சகோதர சேலம் நகரங்களை இணைப்போம் வாரீர்!

சேலம்  டூ சேலம்: உலகில் உள்ள அனைத்து சேலம் நகரத்தையும் இணைக்க நட்பு பாலம் அமைப்போம் வாரீர்.

நம் நகரம் போலவே, சேலம், அமெரிக்காவில் 24 பிற மாகாணங்களிலும் உள்ளது. அது மட்டுமில்லாமல், சேலம் என்று பெயரிடப்பட்ட நகரங்கள்  ஸ்வீடன், ஜெர்மனி, மற்றும் தென் ஆப்பிரிக்காவிலும் கூட உள்ளது. மற்றுமொரு சுவாரசியமான  தகவல் என்னவென்றால், அமெரிக்காவில் ஒரிஜான் மாகாணத்தில், நம் தமிழகத்தின் மதராஸ்( தற்போது சென்னை) போலே மற்றொரு நகரும் பெயர் கொண்டுள்ளது.

1960இல் அமெரிக்காவின் ஒரிஜான் மாகாணத்தின் நூலகரும், ரோட்டரி சங்க உறுப்பினருமான திரு ஹக் மாரோ, மற்றும் தமிழக சேலத்தில் நன்கு அறியப்பட்ட நூலகரான டாக்டர் புஸ்நாகி ராஜண்ணன் இருவரும் சேர்ந்து இரு நகரங்களை இணைக்க “சகோதர நகரம்” திட்டத்தை நடைமுறை படுத்த முற்பட்டனர்.

1962இல் டாக்டர் ராஜண்ணன்  அமெரிக்காவின் ஒரேஜான் மாகாணத்தில் உள்ள சேலத்திற்கு சென்ற போது அங்குள்ள ரோட்டரி உறுப்பினர்களும், நகர முக்கியஸ்தர்களும், செனட்டர்கள், மற்றும் ஓரிகான் மாநில கவர்னரரும்அவரை வரவேற்று உபசரித்தனர். தனது விஜயத்தின் போது, டாக்டர் ராஜண்ணன் அமெரிக்க சேலத்தில் ஆற்றிய தனது உரையில் இரு நகரங்களையும் இணைக்கும் முக்கியத்துவத்தை தெரிவித்தார்.

salem sister cities
இந்த கூட்டத்தில் இரண்டு நகரங்களும்  சகோதர நகரங்கள் என முறையாக அறிவிக்கப்பட்டது. 1964இல் அமெரிக்காவின் ஒரிஜான் மாகணத்தின் சேலம் மேயாரான திரு வில்லராட் சி மார்ஷல் தனது குடும்பத்துடன் தமிழ்நாட்டில் உள்ள சேலத்திற்கு வருகை புரிந்தார். அப்போது இங்குள்ள ரோட்டரி சங்க உறுப்பினர்கள், பொது மக்கள், கலெக்டர், நகராட்சி தலைவர் மற்றும் நகர கவுன்சிலர்களின் உட்பட முக்கிய அதிகாரிகள் அனைவரும் அவரை வரவேற்றனர்.

அவர் அமெரிக்க திரும்பிய பிறகு “சகோதர நகரங்கள் ஒருங்கிணைப்பு குழு” ஒன்றை அங்கு தொடங்கிவைத்தார். அதன் பிறகு, நம்முடைய சேலத்தின் தொழிலதிபரும், ரோட்டரி சங்க உறுப்பினருமான ஜே.ஆர்.மெஹதா நம் சகோதர நகரமான ஒரிஜான் மாகணத்தின் சேலத்திற்கு சென்று அவர்களின் விருந்தோம்பலை ஏற்று அவர்களிடம் நம் நல்லெண்ணங்களை தெரிவித்துவிட்டு வந்தார்.

எதிர்பாராவிதமாக இந்த பயணங்களுக்கு பிறகு சகோதர நகர திட்டத்தை  தொடர முடியாமல் போயிற்று. ஆதலால் டாக்டர் பி.ராஜண்ணன் அவர்கள் தமிழக சேலத்தையும் மற்ற சேலத்தையும் இணைக்க ஏற்படுத்தப்பட்ட முயற்சி ஒரு முன்னோடியாக இருக்கிறது.

இப்போது, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக, முன்னால் சேலம்வாசி, தர்மபுரி திரு கே.பால சுந்தரம் அவர்கள், உலகில் உள்ள அனைத்து சேலம் நகரங்களை இணைப்பதை தனது வாழ்நாள் நோக்கமாக கொண்டு அதற்காக முழு ஈடுபாட்டோடு முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார்.  1963 முதல், அவர் சர்வதேச-சகோதர-நகர அமைப்பு (www.sister-cities.org) மற்றும் மக்களுடன்-மக்கள் தொடர்பு (www.ptpi.org) அமைப்புடன் இணைந்து இந்தியா மற்றும் அமெரிக்கா சேலத்தின் உள்ளூர் பத்திரிகைகளில் அவரது எழுத்துக்களின் மூலம் இந்த பணியை செய்து கொண்டு இருக்கிறார்.

tim king

அவரது இந்த முயற்சியின் பலனாக, அமெரிக்காவின் ஒரிஜான் மாகணத்தில் உள்ள சேலத்தின் பிரபல தொலைக்காட்சி நிருபரும், பத்திரிக்கையாளருமான திரு. டிம் கிங் அவர்களின் தொடர்பு கிடைத்தது. அவர் www.Salem-News.com  எனும் பிரபல இணையதளத்தின் நிறுவனரும் ஆவார்.

அனைத்து சேலம் நகரங்கள் இணைக்க ஒருவருக்கொருவர் இடையிலான பரஸ்பர ஆர்வம் காரணமாக, திரு. டிம் கிங் அவர்களை தமிழக சேலத்திற்கு மரியாதை நிமித்தமாக விஜயம் செய்யவும், நம் நகரத்தை பற்றிய ஆவண படமொன்றை எடுக்கவும் அழைப்பு விடுத்து இருந்தார். இந்த ஆவணப்படம் ஒரிஜான் மாகணத்தின் சேலம் நகரம் உட்பட பிற மாநிலங்களான அலபாமா, ஆர்கன்சாஸ், கனெக்டிகட், இல்லினாய்ஸ், இண்டியானா, அயோவா, கென்டக்கி, மாஸ், மிசவுரி, நியூ ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி, நியூயார்க், ஓகியோ, தென் கரோலினா, உட்டா, விர்ஜினியா, மேற்கு வர்ஜீனியா, விஸ்கான்சின், மிச்சிகன், மினசோட்டா, பென்சில்வேனியா, வட கரோலினா, ஒன்டாரியோவில் உள்ள அனைத்து சேலம் நகரங்களிலும் திரையிட திட்டமிடபட்டுள்ளது.

