2004ஆம் ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன். கல்லூரியில் பயின்று கொண்டு இருக்கும் தருணம். ஒரு நாள் வகுப்பறையில் இருக்கும்போது அந்த தகவல் வருகிறது. நோய்வாய்ப்பட்டு இருந்த ஒரு வகுப்பறை நண்பனின் தாயார் இறந்துவிட்டார் என்று. அனைவரும் அவன் வீட்டிற்கு துக்கம் அனுஷ்டிக்க சென்றோம். ஆனால் அதுவரை எனக்கு அந்த இழப்பின் ஆழம் முழுதாக புரிந்திருக்கவில்லை. ஒரு வேலை மிக நெருக்கமானவர்கள் யாரையும் நான் அந்த தருணத்தில் இழந்திருக்கவில்லை என்பதால் என கருதுகிறேன்.
இத்தனையும் அங்கு சென்றடையும் வரை மட்டுமே. அவன் வீட்டின் அருகே சென்ற போது… என் நண்பனின் ஓலம்… அதை கேட்டுக்கொண்டே அவன் வீட்டிற்குள் நாங்கள் நுழையும்போது என் உடல் சிலிர்த்து போனது. உள்ளே சென்ற உடன் அவன் என்னை கட்டித்தழுவி கதறி புலம்பியபோது ஒரு நிமிடம் என்னை ஏதோ செய்துவிட்டது. அம்மாவென்றால் யாருக்குத்தான் பிடிக்காது? பத்து மாதம் சுமந்து பெற்று தன் குழந்தைகாகவே வாழ்ந்து மடியும் ஒரே உறவு அம்மா தான். அதன் இழப்பு நிச்சயம் ஈடு செய்ய முடியாத ஒன்று.
இரவு பதினோரு மணிவரை இடுகாட்டில் அவனுடன் இருந்து உடல் தகனம் செய்துவிட்டு வந்தோம். வீட்டிற்கும் வந்தும் கூட அந்த பாதிப்பு என்னை விட்டு அகலவில்லை. அவன் கல்லூரி படிப்பை முடித்த பிறகு, நல்ல வேலை கிடைத்து சந்தோசமாக இருந்தால் கூட அவன் அம்மாவிற்கு கடைசி வரை தெரியாதே? இப்படி பல கேள்விகள் என்னுள் எழுந்து கொண்டு இருந்தது. அவன் மனநிலையை நானும் உணர்த்து கொண்டிருத்த அந்த நடுநிசியில் அவனுக்காக வெளிப்பட்ட பாதிப்பே இந்த கவிதை.
அம்மா!
எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது..
குழந்தையாய் நான்
சாப்பிட அடம்பிடித்த போது,
நீ பாசத்துடன் ஊட்டிய
அந்த நிலாச்சோறு.
முழுக்கால் சட்டை வயதில்
பள்ளிக்கு செல்லும் முன்
அப்பாவுக்கு தெரியாமல் நீ கொடுக்கும்
அந்த பத்து ரூபாய் நோட்டு.
எனக்கு காய்ச்சல் வரும்போதெல்லாம்
உன் கண்களில் வரும்
அந்த கண்ணீர் துளி.
சரியாக படிப்பதில்லையென
அப்பா என்னை அடிக்கும் போது
நீ மட்டுமே என் மேல் வைத்த
அந்த நம்பிக்கை.
அனைத்தையும்
அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியுமா?
எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது..
நீ உடல் நிலை பாதிக்கப்பட்டு
உன் கடைசி தருணத்தில்
எல்லோரும் உனக்காக வேண்டிக்கொண்டு இருக்க,
நீயோ
என்னை பற்றியும்
என் எதிர்காலம் பற்றியும் பேசியவாறு
என் மடியில் உயிர் பிரிந்த
அந்த தருணம்.
இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.
அனைத்தையும்
அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியுமா?
அம்மா!
இப்போது
நீ எதிர்பார்த்த நிலையில்
நானிருக்கிறேன்.என்றாலும்
என்னுடன்
எனக்கு துணையாய் இருப்பதோ
உன் குரலும்
உன் உருவமும் தான்.
காதல் காவியம்
காதல் வானிலே,
வாழும் காவியம் நாம்.
நிலவாய் நீ,
ஒளியாய் நான்.
——————————————————————————————-
தனிமை
காதல் தீவிலே,
நிலமாய் நான்….
தனியாய் என்று வருந்தினேன்!
கடலாய் நீ…
அலையாய் வந்து மோதினாய்..

