்கு வழி வகுக்கும் வழியில் அதே போன்ற இயந்திர மனிதனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியுறுகிறார்.   இச்சூழ்நிலையில் வசீகரன் உருவாகிய சிட்டியின் மூலக்கருவை (நியூரல் ஸ்கீமா) திருட முயன்று அதுவும் முடியாமல் போகவே சிட்டியை பரிசோதித்து அனுமதி வழங்கும் குழுவில் இருப்பதினால் அதற்கு அனுமதி வழங்க மறுக்கிறார். அதற்கு அந்த இயந்திரத்திற்கு மனித உணர்வுகளான அன்பு, பாசம் போன்றவைகள் புரியாததால் மனிதகுலத்திற்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது என குற்றாம் சாட்டி வசீகரனின் கனவை குலைக்கிறார்.

மனமுடைந்த வசீகரன் மீண்டும் அதை தன் ஆராய்ச்சிக்கூடத்திற்கு கூட்டி வந்து அதற்கு அனைத்து மனித உணர்வுகளையும் புரிய வைக்கிறார். இங்குதான் பிரச்சினையே ஆரம்பம் ஆகிறது. அதுவரை வெறும் கட்டளைகளை நிறைவேற்றும் இயந்திரமாக செயல்பட்ட அது மனிதனை போல் சிந்திக்கவும் தொடங்குகிறது. விளைவு வசீகரனின் காதலியான சனாவிடம்(ஐஸ்வர்யாவை) அதற்கு காதல் உணர்வு வருகிறது. அதன் உணர்வுகள் வசீகரனின் கட்டுப்பாட்டை மீறி செல்வதை அறிந்ததும் கோபத்தில் அவர் சிட்டியை உடைத்து குப்பைக்கூலத்தில் தூக்கிப்போடுகிறார். விஷயம் அறிந்த வில்லன் அதை மீண்டும் இணைத்து அதன் மூலக்கூற்றை கண்டுபிடித்து அதை தீய செயல்கள் புரிய ப்ரோக்ராம் மூலம் மாற்றியமைக்கிறார். அது சானா மீது வெறித்தனமான காதலில் மீண்டும் எழுகிறது. உலகத்தை அழிக்கவும் அது முற்படுகிறது. ஆனால் இம்முறை யாருக்கும் கட்டுப்படாத இயந்திரமனிதனாய்….

இந்த திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரம் சிட்டி என்கிற இயந்திர மனிதனே. இதில் ஹீரோவும் அதுதான், காமடியனும் அதுதான், கடைசியில் வில்லனும் அதுதான். ஒரு ரஜினியை திரையில் கண்டாலே ரசிகர்களின் ஆராவாரத்திற்கு அளவு இருக்காது அதவும் நூற்றுக்கணக்கான ரஜினியென்றால்? சொல்லவா வேண்டும் தீபாவளிதான். ரோபோவே ஜொள்ளும் அளவிற்கு பொருத்தமான அழகி ஐஸ்வர்யா ராய்தான் என்பது படம் பார்த்தவர்களுக்கு நிச்சயம் புரியும்.  முப்பத்தி ஏழு வயது மதிக்கத்தக்க திருமணமான ஒரு பெண்மணியை ஹீரோயினாக நம் இந்திய மக்கள் ஏற்றுக்கொள்வார்களேயானால் அது இவர் மட்டும் தான். இப்படத்தில் கொள்ளை அழகு (மேக் அப் உதவியுடன்).   இந்த படத்தில் சந்தானமும், கருணாசும் ஒரு துணை கதாபாத்திரமாக வந்து நகைச்சுவை செய்ய முயல்கிறார்கள். ஆனால் எதுவும் எடுபடவில்லை. அதுவும் அவர்களின் கதாபாத்திரம் இந்த படத்திற்கு துளியும் ஒட்டவில்லை என்பதே அதற்கு காரணம். இரண்டு பேருமே “அட நம்ம இவ்வளவு பெரிய படத்துல நடிக்கிறோமா” என்ற ஆச்சர்யத்தையும், பயத்தையும் முகத்தில் சுமந்தவாரே படம் முழுக்க வருவது போல் தோற்றம் அளிக்கின்றனர்.

முற்பகுதிகளில் சிட்டி ரோபோ செய்யும் சாகசங்கள் அனைத்தும் அனைவரையும் சீட்டின் நுனியில் உட்காரவைக்கும் அளவிற்கு விறுவிறுப்பு. அந்த ரயிலில் நடக்கும் சண்டை காட்சிகளாகட்டும், நெருப்பில் மாட்டிக்கொண்டவர்களை காப்பாற்றுவதில் ஆகட்டும் கண்டிப்பாக இந்தியாவின் சூப்பர் மேன் சிட்டி தான். ஆங்கில படத்தில் மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்த இந்த மாதிரி காட்சிகள் தமிழ் படத்தில் காணும்போது பெருமையாகத்தான் இருக்கிறது. முக்கியமாக சிட்டி பிரசவம் பார்க்கும் அந்த காட்சியை காணும்போது அனைவருக்கும் கண்டிப்பாக சிலிர்த்துவிடும். சூப்பர் மேன், ஸ்பைடர் மேன்  கதாபாத்திரத்தை போல் இந்த சிட்டியையும் பல படங்களில் தொடர்ந்து இந்திய சினிமாவில் எடுக்கும் அளவிற்கு ஸ்கோப் இருக்கிறது. ஷங்கருக்கு இந்த யோசனை இருக்கிறதா என்று தெரியவில்லை.

அதே மாதிரி ரஜினியை தவிர வேறு யாராலும் இந்த படத்தை கண்டிப்பாக செய்திருக்க முடியாது. ரோபோவாக நம்ம ஊர் நடிகர்களை நாம் திரையில் ஏற்றுக்கொள்ள தவறினால் முழு படமுமே எள்ளி நகைக்கக் கூடியதாகிவிடும் சூழ்நிலை இருக்கிறது. ரஜினி கணக்கச்சிதமாக இயந்திர மனிதனாக இதில் பொருந்தி இருக்கிறார். இரண்டாம் பகுதியில் வரும் அந்த வில்லத்தனமான இயந்திரனின் சிரிப்பும், ஆடு மாதிரி கத்திக்கொண்டே நடந்து வரும் தோரணையும் ரஜினியை பிடிக்கவில்லை என்று கூறிக்கொண்டு திரிபவர்கள் கூட அவருக்கு தீவிர ரசிகனாகியே தீரவேண்டும். ஸ்டைல் எதுவும் இல்லமால் தன் நடிப்பை வெளிக்கொண்டு வர நல்ல படமாக இது அமைந்துள்ளது. ரஜினியை ரோபோவாக முற்றிலும் நம்பும்படியாகவும் கொஞ்சமும் இம்மி பிசகாமல் இப்படத்தை உருவாக்கிய விதத்தில் இயக்குனர் ஷங்கரை பாராட்டியே ஆக வேண்டும். இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குனர் என்ற பெயர் கண்டிப்பாக எந்திரன் அவருக்கு பெற்றுக்கொடுக்கும்.

ஒரு விஞ்ஞான அறிவுள்ளவன் அனைவருக்கும் புரியும்படியாக கதை சொல்ல முடியாது. அதே போல் ஒரு படைப்பாளியால் விஞ்ஞானியை போல் டெக்னிக்கல் வார்த்தை அறிந்திருக்க முடியாது. ஆனால் இரண்டையும் கையாளக்கூடிய திறமை படைத்த ஒரே லோக்கல் சரக்கு சுஜாதா மட்டும் தான். அவரில்லாமல் இந்தப்படம் கண்டிப்பாக இந்த அளவிற்கு சாத்தியப்பட்டு இருந்துருக்காது. இந்த கதையின் மூலக்கருவே மறைந்த சுஜாதாவின் ஒரு பழைய சிறுகதையின் தாக்கத்தால் உருவானதே என எங்கோ படித்தாய் ஞாபகம்.
படத்தின் வசனங்களில் நிறைய இடத்தில், சுஜாதா தான் இறந்தாலும் தன் எழுத்திற்கு அழிவில்லை என்று ஞாபகப்படுத்துகிறார். சந்தானமும், கருணாசும் சிட்டி ரோபோவிடம் “எங்களுக்கு மட்டுமே இருக்கும் ஒன்று உனக்கு இல்லை” என்று அதை உசுப்பேற்றிவிட. அது வசீகரனிடம் சென்று “அது என்ன எனக்கு மட்டும் இல்லை” என்று அம்மாஞ்சியாய் கேட்பது போன்ற நையாண்டி வசனமும். இன்னொரு காட்சியில் மனிதர்களிடம் மட்டுமே இருப்பது போட்டி, பொறாமை, வஞ்சகம், துரோகம் போன்ற உணர்வுகள்தான் என்ற வசனமும் ஹய்லைட். கொசுவிடம் பேசும் அந்த காட்சிகளும் சுஜாதாவின் கைவன்னம்தான்.

பின்னணி இசையில் ஏ.ஆர் ரகுமானுக்கு சரியான தீனி இந்த படத்தில் கிடைத்துள்ளது. ஹாலிவுட் படத்தில் வருவது போன்ற பின்னணி இசை இந்திய மண்ணில் இவரை தவிர வேறு யாராலும் தரமுடியாது. அட ஹாலிவுட்காரனுங்களுக்கே இவர் மியூசிக் போட போய்ட்டார் அப்புறம் என்ன ஹாலிவூட் போன்ற பின்னணி என்ற அடைமொழி?!!! சும்மா சொல்லக்கூடாது க்ளைமாக்சில் கலக்கிவிட்டார் மனுஷன். அரிமா அரிமா பாடலில் வரும் “எந்திரா எந்திரா” பிட் தான் இனிமேல் அலாரம் டோனாக வைக்கப் போகிறேன். எவ்வளவு தூக்கத்தில் இருந்தாலும் “எந்திரா… எந்திரா,,,” என்று உச்சக்குரலில் கத்தி எழுப்பி விடும் ஒரு பாடல்.