praveen bala arasu

இந்த முயற்சியை ஆதரித்து, அவருக்கு உறுதுணையாக www.Salemjilla.com இணையதள நிறுவனரும், இணைய தொழில்முனைவருமான திரு.பிரவீன் குமார் அவர்களும் மற்றும் சேலம் லீ பஜாரில், விதை ஏற்றுமதி இருக்குமதி செய்துவரும் ஆறுமுக பண்டாரம் நிறுவனத்தின் தொழிலதிபருமான திரு. திருநாவுக்கரசு அவர்களும் திரு.கே.பால சுந்தரம் அவர்களோடு இணைத்து உள்ளனர். இதில் முதல் கட்டமாக அமெரிக்க ஒரிஜான் மாகணத்தின் பிரதிநிதியாக திரு.டிம் கிங் அவர்களை அழைக்க ஒரு குழுவை அமைக்கும் வேலை தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த முயற்சி மூலம் அமெரிக்க மற்றும் இந்திய சேலம் மக்களின் நட்புறவும், ஒத்துழைப்பு ஊக்கபடுவது மட்டுமல்லாது அனைவருக்கும் இடையே தொழில் முறை தொடர்பு கொள்ளவும், திறமையை உருவாக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதன் நோக்கமே சேலம் நகரம் உள்ள அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளில் உள்ள இதே எண்ணங்கள் உடைய மக்களையும், நிறுவனங்களையும் தொடர்பு ஏற்படுத்தி இணைப்பதேயாகும்.

இந்த நோக்கம் நிறைவேற உருவாக்கப்படும் குழுவில் இதில் ஈடுபாடு இருக்கும் தனி நபர்களும், தொழிலதிபர்களும், நிறுவனங்களும் யார் வேண்டுமாலும் இணையலாம். இந்த குழுவின் மூலம் திரு டிம் கிங் அவர்கள் வந்து செல்வதற்கான நிதியை திரட்டவும், அவருடைய சேவையை முடிந்தவரையில் பயன் படுத்தி நம்முடைய சேலத்தை பற்றிய ஆவணப்படங்களை மற்ற சேலத்தில் திரையிடப்படவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

இந்த ஆவணப்படத்தில் நம் சேலத்தின் வரலாற்றையும், கலாச்சாரத்தையும், பலதரப்பட்ட தொழில் சமூகங்களும், பல்வேறு தொழில் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும், சுற்றுலா தளங்களும், அருங்காட்சியகம், கலை மற்றும் விளையாட்டுகளும் பதிவு செய்யப்படும். இந்த திட்டத்திற்கான முயற்சி லாப நோக்கமற்று, வியாபார நோக்கமற்று முற்றிலும் நம்முடைய சேலத்தை சர்வதேச அளவில் எடுத்துச்சென்று உலக மக்களிடைய நட்புக்கொள்ளச்செய்வதே ஆகும். இது நிச்சயம் வணிக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் வெளி உலகில் இருந்து ஒத்துழைப்பு பெற்று பயன்பெற உதவும்.

sister cities international

இதில் இணைத்து பணியாற்ற நம்முடைய சேலத்தில் ஆர்வம் உள்ள மக்கள், நிறுவனங்களை வரவேற்கிறோம். தொடர்பு கொள்ள திரு.அரசு மொபைல்: 9443247822 மின்னஞ்சல்: vaparasu@gmail.com, திரு பிரவீண்: 9894834151 மின்னஞ்சல்: praveen @ salemjilla.com
திரு.பால சுந்தரம். மொபைல்: 95 246 59 164 மின்னஞ்சல்: kbsundram@yahoo.co.in இதற்கு கிடைக்கப்பெறும் ஆதரவு மற்றும் பதிலை பொறுத்து, குழு அமைத்து இந்த திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கூட்டம் ஏற்பாடு செய்யப்படும்.

Share

மடிகணினி வாங்கும் முன்னர் முக்கியமாய் யோசிக்க வேண்டியது

things before buying laptop

“லாப்டாப் வாங்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் ஆனா எந்த கம்பனி லாப்டாப் வாங்கறதுன்னு தெரியல”. “வாங்கும்போது நிறைய இலவசம் கொடுத்தானுங்கப்பா பின்னால பிரச்சனைன்னு போனா கண்டுக்கவே மாட்டேங்கறாங்க”. இது எப்போதும் லாப்டாப் எனும் மடிகணினி வாங்குபவர்களும், வாங்கியவர்களும் அடிக்கடி புலம்பும் வார்த்தைதான்.  அவர்களுக்கு உதவும் வண்ணம் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவே இந்த இடுக்கை.

எல்லா கம்பனியிலும் நாம் தேவைப்படும் கான்பிகுரேசனில் மடிகணினி வாங்கிவிடலாம் தானே. காசு இருந்தால் சந்தைக்கு வந்தவுடனே அந்த மாடலை வீட்டிற்கு வரவைத்து விடலாம் தானே என நாம் எண்ணலாம்.. அது சரி. ஆனால் மடிகணினி வாங்குவதில் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதி ஒன்று இருக்கிறது. அது தான் “ஆப்டர் சேல்ஸ் சர்விஸ்” – After Sales Service.

எவ்வளவு விலைகொடுத்து மடிகணினி வாங்குகிறோம் என்பது முக்கியமல்ல யாரிடம் வாங்குகிறோம் என்பது தான் முக்கியம். இல்லையேல் பின்னால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாம் கொடுக்கும் விலை கொஞ்சம் கொஞ்சமாக அந்த மடிக்கணினியின் உண்மையான விலையை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். தெரியாமல் மாட்டிக்கொண்டால், தேவையற்ற பண விரயமும், நேர விரயமும், மன உளைச்சலும் தான் மிஞ்சும்.

சாதாரண கணிப்பொறி என்றவுடன் நாம் கண்களை மூடிக்கொண்டு அசம்பெல் பண்ணி வாங்கி விடுகிறோம். குறைந்த பட்ஜெட் வைத்திருப்போருக்கு அதுவே சாலச் சிறந்த வழி. ஏதேனும் பாகம் பழுதடைந்தால் கூட விற்பன்னரே கியாரன்டியில் அந்த பாகத்தை மட்டும் மாற்றி வாங்கி தருவார். இல்லையேல் குறைந்த விலைக்கு அதனை தனியே வாங்கி, அதுவும் உடனே வாங்கி பொருத்திவிடலாம்.

