Posts Tagged கவிதை

    புறக்கணிப்பு – கவிதை

    Copy_of_lonely10

    உன் வார்த்தை
    என்னை அவமதிக்கிறது.

    உன் பார்வை
    என்னை உதாசீனப்படுத்துகிறது.

    உன் செயல்கள்
    என்னை புறக்கணிக்கிறது.

    ஐயோ!
    எப்போதுமில்லாமல்
    இப்போது எனக்குள்ளே
    தாழ்வு மனப்பான்மை!

    – பிரவீன் குமார் செ

    பெண்கள் நேற்று இன்று நாளை

    girl

    பெண்கள் நேற்று…

    திருமண ஆசை பூக்கும்
    மனமிருந்தும்,
    திருமண சேலை உடுத்த
    வயதிருந்தும்,
    கணவனை வாங்க காசில்லை
    அவளுக்கு.

    தினமும் வருகிறார்கள்
    பெண் பார்க்க.
    இரக்கமின்றி இருக்கிறார்கள்
    பணம் கேட்க.

    “கடவுளை காணத்தான் தட்சணை.
    கணவனைக் காணக்கூடவா (வர)தட்சணை?”
    பதிலில்லை அவள் கேள்விக்கு!
    ஏழையாய் பிறந்ததால்
    கோழையாய் நிற்கிறாள்.

    இன்றும் வழக்கம்போல்,
    வழக்கமான அலங்காரத்தோடும்,
    வழக்கமான கனவுகளோடும்,
    வந்து நின்றால் தேவதையாக.

    பெண் பார்க்க வந்தார்கள்.
    கொடுத்ததை தின்றார்கள்.
    பேரம் பேசச்சொன்னார்கள்.
    இல்லையென்றறிந்ததும்
    போய் வரவா என்றார்கள்.
    வேறெங்கோ பணம் பறிக்க.

    தினமும்,
    தவணை முறையில்
    இறக்கிறதவள் உயிர்.
    நாட்கள் தான் நிறைகிறது
    பேரமோ குறையவில்லையென்று
    கண்ணீரோடு சுவர் சாய்ந்தாள்
    விலை போகாத பூவை போலே.

    பெண்கள் இன்று…

    அலங்கரித்த மணமேடையில்
    சிந்தனையோடு மணமகள்.
    புன்னகையோடு மணமகன்.

    சிந்தனையின் அர்த்தம் எதுவாயினும்
    வாழ்த்த வந்தவர்களுக்கு தெரியாது
    அந்த புன்னகையின் அர்த்தம்
    கொழுத்த (பண) வேட்டையென்று.

    முகூர்த்த நேரமாச்சு
    மந்திரம் ஓதினார் ஐயர்.
    சட்டென்று புருவம் உயர்ந்தது
    மாப்பிள்ளை வீட்டாருக்கு.
    அதைக்கண்டு பதட்டம் உயர்ந்தது
    பெண் வீட்டாருக்கு.

    “பேசிய பணம் வரலையே”
    மிடுக்குடன் மாப்பிள்ளையின் அப்பா.
    வார்த்தை இல்லை பெண் வீட்டாரிடம்.
    அவர்களின் கண்களே பேசியது
    கண்ணீரோடு.
    ஏழ்மையின் அர்த்தம்
    அது சொல்லியது.

    திருமணம் நிற்பது உறுதியானது.
    “பாவப்பட்ட ஜென்மம் தானே நாம்”
    புலம்பினாள் தாய்.
    உயிருள்ள பிணமாய்
    விரக்தியோடு அப்பா.
    ஆனால் இன்னும்
    சிந்தனையோடு மணமகள்.

    “மானம் போன குடும்பத்திற்கு
    தற்கொலை தான் தக்க முடிவு”
    தீர்ப்பு கூறி கலைந்தது
    திருமணக்கூட்டம்.

    மறுநாள் காலை நாளிதழில்.
    மாற்றி வந்ததோர் தீர்ப்போன்று.
    “வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையை
    போலீசில் பிடித்துத் தந்தாள்
    புதுமணப்பெண்ணென்று.”

    பெண்கள் நாளை…

    “ஹலோ,
    நான் பீட்டர் பேசறேன் திவ்யா”
    என தொடங்கியது
    தொலைபேசி உரையாடல்.
    நிலவு பார்த்த குழந்தை போல
    மலர்ந்த முகமானாள் அவள்.