ஆஸ்கார் விருது பெற்ற ராசூல் பூக்குட்டி இத்திரைப்படத்திற்கு அதே உலகத்தரமான ஸ்பெஷல் எபக்ட்ஸ் செய்துள்ளார். அது படத்தை பார்த்தால் தான் உணர முடியும். ஒளிபதிவாளர் ரத்தினவேலு அபாரம். கிளிமாஞ்சரோ பாடலையும், காதல் அணுக்கள் பாடலையும் திரையில் காணும்போது கண் சிமிட்டாமல் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. கொள்ளையழகாய் தன் காமிராவில் படம்பிடித்து இறக்கிறார். சாபு சிரிலின் கலையும் அப்படியே. படத்தில் எந்த இடத்திலும் கிராபிக்ஸ் எது? செட் எது? என்றே கண்டுபிடிக்க முடியாது.

இப்படி படம் நெடுக பல பெருமைகள் இருந்தாலும் படத்தில் சில குறைகள் இல்லாமல் இல்லை. என்னதான் மாதக்கனுக்குல பரீட்சைக்கு படிச்சிட்டு போனாலும் சில கேள்விகளுக்கு  சொதப்புவது இல்லையா அது போல தான். லஞ்சம், அரசியல் போன்று தான் தொன்று தொற்று பின்பற்றும் பார்முலாவை இந்த படத்தில் விட்டுவிட்டு வந்தாலும்  ரஜினி இருக்கும் தைரியத்தில் கதையிலும் கவனம் செலுத்தாமல் விட்டு விட்டார் போலும். கதைக்களம் நமக்கு புதியதாய் இருந்தாலும் கதை அரதப்பழசுதான். முக்கோண காதல் கதை. கடைசியில் உண்மையான காதலர்களே சேருகிறார்கள். இந்த படத்திற்கான ரோபோ என்ற கருவை வைத்து படத்தின் கதையில் பூந்து விளையாட வாய்ப்புகள் இருந்தும் ஒரு இந்தியக்கதையை ஆங்கில படத்திற்கு இணையான தரத்தில் சொல்ல மட்டுமே முயன்று இருக்கிறார் இயக்குனர்.

சில இடங்களில் காட்சிகோர்வைகள் இல்லை. இன்னும் சில இடங்களில் டீடைல்ஸ் பத்தவில்லை. பாமரனுக்கு புரியாது என்று விட்டு விட்டார்களோ என்னவோ. எனக்கு க்ளைமாக்சை காணும்போது ராமநாரயனின் “குட்டி பிசாசு” ட்ரைலரை பார்த்த நியாபகம் தான் வந்தது. (படம் பார்க்கவில்லை). கிளைமாக்ஸில் இன்னும் கொஞ்சம் வித்யாசமாக சிந்தித்து கொஞ்சம் சுவாரசியமாக எடுத்திருக்கலாம். கிராபிக்ஸ் பண்ணிக்காலம் என்ற நம்பிக்கையில் அதை பற்றி கவலைப்படவில்லை போலும். ஆங்கிலப்படங்களை அவ்வளவாக கண்டிராதவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கண்டிப்பாக கிளைமாக்ஸ் பிரமிக்க வைத்து இருந்து இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் நீண்டு போய் தொய்வை ஏற்படுத்துகிறது. இவை அனைத்தும் குறைகள் என்பதை விட படத்தை மேலும் மெருகேற்றகிடைத்த வாய்புகள் என்றும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் நிச்சயம் எந்திரன் தலையில் தூக்கிவைத்து கொண்டாடவேண்டிய ஒரு படம். தமிழ் படமாயிற்றே… இங்கே இருந்து இவ்வளவு தூரம் பண்ணி இருப்பது சும்மாவா?

இந்த திரைப்படத்தில் சங்கர் சொல்லவந்த விஷயம் இது தான், வஞ்சகம், துரோகம், பழிவாங்குதல் போன்ற மனிதர்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய குணங்களை விட்டொழிந்து வாழ வேண்டும். அது மட்டுமில்லாமல் வசீகரன் தனக்கு துரோகம் செய்துவிட்ட சிட்டியை வெட்டி உடைக்கும் போது “எனக்கு வாழனும் டாக்டர், நான் சனாவை காதலிக்கிறேன்னு” கெஞ்சும்போதும். க்ளைமாக்சில் சிட்டி தன்னை தானே ஒவ்வொரு பாகமாய் கழட்டி உயிர்துறக்கும் சீனும் கண்டிப்பாக ஒவ்வொருவர் மனதிலும் பாரத்தை ஏற்படுத்துவான் இந்த எந்திரன்.

இந்த படத்தில் இயக்குனர் சங்கருக்கே தெரியாமல்  இன்னொரு  மெசேஜ் இருக்கிறது. அது என்னவென்றால், எப்பேர்பட்ட புத்திசாலியாக இருந்தாலும் ஒரு பெண்ணை மட்டும் காதலிக்க ஆரம்பித்தால் கடைசியில் அவனுக்கு நிச்சயம் சங்கு தான்.  அது ரோபோவாக இருந்தாலும் சரி.   பூம் பூம் ரோபோடா…..yahoo

Share

எந்திரன் திரைப்படம் இலவச டவுன்லோட்- இணையத்தில் முதல் முறையாய்

endhiran-movie-download

பிற்பாடு சேர்க்கப்பட்டது:

இன்னுமுமா இந்த உலகம் இதை நம்பிக்கிட்டு இருக்கு? போதும் நிறுதிக்கலாம். இது வெறும் கற்பனை கதை. எந்திரன் இங்கே கிடைக்கமாட்டான். அக்டோபர் ஒன்று முதல் தியேட்டரில் காணுங்கள்…

——————————————————————————————————————————————————————-

இன்னும் இரண்டு நாட்களே எந்திரன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் இந்த சூழலில் சன் பிக்சர்ஸ்க்கு வந்திருக்கிறது ஒரு புது தலைவலி. கடைசிவரை இத்திரைப்படத்தின் துணுக்குச்செய்திகள் முதல் பட ஸ்டில்கள் வரை பொத்திப்பொத்தி வைத்திருந்த இயக்குனர் சங்கர் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதை பிரிண்ட் போடுவதில் கவனக்குறைவாக இருந்துவிட்டார்கள் போலும். அமெரிக்காவின் ஒரு கட்டண திரைப்பட டவுன்லோட் இணையத்தளம் எந்திரன் திரைப்படத்தின் ஹெச்.டீ எனப்படும் ஹய் டெபனிஷன் (மிகத்துல்லிய) வீடியோ பதிவை இன்று வெளியிட்டுள்ளது. இதை டவுன்லோட் செய்ய அந்த இணையத்தில் பதிவு செய்து கிரிடிட் கார்டு மூலம் பத்து அமெரிக்கன் டாலர் (US$10) கட்டணம் செலுத்த வேண்டும். இரண்டு மணி நேரம் முப்பத்தைந்து நிமிடம் ஓடும் அந்த படம் இணையத்தில் முதல் முறையாக அங்கு மட்டும் தான் வெளியிடபட்டு இருக்கிறது. இதை அமெரிக்க வாழ் நண்பர் ஒருவர் அந்த இணையத்தின் டவுன்லோட் முகவரியுடன் இன்று எனக்கு ஈமெயிலில் அனுப்பிவைத்து இருந்தார்.

எந்திரன் திரைப்படம்  வெளியிடுவதற்கு முன்பாகவே இணையத்தில் அதை வெளியிட்டதை பார்த்ததும் எனக்கு பயங்கர அதிர்ச்சி. இதை நான் நம்ப மறுப்பதாக அவர் ஈமெயிலிற்கு பதில் அனுப்பினேன். பிறகு நண்பர் அதை பணம் கட்டி டவுன்லோட் செய்து வேறொரு இலவச கோப்புகள் போட்டு வைக்கும் ஒரு இணையத்தளத்தில் அதை இரண்டு பகுதிகளாக பதிவேற்றம் செய்து அந்த டவுன்லோட் முகவரியை மீண்டும் அனுப்பி  வைத்து இருந்தார். ஆச்சர்யம் ஆனால் உண்மை. இதை எழுதும்போது ஒரு பகுதி பதிவிறக்கம் செய்து நான் பார்த்து முடித்தாயிற்று. படம் சூப்பர்…. சான்ஸ்சே இல்ல…. விஞ்ஞானி ரஜினியின் பெயர் வசீகரன். படத்தின் ஆரம்பத்திலேயே சிட்டி ரோபோ வந்து விடுகிறது. அதன் பிறகு அது செய்யும் அட்டகாசம் கொஞ்சநஞ்சமல்ல. பாதி படம் தான் பார்க்க முடிந்தது.  விமர்சனம் மிக விரைவில். இன்னொரு பகுதி பதிவிறக்கம் ஆகிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் அந்த டவுன்லோட் முகவரியை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இதை எழுதுகிறேன். யாரேனும் அதை கண்டுபிடித்து அகற்றுவதற்கு முன்னர் டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். சங்கேத குறியீடு (password) போட்டால் தான் பதிவிறக்கம் செய்ய முடியும், மறந்து விடாதீர்கள்.

எந்திரன் திரைப்படத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்ய சொடுக்குங்கள்.