ஆனால் மடிகனினியில் இந்த எளிமை இல்லை. பிராண்டட் மடிகனினி தான் வாங்க முடியும். சாதாரண கணிப்பொறி போலில்லாமல் இது பழுதடைவதற்கான சாத்திய கூறுகள் மிக  அதிகமாக  இருக்கிறது. வெப்பம், தூசி, கீழே விழுதல்  இதுவே மூல காரணம். அப்படி ஏதேனும் பழுது ஏற்படின் அந்த பாகத்தை மட்டும் தனியே வெளியே வாங்கி நாம் மாற்ற முடியாது. ஒரிஜினல் பாகம் தேவை. இதற்கு அந்த கம்பனியின் உதவி வேண்டும். இங்கே தான் நாம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

சேலத்தின் என் நண்பர் ஒருவர். இவர் ஆப்பில் பிரியர் (இது திங்கற ஆப்பிள் இல்லைங்னா). இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆப்பில் மாக் மடி கணினிதான் வேண்டுமென ஒற்றை காலில் நின்று பெங்களூர் சென்று வாங்கி வந்தார். ஆப்பில்’னு பேரு வச்சா ஒரு நாள் அழுகி தானே தீர வேண்டும். அந்த ஒரு நாள் வந்தது. முக்கியமாக ஒரு வேலைக்காக அதை ஆன் செய்தார். ஆன் ஆக வில்லை. பல முறை முயற்சித்தும் பலனில்லை. என்ன செய்ய?

தான் வாங்கிய அந்த ஆப்பிள் ஸ்டோருக்கு அலைபேசியில் அழைத்தார். அவர்கள் போனில் சொன்ன சில முறைகளை கையாண்டு பார்த்தார். பலனில்லை. சேலத்திலும் ஆப்பிள் சர்விஸ் சென்டர் இல்லை. உடனே எடுத்துக்கொண்டு ஓடினார் பெங்களூருக்கு.. ஒரு சின்ன பழுதிற்கு. இன்னொரு நண்பர் ஒருவருக்கு தன்னுடைய காம்பாக் லாப்டாப் பழுதடைந்து இருந்தது. அதை சரி செய்வதற்கு அலையோ அலை என்று பல நாட்கள் அலையவைத்ததை நான் பார்த்து இருக்கிறேன்.

இப்படி நிலைமை இருக்கும் இருக்கும் பட்சத்தில், மடிகணினியையே தினமும் சார்ந்து தொழில்/வேலை  என்னை போன்றோர்களுக்கு அது பெரிய பிரச்னையாகவே இருந்தது. ஏதேனும் பழுது ஏற்படின் எங்கேனும் எடுத்துக்கொண்டு ஒடுவதில் எனக்கு இஷ்டமில்லை. அதே சமயம் பழுதடைந்த பாகத்தை மாற்ற ஓரிரு நாளுக்கு மேல் ஆகக்கூடாது.  இரு வருடங்களுக்கு முன்னர் நான் என் முதல் மடிக்கணினியை வாங்கும்போது எனக்குள் உள்ளுக்குளே ஓடிக்கொண்டு இருந்த கேள்வி அது தான். ஆப்பில் மாக் புக், ஹெச்.பீ, டெல், விப்ரோ, சோனி, லெனோவா, காம்பாக், ஆசுஸ் போன்ற கம்பனிகளில் யார் சிறந்த சேவை வழங்குபவர்கள்?

பல கட்ட இணைய தேடலிற்கு பிறகு அன்று நான் எடுத்த அந்த முடிவு மிகச்சிறந்த முடிவாகவே நான் இப்போது கருதுகிறேன். இந்த மூன்று வருடங்களில் மட்டும் பல முறை எனக்கு தொலைபேசியில் அந்த மடிகணினி கம்பனியின் உதவி தேவைப்பட்டு இருக்கிறது, பல முறை  அது பழுது பார்க்கப்பட்டு உள்ளது. பல முறை பாகம் மாற்றப்பட்டும் உள்ளது.

ஐம்பத்தி ஐயாயிரம் விலை போட்டு வாங்கிய என் மடி கணினியிற்கு இது வரை லச்சரூபாய்க்கு மேலே மதிப்புள்ள அளவிற்கு பாகங்கள் மாற்றப்பட்டு உள்ளது. எல்லாம் என் இருப்பிடத்தில் இருந்தே..  அதுவும் இலவசமாக. என்ன நம்ப முடியவில்லையா? ஏன், எதற்கு, எப்படி? அடுத்த பதிவில்…

Share

கி.பி 2020 – கவிதை

Future India

கதிரவன் பூமிக்கு கரம் தந்த நேரம்.
இயந்திர வாழ்க்கை தொடங்குகிறது என்று
அலாரம் அடிக்க தொடங்கியது.
எழுந்ததும் படிக்கும் நாளிதழ் பழக்கம்
இப்போது உருமாறி விட்டது என்பதினால்
செய்தி காண கணினித்திரை விரிந்தது!

செவ்வாய் கிரகத்தில் ஆராய்ந்து முடித்து
பூமி திரும்புகிறான்  இந்தியன் என்றும்,
வேலை தேடி இந்தியாவிற்கு
படையெடுக்கும் அமெரிக்கர் என்றும்
விரிந்து சென்றது இணையவலை.

லஞ்சம் இல்லா அரசியலால்
எதுவும் சாத்தியம் என்றேதான்
நெஞ்சம் சொல்லியது என்னோடு
அது உண்மையானது இன்றோடு.

இந்த சந்தோஷ அலையில்
மனம் பயணித்த வேளையில்
ஏதோ ஞாபகம் வந்தது போல்
இணையதளத்தை மாற்றினேன்.
இந்தியாவின் தலைசிறந்த பள்ளியொன்றின்
இணயதளம் தான் அது.

என் மகனை அதில் சேர்க்க
விண்ணப்ப படிவத்தை திறந்து பார்த்தேன்.
பெயர்
முகவரி
புகைப்படமென்று
நீண்டு சென்ற அதன் நடுவே,
ஜா….தி நின்றது வெறியோடு
அது இன்னும் அழியவில்லை மனிதச்சதையோடு!

இரும்பாக இந்தியா மாறினாலும்
துருவொன்று இருக்கத்தானே செய்யுமென்று
மனதை தேற்றிய நேரத்தில்
வெளியே யாரோ அழைப்பது கேட்டது.

கதவை திறந்து நான் பார்த்தேன்
ஒரு முறை தேற்றிய என்மனதை
மறுமுறை தேற்ற முடியவில்லை.
வெளியே
திருவோட்டோடு பிச்சைக்காரன்!

- பிரவீன் குமார் செ

பி.கு: இது 2003ம் வருடம் நான் எழுதியது.. அதற்குள்ளே இதோ 2011 வந்துவிட்டது. நல்லவேளை 2020 வருவதற்குள் இதை பதிவித்துவிட்டேன்.

Share

அவன் இவன் – என் பார்வையில் (விமர்சனம்)

avan ivan arya vishal

வழக்கத்துக்கு மாறான பாலா படம் இது. படம் முழுக்க சிரிக்க வைக்க வேண்டும் என எடுக்கப்பட்ட படம். முதல் முறையாக வருடகணக்கில் இழுக்காமல் குறுகிய காலத்தில் பாலா எடுத்த படம். வித்யாசமான கதாபாத்திரத்தில் விஷால் நடித்த படம். இவை தான் “அவன் இவன்” திரைப்படத்தை பற்றி  பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிய விஷயம். ஆனால் படத்திலோ…

குறுகிய காலத்தில் எடுக்க வேண்டும் என்பதற்காக பாலா கதையை சுத்தமாக யோசிக்க மறந்துவிட்டார். கதையே இல்லாத போது எதை நோக்கியும் செல்லாத திரைக்கதையில் அவருக்கு பெரிதாய் மெனக்கெடல் தேவைப்படவில்லை. படம் முழுக்க சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக கீழ் தரமான வசனங்களாலும், அவரின் முந்தைய திரைப்படத்தின் கதாபாத்திரங்களை ஒப்பேற்றியும் எடுத்திருப்பதை உணர முடிகிறது.