    “பீட்டர்
    நான் உன்னையே கல்யாணம் செஞ்சிக்க
    முடிவு பண்ணிட்டேன்.
    1,00,000 ரூபாய் பணம்.
    100 பவுன் நகை.
    ஒரு வீடு, அவ்வளவுதான்.
    ஓகே வா?”
    என்றாள் அவள்.
    “ஓகே. திவ்யா”
    அவன் உள்ளம் துள்ளியது
    சந்தோசத்தில்.

    மறுநாள் காலை
    மணக்கோலத்தில்
    திருமணபதிவு மையத்தில்
    நண்பர்களோடு நுழைந்தனர்.
    பதிவு செய்யும் அதிகாரி
    அவளின் அப்பா என்பதால்
    உரிமையுடன் கேட்டார்.
    “யாரம்மா இது?
    எங்கே உன் புருஷன்?”

    “அவன் கொடுத்த வரதட்சனைக்கு
    இரண்டு வருடம் போதுமென்று
    விவாகரத்து செய்துவிட்டேன்.
    இவன் கொடுக்கும் பணத்திற்கு
    நான்கு வருட ஒப்பந்தத்தோடு
    நடக்கிறது எங்கள் புதிய திருமணம்”
    என்று கூலாக சொன்னாள்
    கலியுகக்கண்ணகி.

    – பிரவீன் குமார் செ

    என் கவிதைக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்

    பறிக்க படா
    பூக்களைப் போல்
    ரசிக்கப்படா கவிதைகள்
    என்னுடையது…

    என்று நான் கவிதையிலேயே புலம்பிக்கொண்டு இருந்த கல்லூரிக்காலம் அது. என் கிறுக்கல்களுக்கு மத்தியில் நானே ஆச்சர்யப்படும் படியான கவிதைகள் அவ்வப்போது  என்னிலிருந்து வருவதை நான் உணர்ந்தாலும், யாரேனும் அதை படித்து விட்டு நிறை/குறை சொல்லுவார்களா என நான் ஏங்கி இருக்கிறேன். நண்பர்கள் யாருக்கும் அப்போது கவிதைகளை படிப்பதில் சுத்தமாய் ஆர்வம்  இல்லை. கவிதைகள் படிப்பவர்கள் யாரும் எனக்கு அப்போது பழக்கமுமில்லை. நான் எழுதுவது கவிதை தானா? இல்லை கிறுக்கிக்கொண்டு இருக்கிறேனா? என்று பல முறை எனக்கு ஐயம் எழுந்ததுண்டு. எழுத ஆரம்பிக்கும் ஒவ்வொருவரும் அந்த வலியை உணர்ந்து இருப்பர் என நினைக்கிறேன்.

    இந்த சூழ்நிலையில் ஒரு கவிதைப்போட்டியை கேள்விப்பட்டேன். என்னை நானே பரிட்சயத்துப்பார்க்க  இதை விட சிறந்த வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை. ஆனால் நான் கத்துக்குட்டிகளுடன்  போட்டி போடவில்லை. உண்மையாலுமே கவிஞர் என்று பெயர் வாங்கியவர்களுடன். அது ஒரு பெரிய அளவில் நடத்தப்பட்ட போட்டி.  சிறிது தயக்கத்துடன் என்னுடைய ஒரே ஒரு கவிதையை அந்த போட்டிக்கு அனுப்பினேன். அதுவும் என்ன காரணத்தினாலோ அந்த கவிதையின் கடைசி வரியை மட்டும் மாத்திவிட்டு அனுப்பினேன்.. “அவள் சொந்தம் இல்லை.. இருந்தும் முயற்சியுடன் நான்” என்று முடியுமாறு தான் உண்மையில் அதை எழுதி இருந்தேன்.

    சிலவாரங்களில் அந்த ஆச்சர்யம் எனக்கு காத்திருந்தது. “நெய்வேலி கவிஞர்களின் கவிதை” என்ற தொகுப்பில் என்னுடைய அந்த ஒரு கவிதையும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்தேன். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    2004ஆம் ஆண்டு ஜுலை மாதம்.
    ஏதோ ஒரு நல்ல நாள்.
    நெய்வேலி புத்தகக் கண்காட்சி.
    லிக்னைட் ஹால்.