சங்கேத குறியீடு(Password):   www.cpraveen.com

எந்திரன் பகுதி 1: Click Here

எந்திரன் பகுதி 2: Click Here

பின்குறிப்பு: திரைப்படங்களை திருட்டுத்தனமாக காண்பது தவறு என்ற கொள்கை உள்ளவர்கள் தயவு செய்து இதை சொடுக்க வேண்டாம். தியேட்டரில் வழக்கம் போல் டிக்கெட் எடுத்து பாருங்கள். எந்திரனை ஓசியில் காண விரும்புகிறவர்களுக்கு மட்டுமே  இந்த பதிவிறக்கம். இந்த திருட்டு பதிவிறக்கத்தால் ஏற்படும் யாதொரு பிரச்சனைகளுக்கும், மனசோர்வுகளுக்கும் கம்பெனி பொறுப்பல்ல.

பிற்பாடு சேர்க்கப்பட்டது:

29-09-2010: 8:30 PM IST:  நண்பர்களே….. இந்த பதிவின் மூலமும்,  ட்விட்டர் மற்றும் பேஸ்புக் மூலம் இந்த பதிவை நீங்கள் பகிர்ந்து கொள்ளுவதாலும் எனக்கு யாதொரு “பண வரவும்”, “வியாபார நன்மையும்” இல்லை என்பதை இந்த பிற்சேர்க்கை மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். எந்திரன் வீடியோவை நீங்கள்  கண்டுகளித்து இன்புற்றதை உங்கள் நண்பர்களிடம் பகிர்த்து கொள்ளுவதே அதன் நோக்கம்.

Share

பாராட்டப்பட வேண்டிய முதல் கோவை பதிவர்கள் சந்திப்பு

செப்டம்பர் 18, சனிக்கிழமை மாலையன்று “முதன் முறையாக” கோவை சென்று இறங்குகிறேன். காந்திபுரம் பஸ் நிலையம் அருகிலிருக்கும் ஹோட்டல் அலங்கார் என்ற ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலில், கோயமுத்தூரில் “முதன் முறையாக” நடைபெறவிருந்த அந்த பதிவர்கள் சந்திப்பிற்கு அழைக்கப்பட்டதாலே இந்த பயணம். கடைசி தருணத்தில் முடிவு செய்யப்பட்டு, புறப்படும் அன்று காலை அவசர அவசாரமாக ஒரு ப்ரசன்டேஷன் தாயார் செய்து  ஒரு பென் டிரைவில் ஏற்றிக்கொண்டு, சேலத்தில் இருந்து புறப்பட்டேன்.. அதுவும் ஒரு ஒத்திகைகூட இல்லமால் “முதன் முறையாக” என் உரையை நிகழ்த்துவதற்கு. இப்படி பல “முதன் முறையாக” அரங்கேறிய நாளது என்றே சொல்லலாம்….

சரியாக ஏழு மணிக்கு அனைவரும் சுயஅறிமுகம் செய்து கொள்ளப்பட்டு நிகழ்ச்சி துவங்கப்பட்டது. அந்த சந்திப்பிற்கு தொழில் / பணிகள் புரியும் பதிவர்கள் சிலர் வந்திருந்தாலும் மாணவர்களே நிறைந்து இருந்தனர். அனைவருக்கும் பதிவுலகில் வெற்றிகரமாக கால்பதிக்கும் ஆர்வம். தங்கள் வலைப்பூவின் மூலம் பணம் சம்பாதிக்கவும், தொழில் முனையவும், தாங்கள் கட்டமைக்கும் மென்பொருள் பிறரிடம் பகிர்ந்து கொள்ளவும், இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணங்கள். அனைவரும் பதிவுலகிற்கு புதியது என்பதால் அதில் வெற்றிபெற ஒரு தெளிவான பார்வையை அவர்களுக்கு வகுத்திட நான் தேர்ந்தடுத்த அந்த தலைப்பு “உங்கள் வலைப்பூவை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்வது எப்படி?”. ப்ரோஜெக்டரில் அவசரத்தில் பிறந்த அந்த ப்ரசன்டேஷன் காண்பிக்கப்பட்டு சுமார் இருபது அல்லது இருபத்தைத்து நிமிடங்கள் என்னுடைய எண்ணங்களை என் அனுபவத்தினூடே பகிர்ந்து கொள்ள முயற்சித்தேன்.

அங்கு வருகை புரியாதவர்களுக்கு இதோ அந்த சந்திப்பிற்காக நான் தாயார் செய்த அந்த ப்ரசன்டேஷன்.

அதற்கடுத்து மீண்டும் அங்கு வந்திருந்த அனுபவமுள்ள பதிவர்களும் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர்.  பிறகு அங்கேயே சுவையான அசைவ பப்பெட் உணவு வழங்கப்பட்டு உணவருந்தியவாறே மீண்டும் கலந்துரையாடல் தொடர்ந்தது.  சந்திப்பு முடிவு பெறும் முன்னர் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த “பிளாக்கர்” லோகோ பதித்த டீ-ஷர்ட் அனைவருக்கும் கொடுத்தனர். அதுமட்டுமல்லாமல் அங்கேயே அந்த டீ-ஷர்ட் உடுத்திக்கொண்டு அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அனைவரும் அதை உடுத்திக்கொண்டு புகைப்படத்திற்கு தயாராக நின்றபோது நான் மட்டும் அதே உடையுடன் நின்றேன். காரணம்…. அங்குள்ள அனைவரும் “பிளாக்கர்” பயனர்கள், நான் மட்டும் “வோர்ட்பிரஸ்” பயனர் என்பதால் மட்டும் அல்ல. பிளாக்கர் உபயோக படுத்தவேண்டாம் என்று என்னுடைய உரையில் ஆணித்தரமாக நான் கூறியதாலும் அல்ல. டீ-ஷர்ட் அளவு எனக்கு பத்தாது என்று அந்த சயமத்தில் என் சமயோசித புத்தி சிந்தித்ததன் காரணமாகவும் இருந்திருக்கலாம். :)

வரவேற்கத்தகுந்த இந்த முதன் “கோவை பதிவர் சந்திப்பு” முழுக்க முழுக்க பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி மாணவர்களின்  முயற்சியாலே நடத்தப்பட்டது என்பது நிச்சயம் பாராட்டுக்குரியது. இந்த சந்திப்பை வெற்றிகரமாக நிகழ்த்துவதற்காக அதனை ஒருங்கிணைத்த மாணவர்கள் நிகழ்ச்சி தொடங்கும் வரை பதட்டமாக இருந்தாலும் அவர்களின் முகத்தில் அது தென்படவில்லை. முதன் முதலாய் இதை நடத்துவதால் ஆரம்பம் முதலே பல சிக்கல்கள் உருவாவதற்கான சாத்தியங்கள் இருந்தும் கடைசியில் அதை வெற்றிகரமாக நடத்தி முடித்த அந்த மாணவர்களை வாழ்த்தாமல் வர மனம்வரவில்லை. அவர்களின் முயற்சியில் என்னால் இயன்ற பங்கேற்பை செய்ய முடிந்தது என்ற மகிழ்ச்சியோடு அங்கிருந்து விடைபெற்றேன்.

Share

சூப்பர் ஸ்டாரின் பக்தர்களுக்கு மட்டும்

எந்திரன் திரைப்படம் விரைவில் திரைக்கு வருவதை முன்னிட்டு இதோ ரஜினியின் துதி பாடல்கள்… சூப்பர் ஸ்டாரின் பக்தர்களுக்கு மட்டும்…

(கீழுள்ள போட்டோவை கிளிக்  செய்தால் இன்னும் பெரிதாகும்)

உங்களிடம் இன்னும் வேறு எதாவது இதை போன்ற ரஜினியின் துதிகள் இருந்தால் கீழே பகிர்ந்துக்கொள்ளவும்… மற்றவர்களும் ரசிக்கட்டும்…

Share

சிரித்தே தொலைக்க வேண்டிய பாஸ் என்கிற பாஸ்கரன் – விமர்சனம்

Boss-Engira-Baskaran

நீண்ட நாள் கழித்து ஒரு முழுநீள நகைச்சுவை திரைப்படத்தை பார்த்த திருப்தி. “இரும்புக்கோட்டை முரட்டு சிங்கத்தில்” எதிர்பார்த்து, “தில்லாலங்கடியை” நம்பி சென்று கிடைக்காத திருப்தி இந்த படத்தில் கிடைத்தது என்றே சொல்லலாம். சண்டை இல்லை, அழுகாச்சி இல்லை, செண்டிமெண்ட் இல்லை. அட சோக சீன் வரும் இடத்தில கூட ரசிகர்களை சிரிக்க வைத்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்ட இந்த திரைப்பட இயக்குனர் ராஜேஷை என்னவென்று சொல்ல! கடைசி சீன் வரை சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் வேறு வழி இல்லை.

ஆர்யா பல வருடங்களாக அரியர் எழுதிக்கொண்டு வீட்டுக்கு பாரமாய் வாழும் ஒரு உதவாக்கரை ஹீரோ. சந்தானம் முடி திருத்தும் நிலையத்தை நடத்தி ஆர்யாவின் இதர செலவுகளையும் கவனித்துக்கொள்ளும்  “நண்பேன்டா”. ஆர்யாவின் அண்ணியின் தங்கை தான் இந்த நயன்தாரா. அண்ணியிடம் தான் காதலிக்கும் நயன்தாராவை பெண் கேட்க அவரோ உன்னை போன்ற உதாவாக்கரைக்கு எதை நம்பி என் தங்கையை கொடுப்பது என்று மறுத்துவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த ஆர்யா வீட்டை விட்டு வெளியேறி ஒரு டுடோரியல் சென்டர் தொடங்கி நயன்தாராவை கைபிடிப்பதே கதை.