ஏற்றுக்கொள்ள முடியா  லாஜிக் மீறல்கள், குமட்டும் அளவிற்கு அருவருப்பு,  எரிச்சலூட்டும் காமெடிகள், தேவையற்ற காட்சி சொருகல்கள், நெளியச்செய்யும் வசனங்கள், அளவுக்கு மீறிய வன்முறை, மனதை பாதிக்கும் குரூரம்.. இவை அனைத்தும் தேசிய விருது பெற்ற பாலாவிடம் இருந்து!

பிதாமகன் சூர்யாவின் பிரதிபலிப்பே இதில் ஆர்யா. நந்தா லொடுக்கு பாண்டியின் வசனம் பேசும் அதே மாடுலேஷன் தான் இவருக்கு இதில். பிதாமகன் விக்ரமின் வாய்ஸ் மாடுலேசனையும் அவ்வப்போதும், பாடி லாங்குவேஜை ஆக்ரோஷமாகும் போதும்  நினைவுபடுத்துகிறார் விஷால்.. நந்தா ராஜ்கிரனை சற்று கோமாளித்தனாக மாற்றியமைத்ததுதான் தான் ஜமீனாக ஜீ.எம்.குமார் ஏற்று நடித்த “ஐனஸ்” பாத்திரம். பிதாமகன் லைலா போலீஸ்  கான்ஸ்டபிளாக ப்ரோமோஷன் வாங்கியிருக்கும் கதாபாத்திரம் இதில் ஒரு ஹீரோயின் நடித்தது.

பிதாமகன் சங்கீதா வாயில் வெற்றிலை பாக்கை பிடிங்கிவிட்டு, அதற்க்கு பதில் பீடியை சொருகி, கையில் குவாட்டரை திணித்து, கேட்பவர் காதில் ரத்தம் வரும் அளவிற்கு  கெட்டவார்த்தை பேசுபவர் விஷாலின் அம்மாவாக நடித்த அம்பிகா. அம்பிகாவிற்கு போட்டி போடும் அளவிற்கு கெட்ட வார்த்தை தெரிந்த அம்மாதான் ஆர்யாவின் அம்மா. இவர்கள் இருவருக்கும் கணவனாக சேவை செய்யும் கதாபாத்திரத்தில் விஷாலின், ஆர்யாவின் ஒரு தந்தை. (குழப்புதா? அவருக்கு ரெண்டு பொண்டாட்டி)

படத்தின் கதை இது தான். மேலே இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் உரையாடுகிறார்கள். கூடவே இன்னும் சில கதாபாத்திரங்களும் அவர்களின் உரையாடல்களில் கலந்து கொள்கிறார்கள். கடைசியில் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் ஜமீன்தார் ஐனஸ் குரூரமாக கொல்லப்படுகிறார். அவரை கொன்றவரை விஷாலும், ஆர்யாவும் பிடித்து வந்து ஐனசின் பிணத்தோடு எரியூட்டுகிறார்கள். இவ்வளோ தான்.

இத்தனை எரிச்சல்களையும் மீறி படத்தில் எனக்கு பிடித்த பல விஷயங்கள் இருக்கிறது. அது விஷாலின் நடிப்பு.. நடிப்பு என்பதை விட அவரின் கடின உழைப்பு, மெனக்கெடல் என்றே சொல்லலாம். படத்தில் அவரின் அறிமுக காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது. மாறுக்கண் கொண்ட அரவாணியாக நடிக்க நிச்சயம் தைரியம் வேண்டும். அவருக்கு நிச்சயம் இதில் விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது. படத்தின் சில பாடல்கள் பயன்படுத்தப்படவில்லை. ஏனோ தெரியவில்லை யுவனின் பின்னணி இசையை இதில் என்னால் சரியாக கவனிக்க முடியவில்லை. படத்தின் இன்னொரு சிறப்பம்சமே காமிரா தான். படம் முழுக்க பச்சை பசேல்.

g m kumar

என்னை கேட்டால் இந்த படத்தின் கதாநாயகன் நிச்சயம் ஜீ.எம் குமார் அவர்கள் தான். “நான் ஐனஸ் சொல்றேன்”… எனும் வசனம்… நான் மிகவும் ரசித்தது.   படம் முழுக்க தன் ஆளுமையை செலுத்தி, அனைவரையும் சிரிக்க வைத்து, ரசிக்க வைத்து, அழ வைத்து, மனதை பதைபதைக்க வைத்து கடைச்யில் அவரை கொண்டாடச்செய்துவிட்டார். அதுவும் தைரியாமாக, முழு நிர்வாணமாக நடித்த காட்சியில்…. சத்தியமாக வார்த்தை இல்லை. ஹாட்ஸ் ஆப் டூ ஹிம்.

எனக்கு இந்த படத்தில் மிகவும் பிடித்த ஒரு நகைச்சுவை… ஒரு கறிவிருந்திற்கு சென்ற விஷால் அவர் விரும்பும் போலீஸ் கான்ஸ்டபிள் பெண்ணின் எதிரில் தன் புல்லட்டை நிறுத்தி அதில் அமர்ந்து தண்ணி அடித்துக்கொண்டே அவரை லுக் விட்டுக்கொண்டு இருப்பார். வருவோர் அனைவரையும் வரவேற்பதில் பிசியாக இருக்கும் அந்த பெண் தன்னை விஷால் உற்று பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்து அவரை பார்த்து கோபத்துடன் “என்ன வேண்டும்” என முறைப்பார். பதிலுக்கு விஷாலோ அதே ரொமாண்டிக் லுக்குடன் “சோறு எப்போ” என சைகையில் கேட்டவுடன் தியேட்டரே குலுங்கும் அளவிற்கு சிரித்து அடங்கியும், என் சப்தம் மட்டும் தனியே.. இதை பார்க்கும்போது டைமிங்கில் தான் உணர முடியும். இப்படி என்னால் சிரிப்பை நிறுத்த முடியா பல காமடி காட்சிகள் படத்தில் இருக்கிறது.