    அந்த கவிதை தொகுப்பில் வெளியான கவிதையின் கவிஞர்கள் அனைவரும் வயதில் மிகவும் பெரியவர்கள். நான் மட்டுமே பத்தொன்பது வயது நிரம்பிய கல்லூரி மாணவன் என்பதால் கொஞ்சம் ஓரத்தில் ஒதுங்கி மேடையில் நின்றுக்கொண்டேன்.  என்னையும் கவிஞனாய் மதித்து, பல பேர் முன்னிலையில், அப்போதைய கடலூர் மாவட்ட கலக்டர், மேடையில் அந்த புத்தகத்தையும், மூன்று நூறு ருபாய் தாளையும் எனக்கு பரிசாக அளித்தார். முதன் முதலாய் என் கிறுக்கல்களுக்கு கிடைத்த அங்கிகாரம் அது.

    சந்தோசத்தின் உச்சத்தில் அதை வாங்கி விட்டு மேடையில் இருந்து கீழே இறங்கினேன். நண்பன் ஒருவன் “மச்சி நீ நெஜமாவே இத்தனை நாள் கவிதை தான் எழுதின போல” என்று ஆச்சர்யமாய் கேட்டான். எனது அங்கீகாரம் உறுதியானது. உடனே இன்னொருவன் “எப்போ ட்ரீட்?” என்றான்.  கூடவே செலவும் உறுதியானது.

    அடுத்த சில நாட்களில், புத்தகப்புழுவாய் நான் ஊர்ந்துக்கொண்டு இருந்த நெய்வேலி நூலகத்திற்கு வழக்கம் போல் சென்றேன். கவிதை புத்தகப் பகுதியில், நான் மிகவும் விரும்பும் நா.முத்துக்குமார், வைரமுத்து போன்றோரில் கவிதைப்புத்தகங்களுக்கு நடுவே “நமக்கென்ன என்று” என் கவிதை பிரசுரமான அந்த கவிதைத்தொகுப்பும் இருந்ததை ஏதேச்சையாக கண்டேன். நான் காண்பது உண்மை தான் என உணர சில நிமிடங்கள் பிடித்தது….

    Manitha-Muyarchi-Praveen-Poem

     

    namakkena-endru-Neyveli-Poet

    கல்லூரி நினைவுகள்

    என் கல்லூரி வாழ்க்கை முடிவுறும் தருணத்தில் எழுதிய கவிதை இது. கல்லூரியை விட்டு விடை பெரும் கடைசி நாளன்று எடுத்த புகைப்படம் இது. இரண்டையும் இணைத்து ஒன்றாக பார்க்கையில், கால இயந்திரம் பின்னோக்கி மீண்டும் என்னை அந்த வசந்த காலத்திற்கு அழைத்துச்செல்கிறது…

    PHOTO004

    ஆண்டுகள் பல
    கரைந்தாலும்,
    என் சுவாசம் இங்கு
    கலந்தே இருக்கும்.

    பாதங்கள் பல
    கடந்தாலும்,
    என் பாதச்சுவடு இங்கு
    பதிந்தே இருக்கும்.

    மூன்று வருட
    நிகழ்வுகள் அனைத்தும்,
    காலம் வரை
    என் கனவினில் இருக்கும்.

    நானும் நண்பர்களும்
    சேர்ந்திருந்த நாட்கள்,
    சாகும் வரை
    என் நினைவினில் இருக்கும்

    இருந்தும்,
    எனக்கு நிழல் தந்த
    கல்லூரி மரமே.
    எனக்கும் நிழல் தந்த
    கல்லூரி மரமே.

    இந்த கடைசி தருணத்தில்,
    உன்னிடம்
    தண்ணீர் விட்டு விடைபெறவில்லை.
    என் கண்ணீர் விட்டு விடைபெறுகிறேன்.

    என்னை மறந்துவிடாதே,
    நானும்
    உன் நிழலில்
    ஓய்வேடுத்தேன் என்று….

    – பிரவீன் குமார் செ

    என் கவிதைப் பிரசவம்

    Love Paper Heart

    இலக்கணம் எனும்
    சுகப்பிரசவம் தாண்டி
    புதுக்கவிதை எனும்
    சிசேரியன் கண்டிராவிட்டால்
    உணர்வு எனும் என் குழந்தை
    இதயமெனும் கர்பப்பையினுள்ளேயே
    ஒருவேளை இறந்து போயிருக்கும்.

    – பிரவீன் குமார் செ