இதை கேட்டவுடன் ஏதோ சீரியசான கதை என்று பயந்து விடாதீர்கள். பெயருக்கு கூட சீரியசான சீன் படத்தில் இல்லை. அதே மாதிரி வழக்கம் போல தமிழ் படத்தை போல் ஒரே பாடலில் ஹீரோ வளர்ந்து விடவுமில்லை. நான் முதலில் சொன்ன மாதிரி சோக சீன் என்று நீங்கள் நினைத்தால் கூட சிரித்தே தொலைய வேண்டும். எடுத்துக்காட்டாக, வீட்டை விட்டு  வெளியேறும் ஆர்யா மழையில் நனைந்தபடி தெருவில் நடக்கும் போது ஆர்யாவின் அண்ணன் வீட்டிலிருந்து அவரிடம் ஓடி வருகிறார். ஆர்யா அவரிடம் “நீ இப்படி எல்லாம் ஓடி வந்து கூப்ட்டாலும் நான் வருவதாய் இல்லை” என்று சொல்ல. அதற்கு அவர் அண்ணனோ “சீ.. உன்னை யாரு கூப்பிட வந்தா. மழை பேஞ்சிட்டு இருக்கு இதை சாக்கா வச்சி திரும்ப வீட்டுக்கு கீது வந்துடாத இந்தா குடை” என்று கொடுத்துவிட்டு செல்வார். இப்படியே படம் முழுவதும் சீரியசான காமடிகள்.

Boss-Engira-Baskaran-review

இந்த படத்தில் கதை கிடையாது, திரைக்கதை கிடையாது வெறும் டயலாக்கை நம்பியே எடுக்கப்பட்ட படம். ஒவ்வொரு டயலாகிற்கும் ஒரு காமடி என்ற பார்முலாவில் எழுதியுள்ளார் இதன் இயக்குனர்.  ஆர்யா எது சொன்னாலும் அதற்கு டைமிங் காமடி கொடுத்துக்கொண்டே இருப்பார் சந்தானம். சந்தானம் தான் இந்த படத்தின் பிளஸ். ஆர்யா அவரிடம் “உனக்கு அந்த இங்கிலீஷ் வார்த்தைக்கு அர்த்தம் கேட்டப்போ ஒன்னு தெரியும்னு சொல்லி இருக்கணும் இல்லேன்னா தெரியலன்னு சொல்லி இருக்கணும்.  ஏன்டா தப்பான அர்த்தத்தை சொன்னே”னு கேட்க்க. அதற்கு சந்தானமோ “ஒரு வேலை பிரிட்டிஷ் இங்கிலிஸ்ல அவ பேசியிருப்பா” னு சொன்னப்ப சிரிப்ப அடக்க முடியல.  இந்த மாதிரி ஒவ்வொரு டயலாக்கும் படத்துல நகைச்சுவை தான்.

நயன்தாரா இந்த படத்துடன் தன் கலை உலக சேவையை நிறுத்திக்கொள்ளலாம். அவருடைய முகமும் ஹேர் ஸ்டைலும் பார்க்க சகிக்கவில்லை. யுவனின் இரண்டு பாடல்கள் மட்டுமே இதில் ரசிக்கும் படி உள்ளது. பின்னணி இசையில் அவருக்கு சரியான வேலை இல்லை படத்தில். பழைய திரைப்படத்தின் பாடல்களையே நிறைய இடத்தில நகைச்சுவைக்காக பின்னணியில் சேர்த்து விட்டிருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் இயக்குனரான ராஜேஷின் முதல் படமான சிவா மனசுல சக்தியை விட இதில் காமடி நிரம்பி வழிகிறது. அந்த படத்தில் நடித்த ஜீவா கூட இதில் ஒரு சிறப்பு தோற்றத்தில் வந்து மனசை அள்ளுகிறார். அதுவும் சிவா மனசுல சக்தி படத்தில் வருவது போன்ற அதே வாய்ஸ் மொடுலேசனில் நயன்தாராவின் அப்பாவை பார்த்து “மாமா அப்டியே ஒரு கோட்டர் சொல்லேன்”னு சொல்லி ஸ்கோர் பண்ணிவிடுகிறார். பாஸ் என்கிற பாஸ்கரன் கண்டிப்பாக நாற்பது வயதுக்கு உட்பட்டவர்களால் மட்டுமே ரசிக்க முடியும்.

Share

ஐயம் வேணுகோபால் ப்ரம் டைடல் பார்க் – சென்னை பயணம் பாகம் இரண்டு

chennai-egmoreபோட்டோ கிரெடிட் – பாண்டியன்

முந்தைய பாகங்கள்:
ரயில் பயணங்களில் – சென்னை பயணம் பாகம் ஒன்று (கிளிக்க)
ஐயம் வேணுகோபால் ப்ரம் டைடல் பார்க் – சென்னை பயணம் பாகம் இரண்டு (கீழே)

மொபைலில் காலை நான்கு முப்பதிற்கு அலாரம் அடிக்கவும், ரயில் சரியாக அதே நேரத்தில் எக்மோர் ரயில் நிலையத்தை அடைந்து இருந்தது எனக்கு சிறிது ஆச்சர்யம்தான். கீழே இறங்கிய அந்த தூக்க கலக்கத்திலும் போர் ஸ்கொயரில் செக் இன் செய்ய மறக்கவில்லை. வெளியே வந்ததும் வராததுமாக காக்கிச்சட்டை மனிதர்கள் என்னுடைய லக்கேஜை பிடுங்குவதிலேயே ஆர்வம் காட்டினர். “புரசைவாக்கம் சங்கம் தியேட்டர் போகணும் எவ்வளோ” என்றேன். நூறு ரூபாய்க்கு குறைவாக யாரும் வருவதாக தெரியவில்லை. வெறும் ஐந்து நிமிட பயணத்தில் நூறு ரூபாய் சென்னையில் சம்பாதிக்க முடியுமென்றால் எங்க ஊர் பஸ் மற்றும் லாரி உரிமையாளர்கள் கூட சென்னையில் எப்போதோ ஆட்டோ வாங்கி விட்டு இருப்பார்கள்.

ஆட்டோ இப்போது வந்து சேர்த்த இடம் புரசைவாக்கத்தின் பிளவர்ஸ் ரோடு.. விடியாத அந்த காலைப்பொழுதில் நண்பர் முன்பதிவு செய்து கொடுத்திருந்த அந்த ஹோட்டலை சென்றடைந்த போது இன்னொரு ஆச்சர்யம் எனக்கு காத்திருந்தது. முன்னொரு காலத்தில் நான் சென்னையில் அதிகாமாக சுற்றி திரிந்த பகுதியின் ஒரு தெரு தான் அது. ஆனால் இங்கே இப்படி ஒரு ஹோட்டல் இருந்திருக்கிறது என்று எனக்கு அது நாள் வரை தெரிந்திருக்கவில்லை. அமைதியான, அழகான அதற்கும் மேலே மிகவும் சுத்தமான அந்த அறைக்குள் நுழைத்தும், குளிசாதனப்பெட்டியை முடுக்கி விட்டு மீண்டும் ஒரு குட்டித்தூக்கம் போட்டேன்.

காலை ஒன்பது மணிக்கு நானும் இரு நண்பர்களும் டைடல் பார்க்கை சென்றடைந்த போது மீண்டும் போர் ஸ்கொயரில் ஒரு செக் இன். அங்கு தான் இந்தியா சர்ச் சம்மிட் 2010 நடை பெற இருந்தது. நாங்கள் சென்றதன் நோக்கமே அதில் கலந்துக்கொள்ளதான். சர்ச் சம்மிட் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து இன்டர்நெட் மார்கெட்டிங் நிபுணர்களும் ஒன்று கூடி கலந்துரையாடும் இந்தியாவின் ஒரே கருத்தரங்கம். அதாவது இது யாருக்கு பயன்படுமென்றால் இணையத்தில் வர்த்தகம் புரிபவர்களுக்கும், தங்களுடைய பிராண்டை இன்டர்நெட்டில் வலுப்படுத்த நினைப்பவர்களுக்கும், சோசியல் நெட்வொர்க்கிங் இணைய தளங்களில், கூகிள் போன்ற தேடுபொறிகளில் எப்படி வர்தகங்களுக்காக கையாளுவது, இணையத்தில் வாடிக்கையாளர்களை பெறுவது போன்ற தேவை இருப்பவர்களுக்கும், அதில் ஏற்கனவே அனுபவமுள்ள நிபுணர்களுக்கும், புதிதாக இத்துறையில் நுழைய விரும்புவர்களுக்குமாகும்.

டைடல் பார்க்கின் முதல் தளத்திலேயே அமைந்து இருந்த குளிரூட்டப்பட்ட ஆடிட்டோரியமும், இலவச வை-பை இன்டர்நெட்டும் இந்த கருத்தரங்கிற்காக ஸ்பான்சர் செய்திருந்தது சிப்பி (SIFY). சுமார் நூற்றி சொச்சம் நபர்களின் வருகையால் அரங்கம் நிறைந்து போயிருந்தது. பல வடஇந்திய வாசனைகளும் ஆங்காங்கே அரங்கத்தில் கலந்திருந்தது. வந்திருந்த அனைவரும் அமர்ந்து இருந்த இடத்திலேயே மைக் வழங்கப்பட்டு சுயஅறிமுகம் செய்துகொள்ளப்பட்டது. அனைவரும் அவர்களது ட்விட்டர் அக்கவுன்ட்டை கூறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது தான் இந்த கருத்தரங்கின் மிக முக்கியமாக ஒன்று. இக்கருத்தரங்கு நடைபெறும் இரு நாட்களும் அனைவரும் நேரடி ட்வீட் பதிப்பாளர்களாக செயல்படவேண்டும் என்பதே நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்களின் வேண்டுகோளாக வைக்கப்பட்டது.