எல்லாம் படம் முடிய அரைமணி நேரம் வரை மட்டுமே. பிறகு படத்திற்கு சம்பந்தமே இல்லாமல் திணிக்கப்பட வில்லனாக வரும் நடிகர் ஆர்.கே.கதாபாத்திரமும். அவர் ஜி.எம்.குமார் அவர்களை நிர்வாணப்படுத்தி அடித்து, கொன்று ஒரு பெரிய மரத்தில் கட்டி தூக்கில் தொங்கவிடும் காட்சி வரை பார்வையாளர் அனைவரின் மனமும் பதைபதைத்துவிடும். இந்த வில்லன் நடிகர் ஆர்.கே என்று பிறகு தெரிந்தவுடன் மிகவும் ஆச்சர்யபட்டு போனேன். அருமையான நடிப்பு. மிரட்டி இருக்கிறார். ஆனால் அத்தனை குரூரம் தேவையா என்று தெரியவில்லை. படத்தை கண்ட குழந்தைகளின் மனது நிச்சயம் பாதிக்கப்பட்டு இருக்கும்.

மொத்தத்தில் வழக்கமாக கதை பின்னணியில்  காணப்படும் அதே மலை பிரதேசம்.  வழக்கம் போல் நந்தா லொடுக்கு பாண்டியை பின்பற்றி, பிதாமகன் சூர்யாவை தொடர்ந்து அதே திருடர்களின் கதைக்களம். நகைச்சுவை படம் என்பதால் படம் முழுக்க ரசிகர்களை சிரிக்க முயற்சித்து விட்டு கடைசி அரைமணி நேரத்தில் பாலாவின் வன்முறை, குரூரச்சிந்தனை, வழக்கம் போல் எட்டி பார்க்கிறது.

படம் முடியும் போது, சேதுவில் விக்ரம் நடந்து செல்வது போல், பிதாமகனிலும் விக்ரம் நடந்து செல்வது போல், நான் கடவுளில் ஆர்யா நடந்து செல்வது போல் இதில் ஆர்யாவும், விஷாலும் வழக்கம் போல் நடந்து செல்கிறார்கள். அப்படியே வழக்கம் போல் அவர்கள் நடந்தாவரே காட்சி திரையில் உறைகிறது. உடனே வழக்கம் போல் “A Film By Bala” என்று எழுத்து தோன்றுகிறது. உடனே வழக்கம் போல் திரையரங்கை விட்டு நான் வீட்டிற்கு வந்து விட்டேன். நீங்களும் வழக்கம் போல் இந்த விமர்சனத்தை படித்து விட்டு உங்கள் கருத்தை பதிவு செய்துவிடுங்கள்.

Share

எனக்குள்ளே குற்றஉணர்வு – கவிதை

 

feeling-gulity-tamil-poem-by-praveen

நான் எழுதுகிற கவிதைகள் யாவும்
காதலை பற்றியே இருக்கிறதென
உள்ளுக்குள்ளே குற்றஉணர்வு.

எதை எதையோ எழுதிட
எனக்கும் கூட ஆசைதான்.
இருந்தும் தெரியவில்லை
எதைப்பற்றி எழுதுவதென்று.

நூலகம் சென்றேன்
கவிதைகள் கற்க.
பிரபலாமான கவிஞர்கள்
பிரபலம் பெரும் கவிஞர்கள்
வித விதமான கவிதை புத்தகங்கள்.
வரிசையாக வைக்கப்பட்டு இருந்தது!

தேடினேன்
தேடினேன்
நீண்ட நேர தேடலின் பயனாய்
கிடைத்து விட்டது
வைரமுத்துவின் கவிதை.

அவர் கவிதைகளில் நான் பயணிக்க ஆரமித்தேன்.
முடிவேயில்லாமல் சென்றது அவர் கற்பனைகள்!
வரம் வாங்கித்தான் வந்திருக்கிறார் மனிதர்
வைர வரிகளை படைத்திட!

காதலை பற்றி எழுதிய கவிஞர்
என் காதல் நரம்பினை தூன்டியே விட்டார்.
விதவை பெண்ணின் கண்ணீர ஈரம்
என்னில் காயாமல் இருந்தது சில நேரம்.

ஏழைகளின் துயரங்கள்
எனக்குள்ளேயும் எட்டிப்பார்த்தது.
கிராமத்து வாழ்க்கையை
நானும் வாழ்ந்தேன் சில கனம்.

சில நேரம் அரசியல்வாதியானேன்.
சில நேரம் ஆசிரியரானேன்.
பல நேரம் குழந்தையானேன்.
எதை படித்தேனோ
அதை போலவே மாறினேன்!

பயணம் முடிந்தது இனிதாய்.
கவிதை எழுதும் திறனிலே
பக்குவப்படதாய் உணர்ந்தேன்.
காதலை தவிர மாற்றத்தையும்
கவிதையாக்கும் முறையை அறிந்தேன்.

வீட்டிற்கு சென்றேன்.
மேஜை மேல் காகிதம் வைத்தேன்.
காகிதம் மேல் பேனா வைத்தேன்.
பேனா மேல் என் சிந்தையை வைத்தேன்.

யோசித்தேன்…
யோசித்தேன்…
ஆழ்ந்து யோசித்தேன்….
இருந்தும்
காதலை தவிர
கருமமும் வரவில்லை!

Share

தெய்வம் வாழ்வது எங்கே – வானம் திரைப்பட பாடல் என் குரலில்

வானம் திரைப்படத்திற்கு நா.முத்துக்குமார்அவர்கள் எழுதி யுவன் பாடிய பாடல் இது..  என் குரலில் ஒரு முயற்சி.. கேட்டுவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தெய்வம் வாழ்வது எங்கே,
தெய்வம் வாழ்வது எங்கே
தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்..
காதலினால் மூடிவிட்ட,
கண்கள் இன்று திறக்கிறது..
திறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்..
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..

தெய்வம் வாழ்வது எங்கே,
தெய்வம் வாழ்வது எங்கே
தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்..
காதலினால் மூடிவிட்ட,
கண்கள் இன்று திறக்கிறது..
திறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்..

அடுத்தவன் கண்ணில் இன்பம்..
காண்பதும் காதல் தான்..
இனி இவன் நெஞ்சில் இல்லை பாரம்.. ஒ..
தனக்காக வாழ்வதா வாழ்க்கை..
விதி ஈரமற்று தந்த போக்கை..
இவன் பாவம் கங்கையில் தீர.
இன்று நாளும் வணங்கும் நம் தெய்வம் எங்கே இருக்கிறது..
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..
நாளும்.. நாளும்..

Share

கவிஞர் நா.முத்துக்குமாருடன் சில நிமிடங்கள்

Na.Muthu Kumar & Praveen Kumar

“நேற்று பார்த்த நிலவா என்று நெஞ்சம் என்னை கேட்கிறதே.. பூட்டி வைத்த உணர்வுகள் மேலே புதிய சிறகு முளைக்கிறதே.” போன்ற வரிகளால் என் மனம் பித்துப்பிடித்துக்கொண்டு இருந்த சமயம் அது. சரியாக சொல்லவேண்டுமானால் காதல் கொண்டேன் திரைப்படத்தை பார்த்து தொலைத்ததில் இருந்து பல மாதங்களாக அந்த பாடல்கள் உள்ளே ஏப்.எம் போல் இருபத்திநாலு மணி நேரமும் ஒலித்துக்கொண்டே இருந்தது. உறங்கும் போது கூட என் உதடுகள் மறக்காமல் உளறிக்கொண்டிருந்த அந்த பாடல் வரிகளை எழுதியது நா.முத்துக்குமார் அவர்கள் என்று அப்போது தான் எனக்கு அவர் பெயர் பரிட்சயம் ஆனது.  என் வாழ்நாளில் நான் அதிகமாக கேட்ட பாடல்களும் அதுவாகத்தான்  இருக்கும்.