——————————————————————————————-
காதல் மொழி.
ஊமைகள் கூட
பேசும் மொழி,
காதல் மொழி!
——————————————————————————————-
தேடல்
மலரை தேடி வண்டு வந்தது,
மகிழ்கிறாய்!
இரவை தேடி நிலவு வந்தது,
ரசிக்கிறாய்!
உன்னை தேடி நான் வந்தால் மட்டும்
ஏனடி வெறுக்கிறாய்?
——————————————————————————————-
அவளின் பிறந்த நாள்
பூவுக்கு பிறந்த நாளாம்!
புத்தாடை போர்த்திக்கொண்டது…
பூவிலும் அவள்
மல்லிகையோ ரோஜாவோ அல்ல..
அது வாடி விடும்.
அவளோ வாடா மல்லி
என்றென்றும் “வாடா மல்லி “!
——————————————————————————————-
சிக்கல்
காதல் புயல் என்றறிந்தும்
ஆண் மனம் மாட்டிக்கொள்கிறது!
காதல் தீ என்றறிந்தும்,
ஆண் குணம் சுட்டுக்கொள்கிறது!
காதல் சுழல் என்றறிந்தும்
ஆண் இனம் சிக்கிக்கொள்கிறது!
——————————————————————————————-
உனக்காக,
நான் புதிதாய் கற்றுக்கொண்ட மொழி,
மௌன மொழி!
——————————————————————————————-
கொலை
புயலில் பிழைத்து,
இடியில் தப்பித்து,
தீயில் நடந்து,
நீரில் தவழ்ந்து
உன்னை காண வந்தேன்
ஒரே புன்னகையில் என்னை கொன்றுவிட்டாயடி!
——————————————————————————————-

கனவு
நீ என்னிடம்
கனவிலாவது காதலிப்பாய் என்றுறங்கினால்
கனவு கூட,
கனவாகி போனது!
——————————————————————————————-
நேரம்
நீ இருக்கும் போது,
நேரம் போதவில்லை.
நீ இல்லாத போது,
நேரம் போகவில்லை!
——————————————————————————————-
காதல் என்ன கெட்ட வார்த்தையா?
பரவாயில்லை,
பேசித்தான் பார்ப்போமே!
——————————————————————————————-
என் டைரி
உன்னை பார்த்த நாள் முதல்,
என்னிடம்,
என் டைரி கோபித்துக்கொண்டது.
எழுத்துச்சுமை அதிகமாகிறதாம்.
என் மனச்சுமை குறைவது தெரியாமல்……
——————————————————————————————-
விண்மீன்களை கண்களாக்கினான்,
சந்தனத்தை தோலாக்கினான்,
பளிங்கை உடலாக்கினான்
ஆனால்,
இதயம் மட்டும் கல்லாக்கிவிட்டானே!
——————————————————————————————-
பூக்கடையில்,
ஒவ்வொரு பூக்களும் அழகழகாய் இருந்தன,
நீ வரும் வரையில்!
புத்தகக்கடையில்,
ஒவ்வொரு புத்தகமும் அரிதாய் இருந்தன
நீ தொடும் வரையில்!
——————————————————————————————-
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை கண்டு என் மனம் பாதிக்கப்பட்டபோது எழுதிய வரிகள்…

கண்ணீர் இருப்பில்லை
அலைகடலே
உன் கரையில் விளையாடியது குற்றமென
பிஞ்சுகளின்
உயிரோடு விளையாடிவிட்டாய்.
உன் மடியில்
வலை வீசியது குற்றமென
மீனவர்களின்
உயிரை விலை பேசிவிட்டாய் .
குழந்தைகளை பிரித்து
பெற்றோர்களை அனாதயாக்கினாய்
பெற்றோரை பிரித்து
குழந்தைகளை அனாதயாக்கினாய்.
இன்னும்
யாரை பிரிக்க
அலை அலையாய்
அலைந்துகொண்டு இருக்கிறாய்?
இங்கு இறப்பதற்கு
இன்னும் தான் மிச்சம்மிருக்கிறோம்
இறந்த பின் சிந்துவதற்கு
கண்ணீர் தான் இருப்பில்லை…
- பிரவீன் குமார் செ
நெய்வேலி புத்தக கண்காட்சி 2004 லில் பரிசு பெற்று “நெய்வேலி கவிஞர்கள்” எனும் கவிதை தொகுப்பில் பிரசுரமான என் கவிதை. நெய்வேலி நூலகத்தில் புத்தகம் வைக்கப்பட்டு எனக்கு முதன் முதலில் அங்கிகாரம் பெற்று தந்த கவிதையிது. கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று கொண்டிருந்த சமயம் என்று நினைக்கிறன். நான் எப்பொழுதும் புத்தக புழுவாக வுர்ந்து கொண்டிருந்த நெய்வேலி நூலகத்தில் என் கவிதை இருந்தது ஒரு பெருமைக்குரிய விசயமாக கருதுகிறேன்..

மனிதமுயற்சி
- நிலவு சொந்தமில்லை
இருந்தும் கையை நீட்டியவாறு
சிறு குழந்தை…
- கூந்தல் சொந்தமில்லை
இருந்தும் மலர்ந்து கொண்டேயிருக்கும்
காகிதப்பூ..
- மழைத்துளி சொந்தமில்லை
இருந்தும் நம்பிக்கையுடன் வானம் பார்க்கும்
பாலைவன கள்ளிச்செடி..
- நாளை சொந்தமில்லை
இருந்தும் முயற்சியுடன்
மனிதன்….
- பிரவீன் குமார் செ
December 17th, 2008 in
கவிதைகள் | tags:
கவிதை,
மனிதமுயற்சி |
No Comments