அது சரி நேரடி ட்வீட் பதிவாளர்கள் என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளால் நடந்த  துப்பாக்கி சூடு ஞாபகம் இருக்கிறதா? அங்கு நடந்த செய்திகளை தொலைக்காட்சி, வானொலியை விடவும் மக்களிடம் நேரிடையாக உடனுக்குடன் கொண்டு சேர்த்த ஊடகமாக செயல்பட்டது இந்த ட்விட்டர் தான். அது போல் இந்தியாவிலும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கண்காணிக்கப்பட வாய்ப்புள்ள இந்த கருத்தரங்கின் நிகழ்வுகளை நேரிடையாக கொண்டு செல்லவே ட்விட்டர் இங்கும் பயன்படுத்தப்பட்டது. அதற்காக பயன்படுத்தப்பட்ட ஹாஸ் டாக் #iss2010

பேச்சாளர்கள் உரையாற்றிக்கொண்டு இருக்க அங்கே இருந்த அனைவரும் அதை நேரிடையாக தாங்கள் கொண்டு வந்திருந்த மடி கணினி மூலம் ட்விட்டரில் பதிவித்துக்கொண்டு இருந்தனர். நான் முதல் நாள் என்னுடைய மடி கணினியை எடுத்துசெல்லவில்லை இருப்பினும் என்னுடைய ப்ளாக்பெர்ரியில் வந்து விழுந்தது ஒரு ட்வீட்டு. “ஹாய், நிறைய பிரவீன்கள் இந்த அரங்கில் இருக்கிறார்கள் போலும்., நானும் பிரவீன் தான். தேநீர் இடைவேளையின் போது சந்திப்போம்” என்று இருந்தது. அந்த அளவுக்கு அந்த அரங்கில் வெவ்வேறு மூலையில் இருந்தவர்களையும் நேரடி தொடர்பில் வைத்திருந்தது இந்த ட்விட்டர். உலகின் வெவ்வேறு மூலையில் இருப்பவர்களையே தொடர்பில் வைத்து இருக்கும் போது இது என்ன…

அது சரி விளையாட்டு குணமுள்ளவர்கள் இங்கும் இல்லாமல் போய் விடுவார்களா? அவர்கள் கையில் ட்விட்டர் அங்கே என்ன பாடு பட்டது தெரியுமா? அந்த அரங்கில் யாரோ தெனாலி ராமன் என்கிற பெயரில் பொய்யான ட்விட்டர் கணக்கை தொடங்கி ஒரு நகைச்சுவை தர்பாரே நடத்திவிட்டார். அங்கு நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் டைமிங் காமடியும், நக்கலும் அடித்து கலகலப்பை உண்டு பண்ணிக்கொண்டு இருந்தார் அவர். நல்ல வேலை கைகலப்பு அளவுக்கு போகவில்லை! கடைசி வரை அரங்கில் இருந்த மற்ற ட்விட்டர் பயனாளர்கள் அவரை பார்க்கும் ஆர்வத்தில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டுகோள் ட்வீட் விடுக்க, அவரோ சட்டென்று காணமால் போய்விட்டார். கடைசி வரை அவர் யாரென அவரை தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அது கூட பரவாயில்லை, மதிய உணவு உண்ட களைப்பில் ஒரு நபர் கருத்தரங்கு நடந்துக்கொண்டு இருக்கும்போதே கண் அயர்ந்து விட, அருகில் இருந்த மற்றொரு நபர் தன் கேமரா போனில் கிளிக்கி ட்விட்டரில் போட, ஐந்தே நிமிடத்தில் அனைவாராலும் மறு ட்வீட் செய்யப்பட்டு அவர் பேமஸ் ஆகி விட்டார். அதற்கடுத்து நடந்த தேநீர் இடைவேளையின் போது அனைவரும் இவரை “அவரா இவர்” என்ற தோணியில் நோட்டம் விட, இவரும் என்னவென்று புரியாமல் அம்மாஞ்சியாக முழித்துக்கொண்டு இருந்தார். (கிளிக்க)

நேற்று (08-09-2010) ஜெயா பிளஸ் சானலில் கூட  இந்த நிகழ்ச்சியின் பதிவை தொகுத்து வெளியிட்டனர். இந்த கருத்தரங்கின் முக்கியத்துவத்தையும், அதில் நடந்த பயனுள்ள சம்பவங்களையும் இங்கே தமிழில் போட்டால் அது சென்றடையும் மக்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இது வெறும் பயனக்கட்டுரையாக இருக்கட்டும் என எண்ணுகிறேன். அதனால் அதை இன்னும் டீடெயில்டாக  என்னுடைய ஆங்கில வலைப்பூவில் இடுவாதாக உள்ளேன்.  இருந்தாலும் அந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிடத்தகுந்த நிகழ்வை இங்கே நான் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஒரே விஷயம் என்னவென்றால் அது “ரிமோட் வீடியோ கான்பரன்சிங்”.

ஆம் இரண்டாம் நாள் காலையில் கலிபோர்னியாவிலிருந்து ஒரு பெண்மணி வீடியோ கான்பரன்சிங் மூலம் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இங்கே அனைவரும் பெரிய ப்ரொஜெக்டர் திரையில் அவரை பார்த்தவாறே ஒவ்வொருவராய் கேள்விகள் கேட்க, அவர் அங்கே அறையிலிருந்துக்கொண்டு தன் கணினியின் மூலம் அரங்கில் இருப்பவர்களை பார்த்தவாறே கலந்துரையாடினார். “வீடியோ கான்பரன்சிங்” என்பது என்னை போன்ற இணையத்தில் பிழைப்பை நடந்துவர்களுக்கு பெரிதாக தெரியாவிடிலும், இங்கே அதை பயன்படுத்தி இருந்த விதம் பாராட்டத்தக்கது. இந்தியாவிற்கே வராமல் தன்னுடைய கருத்துக்களை அந்த பெண்மணி பகிர்ந்து கொள்ள இந்த டெக்னாலஜி வாய்ப்பை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் நாள் மதிய உணவின் போது அருகில் இரண்டு வட இந்தியர்கள் “Sify has sponsored the auditorium and  free wi-fi internet right? so I dont think 1000 bucks for each ticket is going towards the expenses on organising this event” என்று பேசிக்கொண்டது காதில் வந்து விழுந்தது. குறைகள் பல இருந்தாலும் அனைத்து இன்டர்நெட் மார்க்கட்டிங் ஸ்பெஷலிஸ்டுகளையும் ஒன்று திரட்டிய முயற்சிக்காக பாராட்டலாம் என எங்களுக்குள்ளேயே கூறிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.

salemjilla team

அதன் பிறகு இரண்டாம் நாள் நிறைய முக்கிய பேச்சாளர்கள் மிஸ்ஸிங் போல தெரிந்தது. அதிலிருந்து கொஞ்சம் மந்தமாகத்தான் சென்றது கருத்தரங்கம். அதன் பிறகு பேசிய பேச்சார்கள் கவனத்தை ஈர்க்க தவறிக்கொண்டு இருந்தனர்.  ட்விட்டரிலும் அது எதிரொலித்தது. சூடான விவாதங்கள் ட்வீட்டாக அரங்கேரிக்கொண்டிருந்த நேரம் அது.   மீதமிருந்த ட்விட்டர் பயன்படுத்தாதோர் அநேகமாக குளிரூட்டப்பட்ட அறையின் சொகுசால் மெல்ல மெல்ல கண்ணயர்ந்துக்கொண்டு இருந்தனர். நிகழ்ச்சியின் இறுதிகட்டத்தை நெருங்க பொறுமையிழந்த நண்பர் மெல்லமாய் எங்களிடம்  “ஐயம் வேணுகோபால்…. ப்ரம் டைடல் பார்க்…. ஐயம் பினிஸ்ட்… போலாமா” என்றார். சூழ்நிலையை புரிந்தவர்களாய் மடிகணினியை மடித்துக்கொண்டு டைடல் பார்க்கிலிருந்து விடைபெற்றோம் மூவரும். (அது என்ன ““ஐயம் வேணுகோபால்…. ப்ரம் டைடல் பார்க்…. ஐயம் பினிஸ்ட்” என்று கேள்வி உங்களுக்கு எழும்பினால் இந்த வீடியோவை பார்க்கவும் http://youtu.be/sBidvDcweEk )

இப்படியே இருநாள்களும் கருந்தரங்கிலேயே முடிந்துபோனதா என்றால் கண்டிப்பாக இல்லை. அந்த இரண்டு இரண்டு நாட்களையும் நாங்கள் மறக்க முடியாத நாட்களாக்கிஇருந்தோம். முதல் நாள் இரவு எக்ஸ்பிரஸ் அவன்யூவில் புதிதாக ஆரம்பம் செய்து இருந்த சத்யம் எஸ்கேப் தியேட்டரில் ஒரு வாரம் முன்பாகவே டிக்கெட் முன்பதிவு செய்து சென்றோம். இன்றைய தேதியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய மால் அது.  எவ்வளவு பெருசு என்றால்  கீழே பேஸ் மென்ட் கார்பார்கிங்கில் காரை நிறுத்துமிடத்தை மறந்து போனால் அதை கண்டு பிடிப்பதற்கே ஒரு நாள் வேனுமுங்கோ… அப்போ மால் எவ்வளவு பெருசு என்று கற்பனை செய்து பாருங்கள்.