பிறகு வந்த ரெயின்போ காலனி திரைப்படத்தின் பாடல்களை கேட்டதில் இருந்து என் வாழ்க்கையில் நான் கண்டிப்பாக சந்தித்தே தீர வேண்டிய நபரில் ஒருவராகவே அவரை கருதினேன். அதற்க்கு காரணமும் இருந்தது. வெறும் பாடல்களை கேட்டுக்கொண்டும், கவிதைகளை படித்துக்கொண்டு மட்டுமில்லாமல் அதன் மேல் எனக்கு தாகம் ஊற்றெடுத்துக்கொண்டிருந்த நேரம் அது.  கவிதை எழுத முயற்சிப்பதற்க்காக நூலகத்தில் அவருடைய கவிதைகளை தேடி தேடி படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய கவிதை தொகுப்பான “பட்டாம்பூச்சி விற்பவன்” என்னை கவிதை எழுத மிகவும் தூண்டியவை. நான் இப்போது என் வலைப்பதிவில் பதிவித்துக்கொண்டிருக்கும் கவிதைகள் யாவும் அச்சமயத்தில் கிறுக்கியவைகளே. வெறும் காகிதத்தில் மக்கிப்போகும்படி விட்டுவிடாமல் இருக்க இப்போது அதை ஒவ்வொன்றாக என் வலைப்பதிவில் பதிவேற்றம் செய்துக்கொண்டு இருக்கிறேன்.

இவை அனைத்தும் நடந்தது 2005 வரை. கல்லூரி பருவம் முடிந்து வாழ்கையின் பின்னால் ஓடத்துவங்கி இத்தோடு ஐந்து வருடமாகிவிட்டது. கவிதை, எழுத்து இவற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி என்னுடைய கவிதைகளே எனக்கு சரளமாக நினைவில் வாராத அளவிற்கு வாழ்க்கை பாதை மாறியது. இத்தருணத்தில் கடந்த குடியரசுதினத்தன்று சென்னை ஜெயா டீவி அலுவலகத்திற்கு ஒரு நேர்காணலுக்காக சென்றேன். மீண்டும் சேலம் திரும்ப இருந்த என்னை அஜயன் பாலா அவர்கள் தன் வீட்டுற்கு அழைத்துச்சென்றார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஒரு திரைப்படத்தின் திரைக்கதை விவாதம் அப்போது அவர் வீட்டில்  நடந்துக்கொண்டிருந்தது. இது எனக்கு மிகப்புதிய அனுபவம்.

நடிகர் சுஜாதா ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டது போல் வெறும் நான்கு சுவற்றில் சில பேர்களால் விவாதிக்கப்பட்டு உருவாகிற கதை, பல கோடி செலவில் பிரம்மாண்டமாய் திரையில் வருவதும், மக்கள் அதை கூடி ரசிப்பது ஆச்சர்யாமான ஒன்று தான்.  எல்லாம் முடிந்து நள்ளிரவு உறங்கும் நேரம் இருக்கும் என் நினைக்கிறேன். நா.முத்துக்குமாரை அவர்களை பற்றிய எதேச்சையாக பேச்சு வந்தது. சில நிமிட உரையாடலிலேயே நான் நா.முத்துக்குமாரின் தீவிர ரசிகன் என உணர்ந்தாரோ என்னவோ தெரியவில்லை அவரை நீங்க சந்திக்கனுமா என்றார். ஆச்சர்யம் என்னால் நம்ப முடியவில்லை. சந்திக்க முடிந்தால் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக இருக்கும் ஆனால் முடியுமா என்றேன். நாளை சந்திக்கலாம் என்று உறங்கிவிட்டார். எனக்கு உறக்கம் வரவில்லை.

மறுநாள் காலை, அஜயன் அண்ணா அவர்கள் தனது செல்ப்போனில்” ஹலோ முத்துக்குமார், பிசியா…” என்று ஆரமித்தார்.. அதுவரை எனக்கு தெரியாது இருவரும் பலவருட நண்பர்கள் என்று. அடுத்த சில நிமிடங்களில் நானும் அஜயன் அண்ணாவும் சாலிகிராமத்தில் ஒரு அப்பார்ட்மெண்டில் இரு சக்கரவாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தோம். நான் அவருடைய அலுவலகத்தின் காலிங்பெல்லை அடித்தேன். எழுநூறு பாடல்களுக்கு மேல் எழுதி தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நபர் எனக்கூறப்படும் அவர் கதவை திறந்து எங்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். புகைப்படத்திலும், தொலைக்காட்சிகளிலும் வழக்கமாக தோன்றும் அதே கட்டம் போட்ட சட்டை. வேட்டை என்ற லிங்குசாமி அவர்களின் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் அடுத்த படத்திற்கு பாடல் எழுதிக்கொண்டு இருந்தார் அப்போது.

அமைதியான அந்த அலுவலகம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. தமிழர்கள் அனைவரின் மனதை வருடி கொள்ளையடிக்கும்  பாடல்களும், இளைஞர்களை உதடுகளை முனுமுனுக்கச் செய்யும் பாடல்களும் இங்கே இருந்துதான் பிறந்துக்கொண்டு இருக்கிறது என்பது தான் அதற்க்கு காரணம். சில நிமிட உரையாடலுக்கு பின்னர் அவரை பேஸ்புக்கில் அழைத்துவர முயற்சித்துப்பார்தேன். ஆனால் நேரமின்மையால் அவரால் வர இயலவில்லை என்றார். நானும் அவரை சட்டென விட்ட பாடில்லை. ரசிகர்களை சந்திக்கவும், உரையாடவும் ஒரு தளமாக அது இருக்குமே என்றேன். சமூக வலைதளங்களில் நேரம் செலவிடுதல் வேலையை பாதிக்கும் என்பது அவர் காரணம். அதுவும் சரிதான் பேஸ்புக்கில் அவர் ஸ்டேடஸ் போடும் நேரத்தில், மற்றவர் ஸ்டேடஸ் அப்டேட் செய்யும் சில பாடல் வரிகளை அவர் எழுதிவிடலாம்.