மேலே மேலே எஸ்கலேட்டரில் போய் கொண்டே இருக்கிறோம். முழுதாக சுத்திப்பார்க்க இது சரியான நாளில்லை. ஏற்கனவே சரியாக தூங்காமல் பயண அலைச்சலால் உடல் சோர்வு. திரைப்படம் தொடங்க நேரம் வேறு சிறிது தான் இருந்தது.  அங்குள்ள கே.ஏப்.சீ யில் சீஸ் பர்கரும், சிக்கனையும் அவசரம் அவசரமாக மென்று முழுங்கி பெப்சி குடித்து தியேட்டருக்குள் நுழைந்தோம்.

அந்த திரையரங்கில் கவுண்டரே கிடையாது. (ரெட்டி இருக்காரானுலாம் கேட்கக்கூடாது!). எல்லாரும் முழுக்க முழுக்க ஆன்லைனில் அவர்களது இணையதளத்தின் மூலமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். வேண்டுமானால் அவர்கள் திரையரங்கில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி தொடு உணர் மிஷினில் தங்களுடய கடன் அட்டையை தேய்த்து டிக்கட் பதிவு செய்துகொள்ளலாம். அவர்களுடைய டார்கெட் முழுவதுமாக மேல்தட்டு மக்களையே குறிவைத்து இருப்பது தெளிவாக தெரிகிறது. அப்போ உள்ளே திரையரங்கம் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். ஸ்டார் ஹோட்டலையே மிஞ்சிவிடும். அமெரிக்கா போன்ற மேல்நாடுகளில் திரையரங்கில் சென்று திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை இங்கயே கிடைக்கச்செய்கிறார்கள் இவர்கள்.

உதரணமாக மெல்லிய ஒளி பரவிய ரெஸ்ட் ரூமில் ஒவ்வொரு யூரினல்சின் மேலேயும் ஒரு சின்ன ஸ்க்ரீன் வைக்கப்பட்டு திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும் படங்களை காண்பித்துக்கொண்டு இருந்தனர். கூழாங்கற்களால் தரை அலங்கரிக்கப்பட்ட அந்த அறையில் கையை அலம்பிவிட்டு இந்த பக்கம் உள்ள ட்ரையரில் நீட்டினால் மென்சூடான காற்று வீசப்பட்டு மூன்று நொடிகளில் கையை உலர்த்தி விடுகிறது. இது எல்லாம் பாமரனுக்கான சாத்தியமேயில்லை என்று தோன்றுவதால் தானோ என்னவோ அவனால் சாத்தியமில்லாத இணையத்திலும், கடன் அட்டையின் மூலம் மட்டுமே டிக்கெட் வழங்குகிறார்கள் என்பது தெளிவாகிறது.

அந்த சிறிய அரங்கில், சிறிய ஸ்க்ரீனில் படம் பார்த்தது வீட்டில் ஒரு ஹோம் தியேட்டர் அமைப்பை ஏற்படுத்தி பார்த்த ஒரு அனுபவம். திரையரங்கில் இருக்கிறோம் என்ற எண்ணமே வரவில்லை. ஆபரேட்டர் ரூமே கிடையாது. டிஜிட்டல் ஆர்.டீ.எக்ஸ் தொழில் நுட்பத்தின் மூலம் அந்த ஆபரேட்டர் ரூம் சிறிய பெட்டியில் அடைபட்டு அரங்கில் வெளியே மாட்டப்பட்டு இருந்தது. ஒரு பெரிய எல்.சீ.டீ ஸ்க்ரீனில் பார்ப்பது போன்ற மிகத்துல்லியமான சினிமா. ஆனால் என்ன செய்வது, ஏற்கனவே சொன்னது போல் மிகவும் பயணக்களைப்பில் நானும் மற்றோரும் நண்பரும் அப்போது அமர்ந்திருந்தோம். அந்த தூக்கக்கலக்கத்தில் கனவில் கூட படம் பார்க்க முடியாத போது இப்படி ஒரு கனவு படத்தை எப்படி பார்ப்பது என்று, படம் ஆரமித்து சில நொடிகளிலேயே சீட்டில் சரிந்து விட்ட என் வலப்பக்க நண்பரை, இடைவேளையின் போது  தட்டி எழுப்பி கிளிக்கிய படமே இது.

அது சரி என்ன திரைப்படம் என்கிறீர்களா?…… ம்ம்ம்ம்….அ….அது..… ஆங்! ரைட்.. “இன்செப்சன்”.

இரண்டாம் நாள் மாலை திருவான்மியூர் கடற்கரையில் மூவரும் உலாவிக்கொண்டு இருக்கையில் ஒரு ஹெலிகாப்டர் பறந்து கடற்கரை ஒரமாக தாழ்வாக வந்தது. சரி ஞாற்றுக்கிழமை கடற்ப்படை ரோந்துக்கு வருவது சகஜமென்று நண்பர் கூறினார். ஆனால் அவர்கள் திருவான்மியூர் கடற்கரையிலிருந்து பெசன்ட் நகர் கடற்கரைவரை தொடர்ந்து வட்டமடித்துக்கொண்டே இருந்ததும் ஏதோ விபரீதம் என்பது போலிருந்தது. அது என்ன என்று கடைசிவரை தெரியவில்லை. இருட்டும் வரை தென் சென்னையில் இருந்து வட சென்னை வரை பையா படத்தில் வருவது போல் பயணித்து களைத்து விட்டு. ஊருக்கு ஒதுக்கு புறம் என்பது போல், சிட்டியை விட்டு சிறிது ஒதுக்குப்புறமான தமிழ்நாடு ஹோட்டலில் தான் இரவு உணவு முடித்தோம். ஏனோ தெரியவில்லை, அந்த இடம் எனக்கும் நண்பருக்கும் மிகவும் பிடித்திருந்தது. சென்னையில் அமைதியான சூழ்நிலையில் இதை விட வேறு ஏதேனும் இடம் உண்டா என்று தெரியவில்லை.

இரவு சரியாக பத்து முப்பது மணிக்கு நண்பர் எக்மோரில் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு  “ஐயம் வேணுகோபால்…. ப்ரம் டைடல் பார்க்…. ஐயம் பினிஸ்ட்…” என்று நகைச்சுவையாக கூறி அனைவரும் விடை பெற்ற தருணம் வரை அனைத்தும் நினைவில் நிற்கக்கூடிய தருனங்களே.  ரயில் சென்னை விட்டு விலகிச்சென்று கொண்டிருக்கையில் யோசித்துப்பார்கிறேன். ஏனோ தெரியவில்லை, நான் முதன்முறை சென்னை சென்ற போதிலிருந்து ஒவ்வொரு முறையும் சென்று வந்தபோதும் பல நினைவுகளை சுமந்து கொண்டே திரும்பியிருக்கிறேன். இம்முறையும் தான்… ஆனால் இது மிகவும் இனியமையான பயணமாக  அமைந்தது இருந்தது.

ஆனால் ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாக சொல்ல முடியும்…. “விருந்தினராக செல்லும் வரையில் தான் சென்னை சொர்க்க பூமி”. விடிந்த பிறகு சேலத்திற்கு ரயிலில் வந்து இருங்கிய மறுகனமே நான் ட்வீட்டியது இதுதான் “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா”.

முந்தைய பாகங்கள்:
ரயில் பயணங்களில் – சென்னை பயணம் பாகம் ஒன்று (கிளிக்க)
ஐயம் வேணுகோபால் ப்ரம் டைடல் பார்க். சென்னை பயணம் பாகம் இரண்டு (கீழே)
Share

நடிகர் முரளியின் இதயம் இன்னும் சிறிது காலம் கழித்து நின்றிருக்கலாம்

actor murali இதயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்த நடிகர் முரளியின் இதயம் இன்று துடிப்பதை நிறுத்திக்கொண்டது. இந்த செய்தியை இன்று கேள்விப்பட்ட உடனேயே சில நிமிடங்கள் உறைந்து போனேன். அது என்னை துயரத்தில் ஆழ்த்தியது.  ஏனென்று யோசித்து பார்க்கிறேன்.  முரளியை தீவிர ரசிகனாக இதுவரை நான் இருந்திருக்கவில்லை. அவரது காலங்களின் நான் சினிமாக்களை பார்த்து வளர்ந்திருக்கவில்லை.  ஆனாலும் அவரை நான் ரசித்திருக்கிறேன்.

புது வசந்தம், இதயம் போன்ற படங்களின் பாடல்கள் மூலமே அவரை சிறு வயதில் எனக்கு பரிட்சயம் ஆனதாக ஒரு ஞாபகம். சினிமா, டிவி என்பதை அறிந்துக்கொண்டு இருந்த மிகச்சிறிய வயதாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். சரியாக நியாபகம் இல்லை. ஆனால் படங்களை பார்க்க ஆரம்பம் செய்த என்னுடைய பள்ளி பருவத்திலே “காலமெல்லாம் காதல் வாழ்க” என்ற திரைப்படத்தை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். அதுவே எனக்கு தெரிந்து நான் விரும்பிப்பார்த்த முரளியின் முதல் திரைப்படம். அத்திரைப்படத்தின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. ஆறாம் வகுப்பு நான் பயின்று கொண்டிருந்திருக்கலாம். அப்போதே அதை மனப்பாடமாக பாடிக்கொண்டு இருந்திருக்கிறேன். இப்போது கூட அந்த பாடல்களை கேட்க்கும்போது அந்த காலகட்டங்கள் ஞாபகத்திற்கு வந்து செல்கின்றன.

அதே நேரத்தில் அவர் சூர்யாவிடம் சேர்ந்து ஒரு படம் நடித்தார். சில வருடங்களில் வெற்றிக்கொடி கட்டு போன்ற வெற்றி படங்களின் படங்களில் நடித்தார். கடல் பூக்கள் படத்திற்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதும் வாங்கினார். பிறகு நான் தீவிரமாக சினிமா பார்க்க ஆரம்பம் செய்த வயதில் அவரது படங்கள் காணமல் போயின. வெளிவந்த சில படங்களும் சரியாக போகவில்லை. சுந்தரா ட்ராவல்ஸ் படம் வந்த போது அந்த படத்தில் நடித்த பஸ்ஸையும், எலியையும் அருகில் இருந்த தியேட்டருக்கு கொண்டு வந்திருந்தார்கள். அதுவே நான் முரளி நடித்து பார்த்த கடைசி படம்.  முரளி அமைதியான, சாந்தமான, இளமையான தோற்றமுடையவர் என்பதால் கண்டிப்பாக யாருக்கும் அவரை பிடிக்காமல் இருக்காது. நன்றாக கவனித்து பாருங்கள் அவரது குரல் கூட மிகவும் மென்மையானது. அது மட்டும் இல்லாமல் மற்ற நடிகர்களை போலில்லாமல் எந்த ஒரு கிசி கிசுவிலும் வராத நடிகராகவே கடைசி வரை இருந்தார்.

இக்கால சினிமா ரசிகர்கள் அவரை ரசித்திருக்க வாய்ப்பு குறைவு தான். ஏன் என் வயதையொத்தவர்கள் கூட சேர்த்துதான். அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் வரிசையில் வர நேரம் சரியாக அமையா விடிலும் எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் இருந்த கல்லூரி மாணவர்கள் அவரை மறந்திருக்க வாய்ப்பு இல்லை. நடிகர் மோகன் எப்படி எல்லா திரைப்படங்களிலும் மைக்கோடு வந்து மைக் மோகன் ஆனாரோ. அது போல் எல்லா திரைப்படங்களிலும்  புத்தகத்தை எடுத்துக்கொண்டு கல்லூரி மாணவனாக வருவார் முரளி. மோகன் மைக் எடுத்து மேடை ஏறினால் படம் ஹிட் என்ற செண்டிமென்ட் அப்போது இருந்தது. அது போல் முரளி புத்தகம் எடுத்துக்கொண்டு கல்லூரி சென்றால் படம் கண்டிப்பாக ஹிட்.

நான் இப்போதும் உறுதியாக கூறுவேன், முரளி காலத்து நடிகர்கள் யாரேனும் இப்போது கல்லூரி மாணவனாக நடிக்க முடியுமா? கற்பனை செய்து பாருங்கள். பார்த்திபன்? பிரபு? பாண்டியராஜன்? சுரேஷ்?. ஏன் அதற்கடுத்த கட்ட நடிகர்களான விஜய், அஜித், விக்ரம் கூட  மீண்டும் கல்லூரி மாணவர்களாக நடித்தால் நம்மில் பலர் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இன்றும் முரளியின் தோற்றமும் குரலும்அதற்கு பொருந்துவதாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கும்.

நான் இப்போது கூறப்போவது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. காதல் கொண்டேன் திரைப்படம் வந்த தருணத்தில் டைரக்டர் செல்வராகவனின் பேட்டி ஒன்றை படித்தேன். அந்த திரைப்படத்தில் தனுஷிற்கு பதிலாக ஏற்கனவே இரண்டு நடிகர்கள் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்டது என்று கூறி இருந்தார். மாஸ்டர் டிகிரி படிக்க அதன் நாயகன் சென்னை வருவதாக அமைத்து இருந்த அந்த கதை பிறகு தனுஷிற்காக சிறிது கதை மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த இரண்டு நடிகர்களில் செல்வராகவன் தேர்வு செய்து இருந்த ஒரு நடிகர் தான் முரளி. அது மட்டும் உண்மையாக இருந்து படம் வெளிவந்து இருந்திருந்தால்? முரளி கண்டிப்பாக தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டு இருப்பார்.

முரளியின் இழப்பு கண்டிப்பாக சோகத்தின் உச்சம் தான். எங்கள் குடும்பத்தாருக்கும் தான் அதன் பாதிப்பு இருக்கிறது..  முரளியை நாங்கள் நேரில் கண்டிராவிட்டாலும், பழக வாய்ப்பு இல்லாவிட்டாலும் அவருடையமறைவு எங்களை உறையவைத்ததற்க்கு காரணம் இருக்கிறது. சுமார் தொன்னூறுகளில் இருந்த அவருடைய தோற்றம் அப்படியே அச்சு அசலாக என்னுடைய தாய் மாமாவை போலிருந்தது. முளியின் முகம் எனக்கு அப்போதுதான் பரிட்சயமான சமயம் என்பதால் முரளியை பார்த்தால் என்னுடைய மாமாவை பார்ப்பது போலவே இருக்கும். எதிர்பாராவிதாமாக அவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் புற்று நோயால் அவதிப்பட்டு இறந்து போனார். இருவருக்கும் தோற்றத்தை தவிர மேலும் சிறு ஒற்றுமைகள் இருப்பதை இப்போது உணர்கிறேன்.

இருவரும் இளம் வயதிலேயே இறந்தனர். என் மாமா இறக்கும் போது அவருடைய வயது முப்பத்தி ஆறு, முரளிக்கோ நாற்பத்தி ஆறு. இருவருக்கும் மகனும் மகளும் உள்ளனர். தன்னுடைய மகனின் வளர்ச்சியையும், பெண்ணின் திருமணத்தை காணக்கிடைக்காமலும் மரணம் எய்திவிட்டார்கள் இருவரும். அவர்களுடைய இறப்புசெய்தியை அறிவித்தது சென்னையில் ஒரு மருத்துவமனையில் தான். முரளிக்கு திரையுலகமே திரண்டு வந்து இருந்தது, இவருக்கோ ஒட்டு மொத்த நெய்வேலி லிக்னயிட் கார்பரேசன் ஊழியர்களும், முக்கிய அதிகாரிகளும், தொழிற்சங்க பிரதிநிதிகளும் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

என் மாமா இறந்த இந்த இடைப்பட்ட இரண்டு வருடத்தில் முரளியை காணும் போது எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் மாமாவை நேரில் காண்பது போன்ற உணர்வு. அவர் இறந்த பிறகும் உயிருடன் இருப்பதை போன்ற ஒரு தற்காலிக தோற்றத்தை அது உருவாக்கியது. தான் மிகவும் நேசித்தவரும், ரத்த சம்பந்தமானவரும் இறந்து பிறகு அவர் உருவத்தை உடையவர்களை நேரில் பார்க்க வாய்ப்புக்கிட்டியவர்களை கேட்டுப்பாருங்கள் அது எவ்வளவு பெரிய விஷயமென்று.

ஓரிரு வாரங்களுக்கு முன்னர் கூட விஜய் டீவியில் வரும் காபி வித் அனு நிகழ்ச்சியில் தன் மகன் ஆதர்வாவுடன் வந்திருந்தார் முரளி. எங்கள் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் தொலைப்பேசியின் மூலம் தகவல் பரிமாறப்பட்டு அனைவரின் இல்லத்தின் வரவேற்பறையிலும் அந்த நிகழ்ச்சியே ஓடியது. அனைவருக்கும் எங்கள் மாமாவை நீண்ட நாட்கள் கழித்து நேரில் கண்டதாக ஒரு உணர்வு அப்போது.  இனிமேல் இவர்களுக்கு அதுவும் கிடைக்க வாய்ப்பில்லை. முரளியின் இதயம் இன்னும் சிறிது காலம் கழித்து நின்றிருக்கலாம்.

Share

ரயில் பயணங்களில் – சென்னை பயணம் பாகம் ஒன்று

சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிங்கார சென்னைக்கு செல்ல நேரிட்டது. ஆனால் இம்முறை அது பணி நிமித்தமான பயணம். இரவு எட்டு முப்பது மணிக்கு சேலம் ஜங்சனை நோக்கி என் வாகனம் சீறிக்கொண்டு செல்லும்போது திடீரென என் மொபைல் அலறியது.. ட்ரிங்.. ட்ரிங்.. இல்லை இல்லை.. (அது பழைய டெலிபோன் அழைப்பை குறிக்க பயன்படுத்தும் வார்த்தை.) இப்போது “கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும் வேறொன்றும் தேவை இல்லை நீ மட்டும் போதும் போதும்” என்ற ரிங் டோனுடன்.

இன்னும் அரைமணி நேரம் தான் ரயில் புறப்பட நேரம் இருக்கிறது. அவசரம்…  அதனால் அழைப்பை எடுக்க வில்லை.. ஓரிரு நிமிடங்களில் மீண்டும் ரிங் டோன் ஒலித்தது.  அட யாராக இருப்பார்கள். தொடர்ந்து அழைத்துக்கொண்டு இருக்கிறார்களே. ஏதேனும் மறந்து விட்டோமென்று வீட்டிலிருந்து அழைக்கிறார்களோ? ரயில் டிக்கெட்டை வைத்து விட்டு வந்து விட்டோமோ? இப்படி பல கேள்விகள் எழுந்ததால் பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்து பார்த்தேன். ஒரு புதிய நம்பரிலிருந்து வந்து கொண்டிருந்தது அந்த அழைப்பு. யாராக இருந்தாலும் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று நான் அந்த அழைப்பை ஏற்கவில்லை. மொபைல் மீண்டும் பாக்கட்டிற்கு சென்றது. வாகனம் சேலம் ஜங்சனை நோக்கி மீண்டும் சீறிப்பறந்தது.