திடீரென அஜயன் அண்ணா என் மொபைலில் நான் பாடிய பாடல்களில் ஒன்றை போடச்சொன்னார். இதை நான் யோசிக்கவே இல்லை. எனக்கு பிடித்த சில பாடல்களை பாடகர்களின் குரலை நீக்கிவிட்டு என் குரலில் இசையுடன் (கரோகே) பதிவு செய்து வைத்து இருந்தேன். அது அவருக்கும் பிடித்து இருந்தது. அதை தான் இப்போது போட சொன்னார். எனக்கு நான் பாடியதில் யுவனின் இசையில், நா.முத்துக்குமார்  அவர்கள் எழுதிய “போகாதே பாடல்”  பாடல் மிகவும் பிடிக்கும். அவர் எழுதிய பாடலை நான் என் குரலில் பாடி அவரிடமே காண்பிப்பேன் என்று அந்த நிமிடம் வரை நான் நினைக்கவில்லை.

அதற்கு முன்னர் ஒரு சின்ன சந்தேகம். அவரிடமே கேட்டுவிட்டேன் “போகாதே பாடல் எழுதியது நீங்கள் தானே?” என்றேன். “ஆம்” என்றார். உடனே பாடலை ப்ளே செய்தேன்.. மெல்லிய சப்தத்தில் ஆரம்பமானது இசை. என் மொபைலையே கூர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார். நான் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தேன். சில நொடிகளில் “போகாதே. போகாதே…” என்று ஆரம்பமானதும்.. “ஹேய்,,, இது யுவன் குரல் மாதிரியே இருக்கு…, யுவன் கேட்டார்னா ஆச்சர்ய படுவார்” என்றார். இதை கேட்டவுடன் நான் ரெக்கை கட்டி வானத்தில் பறக்காத குறை… “நீங்கள் ப்ரோபசனல் சிங்கரா?” என்றார்… “இல்லை, ஜஸ்ட் பாத்ரூம் சிங்கர்,,, இது வெறும் ஆர்வத்தில் பாடியது” என்றேன்

. Na.Muthu Kumar Exclusive Photo

நான் இப்போது வெறும் ரசிகனாக, முதிர்ச்சி அடைந்த ரசிகனாகவே அவரை சந்தித்தேன்.. பல வருடங்களுக்கு முன்னால் அவரால் தீவிரமாக ஈர்க்கப்பட்டு, அவர் பாடல்களினாலும், கவிதையினாலும் பித்து பிடித்து திரிந்த போது சந்தித்திருந்தால் பல கேள்விகளால் அவரை துளைத்தெடுத்திருப்பேன் என நினைக்கிறேன். இதை அவரிடமே கூறினேன். என்னுடைய கவிதை தொகுப்பில் உங்களுக்கு பிடித்தது என்ன என்றார். சட்டென ஞாபகம் வரவில்லை. தர்மசங்கடமான சூழ்நிலை. அவருக்கும் தான் என நினைக்கிறன். கவிதைகள், எழுத்துக்களை விட்டு விலகி பல வருடங்கள் ஆயிற்று அதனால் ஞாபகம் இல்லை என்றேன். இருந்தாலும் உள்ளுக்குள்ளே அந்த சூழ்நிலை வருத்தம் அளித்தது.

முன்பொருமுறை ஒரு இதழில் தன்னை தன் தந்தை சைக்கிளில் உட்காரவைத்து மகாபலிபுரம் ரோட்டில் இருட்டில் ஒட்டிசென்றதை நினைவு கூர்ந்து இப்போது அதே மகாபலிபுரம் ரோட்டில் தான் காரில் செல்வதாகவும் ஆனால் தன் தந்தை தான் இல்லை என வருத்தப்பட்டு இருந்தார்.  அவரை பற்றி நான் படித்ததில் என்னை மிகவும் பாதித்த ஒன்று அது. அதை பற்றி அவரிடம் பகிர்ந்து விட்டு. இன்னும் பல நல்ல பாடல்களை எழுதுமாறு என் வாழ்த்துக்களை கூறிவிட்டு அவரிடம் இருந்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டும் விடை பெற்றேன். உள்ளுக்குள் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.   வெளியே வந்து பைக்கில் அமர்த்தும் அந்த கவிதை தொகுப்பு நினைவில் வராமல் போனது சங்கடம் அளிக்கிறது என்று அஜயன் பாலா அவர்களிடம் கூறினேன். சிறிது தூரம் தான் சென்றிருப்போம் “பட்டாம் பூச்சி விற்பவன்” என சட்டென ஞாபகம் வந்தது.

பின் குறிப்பு:
நான் பாடிய அந்த “போகாதே போகாதே” பாடலை கேட்க இங்கே கிளிக் செய்யவும்
இந்த மறக்கா முடியா சந்திப்பினை ஏற்படுத்திய தாமஸ் அண்ணாவிற்கு என் நன்றிகள். அது யார் தாமஸ் அண்ணா என்று கேட்பவர் இங்கே கிளிக் செய்யவும்.

Share

ஊழலுக்கு எதிரான பாரதம் – சேலத்தின் குரல்

India Against Corruption Movement In Salem

அன்னா ஹசாரே அவர்களின் “ஊழலுக்கு எதிரான பாரதம்” என்ற போராட்டத்திற்கு ஆதரவாக சேலத்தின் பிரபல கல்வியாளர், சமூக ஆர்வலர் திரு.ஜெயப்ரகாஷ் காந்தி அவர்களின் தலைமையில் 17 ஏப்ரல் அன்று கருத்தரங்கம் நடைபெற்றது. முன்னூறுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு வந்து இதற்கு ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு தரப்பட்ட மக்களும், சங்க நிர்வாகிகளும், தியாகிகளும், சமூக ஆர்வலர்களும் இதில் கலந்துகொண்டு ஊக்குவித்தனர்.  இதில் எழுபத்தைந்து சதவிகிதம் பேர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னா ஹசாரே அவர்களின் கொள்கையை ஆதரித்து அனைவராலும் கையொப்பம் இடப்பட்டு “ஊழலுக்கு எதிரான பாரதம்” தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கடுத்து அதனின் நகல், இந்தியாவின் பிரதம மந்திரிக்கும், குடியரசு தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. தியாகிகளும், பெரியோர்களும் பேசிய அந்த மேடையில் அவர்களுக்கினையான போதிய அனுபவம் இல்லாவிடினும் ஊழலற்ற இந்தியாவை உருவாக்க ஆதரவாக நானும் என்னுடைய எண்ணங்களை பதிவு செய்தேன். நான் பேசியவற்றை அப்படியே இங்கு எழுத்துக்களாய் பதிவிக்கிறேன் .

praveen speaking at India Against corruption, Salem

அனைவருக்கும் என் காலை வணக்கம்,
இங்கு வந்திருப்பவர்கள் அனைவரிடமும் ஒரே ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுறேன். உங்கள் வாழ்நாளில் இதுவரை  உங்களிடம் லஞ்சமே கேட்கபட்டதில்லை என்று உங்களில் யாரவது இருக்கிறீர்களா? அப்படி இருந்தால் தயவு செஞ்சு கொஞ்சம் கையை உயர்திக்காட்ட முடியுமா? – மேடையில் இருப்பவர் கூட.