இப்போது நேரம் சரியாக ஒன்பது மணி. இடம் சேலம் ஜங்சன் – சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு கம்பார்ட்மெண்டில் நான் அமர்ந்திருக்கிறேன். பிளாட்பார கடைகள் மெல்ல மெல்ல ஜன்னலோரத்தில் பின்னோக்கி நகர்கிறது. ரயில் பெட்டியின் வாயிலின் அருகிலேயே என்னுடைய பர்த் இருந்ததால் ஒருவர் என்னுடைய கம்பார்ட்மெண்டை நோக்கி ஓடி வருவது தெரிந்தது.  ஆனால் ரயில் இப்போது இன்னும்சிறிது வேகமெடுத்துக்கொண்டு இருந்தது. அவர் கையில் ஒரு பெரிய லக்கேஜ் வைத்துக்கொண்டு ரயில் போகும் திசையிலிருந்து அவர் எதிர் திசையில் இருந்து வந்துகொண்டிருப்பதை பார்த்ததும் என் உள்ளுணர்வு ஆலாரம் அடித்து.

அவர் அந்த லக்கேஜை தன் இரு கைகளால் தன் நெஞ்சிற்கு நேரே தூக்கியவாறு உள்ளே தாவமுயல்கையில் அவர் கணிப்பு தவறுகிறது. டாமார் என்ற சப்தம். நிலை தடுமாறி கீழே விழுகிறார். இத்தனையும் என் கண் முன்னே நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. நான் அவருக்கு உதவ என் இருப்பிடம் இருந்து கதவை நோக்கி உடனே நகர்கிறேன். அவர் உடல் முன்பகுதி அந்த நுழைவாயிலின் தரையில் சரிந்து விழுந்த போதும் அவர் கைகள் அவர் கொண்டு வந்திருந்த அந்த லக்கஜையே இறுக்கமாக பற்றி இருந்தது. அவரின் கால்கள் வெளியே தொங்கியவாறு பிளாட்பாரத்தில் உரசிக்கொண்டு இருந்தது. என்னை நோக்கிய அவர் கண்கள் என்னை உதவிக்கு அழைப்பது போலிருந்தது.

நான் அவர் அருகே செல்லும் அந்த சில வினாடிக்குள்ளே பிளாட்பாரத்தில் சென்று கொண்டிருந்தவர்கள்  அவரை வெளியே இழுத்துப்போட்டு விட்டனர். நான் இப்போது நுழைவாயிலின் கைப்பிடியை பிடித்துக்கொண்டு வெளியே தலையை நீட்டி அவரைப்பார்க்கிறேன்.  என்ன நினைத்தாரோ தெரியவில்லை என் பார்வையில் இருந்து அவர் முழுதாக மறையும் வரை இன்னும் என்னை நோக்கியே பார்த்துக்கொண்டு இருந்தார்.  அவர் உடலில் நடுக்கமும் , முகத்தில் இயலாமையும், கண்களிலே பயமும் தெரிந்தது. இத்தனையும் சில நொடிப்போழுதுகளில் நடந்து முடிந்துவிட்டது.

உள்ளே திரும்பி பார்த்தால் அனைவரின் கவனமும் என் மீதே இருந்தது. நான் ஒருவரை வெளியே தள்ளி விட்டது போல் இருந்தது இவர்களின் பார்வை. அடுத்து பத்து பதினைந்து நிமிடத்திற்கு அந்த ரயிலை தவறவிட்டவரை விமர்சனம் செய்தே சோர்ந்து போனது அக்கூட்டம். பாவம் மனிதர். அவர் சென்னை செல்ல விழைந்த நோக்கம் எதுவாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். அடுத்த நாள் அவருக்கு ஒரு பெரிய கம்பனியில்(கெக்ரான் மெக்ரான் கம்பெனியாக கூட இருக்கலாம்) இன்டர்வியூவாக இருக்க கூடும். அல்லது சென்னையில் ஆஸ்பிட்டலில் சேர்க்கப்பட்ட அவருடைய உறவினரை காண அவசரமாக செல்ல வேண்டியிருக்கலாம்.

இப்படி ஏதேனும் ஒரு அவசர பயணமாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி இருக்கையில் அவருடைய சிறு தவறு, இந்த பயணத்தை முழுதாக ரத்து செய்ய நேரிட்டிருக்கலாம், ஏன்  அவருடைய வாழ்கையையே இது புரட்டிப்போட்டு இருக்கக்கூடும். சரி அவர் செய்த தவறு தான் என்ன?

1, சரியான நேரத்தில் அவர் போர்டிங் செய்து இருக்க வேண்டும். கடைசி நிமிட செயல்கள் எல்லோருக்கும் ஒரு வித படபடப்பையே  ஏற்படுத்தும். அதுவே அவர் கணிப்பை பொய்கச்செய்ததில் சிறு பங்கு இருந்திருக்கும்

2, இரண்டாவது….. அவர் ரயில் சென்ற திசையின் எதிர் திசையில் இருந்து ஓடி வந்து ஏற முயற்சித்தார். அவர் செய்த பெரும் தவறு இதுவே. அவர் கணிப்பின் படி நுழைவாயில் அவர் நுழைவதற்குள்ளாகவே அது முன்னே நகர்ந்து இவர் ரயில் பெட்டியில் மோதுவதற்கே வாய்ப்பு அதிகம்.  ரயில் பயணித்த திசையில் அவரும் சிறிது தூரம் ஓடிவந்து தாவி இருந்தால் அவருக்கு இந்த பிரச்சனை நேர்ந்து இருக்காமல் இருந்திருக்கலாம்.

3, அவருடைய லக்கேஜை முதலில் உள்ளே போட்டுவிட்டு பிறகு அவர் ஏற முயற்சித்து இருந்தால் இன்னும் அவருக்கு சுலபமாக இருந்து இருக்கும். கடைசி வரை அதை பற்றிக்கொண்டே தன் பயணவாய்ப்பை இழந்து விட்டார்.

4, இத்தனைக்கும் மேலாக அவர் செய்த முக்கிய தவறு. அவர் இதுநாள் வரை தமிழ் சினிமாக்களை சரிவர பார்க்காமல் இருந்திருக்கிறார். ஒவ்வொரு தமிழ் சினிமாக்களிலும் ஓடும் பஸ்சில் ஏறுவதும், ஓடும் ரயிலில் ஏறுவதும் எப்படி என்ற காட்சி கண்டிப்பாக இருக்கும். அவர் சமிபத்தில் வந்த “கண்டேன் காதலை” திரைப்படத்தின் டிரைலரை பார்த்து இருந்திருந்தால் கூட அதில் ஓடும் ரயிலில் தமன்னா எப்படி ஏறுகிறார் என கண்டு தப்பித்து இருக்கலாம்.

ஆனால் ஒன்று. இச்சம்பவம் அவருக்கு ஒரு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்து இருக்கும். அதெல்லாம் சரி, நான் வரும் போது யாரோ எனக்கு தொடர்ந்து மொபைலில் அழைத்துக்கொண்டு இருந்தார்களே யார் அவர்? ஏதேனும் முக்கியமான விசயத்திற்கு அவர் மீண்டும் மீண்டும் அழைத்திருந்தால்!!! நான் அவரை திரும்ப அழைக்கவில்லையே என்ற ஞாபகம் வந்தது.  அவசரமாக நான் என் மொபைலை எடுத்து பார்க்கிறேன். அதே நம்பரில் இருந்து எனக்கு ஒரு குறுந்தகவல் வந்து இருக்கிறது.

பிரித்து பார்த்தால் “ஹாய் பிரவீன். இது என்னுடைய மாற்று மொபைல் நம்பர். ஏதேனும் பேசவேண்டுமென்றால் இதற்கு கூப்பிடவும்” என்று மட்டும் மொட்டையாக முடிந்திருந்தது. மேலும் கீழே மேலே அந்த குறுஞ்செய்தியை நகர்திப்பார்கிறேன் அனுப்பியவர் பெயரே இல்லை. குழப்பம்…. நூற்றுக்கணக்கான காண்டக்ட்ஸ் என் மொபைலில் இருப்பதால் அதில் யாரென நான் இவரை நினைப்பது. என் மொபைலில் இருந்து அந்த நம்பருக்கு இப்போது நான் அழைக்கிறேன்.

எதிர் முனையில் அவர்: “ஹலோ பிரவீன், நான் உங்களுக்கு இரண்டு முறை கூப்பிட்டேன் நீங்கள் போனையே எடுக்கவில்லை”.

நான்: “ஆம், நான் அப்போது அவசரமாக வாகனத்தில் வந்து கொண்டு இருந்தேன்…. சரி நீங்கள்..”

எதிர்முனையில்: “நான் உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தேனே. பார்க்கவில்லையா? என்னோட மொபைல் பாட்டரி இல்லாமல் ஸ்விட்ச் ஆப் ஆகி விட்டது. இது தான் என்னுடைய   மற்றொரு நம்பர். நீங்கள் இதை பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள்.  இப்போது நீங்கள்  எங்கு இருக்கிறீர்கள்?”

நான்: “இப்போது ரயிலில் பயணம் செய்துகொண்டு இருக்கிறேன்.”

எதிர் முனையில்: “சரி. நான் இன்னும் சிறிது நிமிடத்தில் பஸ் ஏற போகிறேன். ஏறிய பிறகு மீண்டும் கூப்பிடுகிறேன்.” என்று அழைப்பை துண்டித்தார்.

எல்லாவற்றையும் சரியாக சொல்லிவிட்டு கடைசி வரை பேரை சொல்லாமல் அவர் வைத்துவிட்டார். அந்த சிறு உரையாடலிலேயே அவரை நான் கண்டுவிட்டதால்  போனை பாக்கெட்டில் வைத்து என்னுடைய மிடில் பர்த்தில் படுக்க ஆயத்தமானேன். பயணம் தொடரும்…

Share