அடுத்த  தலைமுறையில் இந்த கேள்விக்கு எல்லாருமே கையை தூக்க வேண்டும். அந்த ஒரு முக்கிய நோக்கத்திற்கு தான் நாம் அனைவரும் இங்கு ஒன்று கூடி இருக்கிறோம்.

நான் என் வாழ்வில் சந்தித்த ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வாழும் என்னுடைய Relative ஒருவருக்கு இரண்டு  பிள்ளைகள். எதிர்பாராதவிதமாக பிறக்கும்போதே  இரண்டு பேரும் ஊனமுற்றவர்களா பிறந்துவிட்டார்கள்..  மூளை வளர்ச்சி குன்றிய முதல் மகனையும், வாய்பேச இயலாத இளைய மகனையும் நல்லமுறையில் வளர்ப்பதற்கு அரசின் ஊனமுற்றோரின் உதவித்தொகை அவர்களுக்குதேவைப்பட்டது.

அதற்காக தன்னுடைய மகன்களுக்கு ஊனமுற்றோர் சான்றிதல் பெற அதற்கான அலுவலகத்திற்கு அவங்க தாயார் போனாங்க. அந்த அலுவலரோ, சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்றது மட்டுமல்லாமல், அரசு வழங்கும் உதவித்தொகை மாத மாதம் சிறிது லஞ்சமாக பெற்றபிறகே வழங்கிஇருக்கிறார். இதில்  வருத்தமான விஷயம் என்னவென்றால் அந்த அலுவலரும் ஒரு ஊனமுற்றவரே. ஆயிரம், லட்சம், கோடினு தினமும் ஊழல் நடப்பதை நான் செய்தித்தாளிலேயும், தொலைகாட்சியிலும் பார்த்தாலும் இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. இங்கு அந்த நபர் உடல் ஊனமுற்றிருந்தாலும், அவரை மனம் ஊனமுற்றவராகவே நான் பார்கிறேன்.

இந்த லஞ்சம், ஊழல் என்பது கீழ்நிலையில் இருந்து மேல்நிலை வரை ஒரு வைரஸ் மாதிரி நம் நாட்டில் பரவி இருக்கிறது. ஒருகுழந்தை பிறக்கும்போது “Birth Certificate” வாங்குவதில் தொடங்கி, வாழ்ந்து முடித்து  “Death Certificate” வாங்குவது வரைக்கும் லஞ்சம் தேவைப்படுது. ஒரு computerக்கு எப்படி virus அழித்துவிடாமல் பாதுகாக்க Anti-Virus Softwareதேவைப்படுதோ அதுபோல நாம் நாட்டை Corruption அழித்து விடாமல் பாதுகாக்க நிச்சயம் இந்த “Anti-Corruption Movement” தேவை.

அன்னா ஹசாரே எழுப்பிய அந்த நம்பிக்கை அலை இன்று சேலத்தில் ஜெய பிரகாஷ் காந்தி அவர்களின் மூலமாக வந்தடைந்து இருக்கிறது. லஞ்ச ஊழலை எதிர்த்து இன்று நாம் குரல் எழுப்புவதோடு மட்டும் நின்றுவிடாமல்  இதை ஒரு  போரமாக (Forum’) பதிவு செய்து தமிழக அளவில் ஒரு இயக்க சக்தியாக மாற்றவேண்டும். தமிழகம் முழுவதும் எங்களை போன்ற நிறைய இளைஞர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை ஒன்று திரட்டி ஒவ்வொரு ஊரிலும் இந்த போராட்டத்தை நடத்தவேண்டும்.  எல்லா ஊர்களையும் இணைத்து சேலத்தை மையமாக கொண்டு இந்த இயக்கம் இயங்க வேண்டும் என்று என் கருத்தை நான் இங்கு பதிவு செய்றேன்.

இதற்கு அனைத்து மாவட்டத்தில் இருந்தும் உதவ நண்பர்கள் முன்வரவேண்டும். அனைவரையும் இந்த நோக்கம் சென்றடைந்து ஒன்று திரட்ட மீடியா, பிரஸ் சாப்போர்ட் கண்டிப்பாக தேவை. சேலம்ஜில்லா.காம் (Salemjilla.com) என்ற இணைய தளம் மூலமாக நாங்களும் இந்த நோக்கம் நிறைவேற உறுதுணையாக இருக்கிறோம்.
எதிர்வரும் காலத்தில் என்னுடைய மகனோ மகளோ லஞ்சம் என்றால் என்ன அர்த்தம்னு டிக்சியனரியில் (Dictionary)  மட்டும் தான் பார்க்க முடியும்னு  ஒரு சூழல்  உருவாகும் என நான் நம்புகிறேன்.

நன்றி வணக்கம்.

அனைத்து பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் இந்த கருத்தரங்கை பதிவு செய்து வெளியிட்டு ஆதரவளித்தது. இதில் பாலிமர் சானலின் செய்தி வெளியீட்டை கீழே காணலாம்.

Share

நிலாப்பெண் – கவிதை

the-girl-and-the-moon-girl-moon_big

நிலவும் அழகுதான்
அண்ணாந்து பார்த்து
ரசிக்குமளவிற்கு.

பார்த்தால் பக்கம்தான்
நிஜமோ,
தொடக்கைகள் நீண்டும்
தொட்டுவிடா தொலைவிற்கு.

தனிமையான இரவுப்பொழுதில்,
நிலவே
துணையாகிறது.

கண்கள் காணக்கிடைத்தும்,
சொந்தமில்லை என்பதே
நிஜமாகிறது.

உன்னை நிலவென்று ஒருமுறை
கவிதை எழுதினேனே,
இப்போது புரிகிறது
நீ நிலவுதான்!

Share

தேர்வு – கவிதை

exam-tamil-poem

தேர்வு தொடங்கியது.
கேள்வித்தாள் ஒருகையில்,
பதில்தாள் மறுகையில்.

கேள்வித்தாளை அனாதையாக்கினேன்
பதில்தாளை மட்டும் தத்தெடுத்தேன்!

பக்கம் பக்கமாய் எழுத ஆரமித்தேன்.
ஒன்று
இரண்டு
முன்று
.
.
.
அடுக்கிக்கொண்டே போனேன்.

தேர்வு நேரம் முடிந்தது.
ஆசிரியர் ஆச்சர்யத்தோடு வாங்கினார்
கட்டப்படாத என் ஒற்றை பதில்தாளை.

பாவம்!
அவருக்கு தெரியாது
என் பாக்கட்டில் மீதமுள்ள
நான் எழுதிய கவிதை தாள்களை!

பாவம்!
யாருக்கும் தெரியாது,
கடைசி வரை அந்த கேள்வித்தாள்
என் கண்களினால் கற்பழிக்கப்படவில்லை என்று!

Share