மற்றவர்களுக்கு உதவும் முன்னர் முதலில் இதை படிங்க

Salem-central-bus-stand

இன்று மாலை ஐந்து மணி இருக்கும். சேலம் மத்திய பேருந்து நிலையம் நுழைவாயிலை சிறிது தூரம்தாண்டி காரை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு கீழே இறங்கினேன். சாலையை கடந்து எதிர்புறம் ஒரு கடைக்கு நான் செல்லவேண்டும். இரண்டு அடி முன்னே எடுத்து வைக்கும்போது ஒருவர்  என்னை அழைக்கும் குரல் கேட்டது.. மீண்டும் பின்னோக்கி நடந்து அவர் அருகில் சென்றேன். அந்த நபரை பார்க்க முப்பது சொச்சம் வயது இருக்கும். என்னவென்று கேட்டேன்?… இந்தி தெரியுமா என்று இந்தியிலேயே கேட்டார் அந்த நபர்.. கேட்ட மாத்திரத்திலேயே அவர் ஏதோ விலாசம் தெரியாமல் தடுமாறுவது போல் நான் உணர்ந்ததால், கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்று உடைந்த இந்தியில் பதிலளித்தேன்.

அதை கேட்டதும் இரண்டு நிமிடம் தொடர்ந்து இந்தியிலேயே ஏதேதோ பேசினார்.. ஆனால் அது எனக்கு முழுதாக புரியவில்லை. ஆங்கிலம் தெரியுமா என்றேன்? தெரியவில்லை… இருப்பினும் அவர் பேசியதின் நடுவில் உதிர்த்த சில சொற்களை வைத்து நான் புரிந்து கொண்டது இதுவே… “தான் மும்பையில் இருந்து வருவதாகவும், கன்னியாகுமரி சென்று கொண்டிருக்கும்போது ரயிலில் தான் கொண்டுவந்த நான்காயிரம் ரூபாய் பணத்தை யாரோ களவாடிவிட்டதாகவும் கூறினார்”. பின்பு தனக்கு பசிப்பதாகவும் காலையில் இருந்து உணவருந்தவில்லை என்பது போல் தன் வயிற்றை தொட்டு பார்த்து காட்டினார். இரண்டு, மூன்று தடவை அவர் திரும்ப திரும்ப இதை கூறியதால் தான் என்னால் இவ்வளவும் புரிந்து கொள்ள முடிந்தது.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. என்னிடம் என்ன உதவி எதிர்பார்கிறார்கள் என்றும் புரியவில்லை. நான் பேசியதும் அவருக்கும் புரியவில்லை. அப்போதுதான் கவனித்தேன், அருகில் ஒரு பெண்மனியும், ஒரு சிறுவனும் மற்றும் ஒரு சிறுமியும் நின்று கொண்டிருந்தனர். சிறுவனின் முதுகில் பேக் மாட்டி இருந்தான். அந்த சிறுமி அந்த பெண்மணியின் கையை பிடித்தவாறு நின்றிருந்தாள். அந்த பெண்மணி என்னிடம் தன்னை என் சகோதரி போல் நினைத்துக்கொள்ள சொல்லி ஏதோ இந்தியில் பேசியது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த சிறுமியை பார்த்தேன். அதன் கண்ணில் கண்ணீர் வழிந்துகொண்டிருப்பதை நான் கண்டதும் எனக்கு என்னவோ போல் ஆயிற்று.

உங்களுக்கு நூறு ருபாய் தருகிறேன் முதலில் போய் டிபன் சாப்பிடுங்கள் என்று அருகில் இருந்த ஹோட்டலை நோக்கி காண்பித்து அவர்களுக்கு புரிவித்தேன். என்ன நினைத்தேனோ தெரியவில்லை உடனே இருநூறு ருபாய் அவர் கையில் கொடுத்து அந்த சிறுமிக்கு உணவளிக்குமாறு மீண்டும் கூறினேன். ஆனால் அந்த நபரோ மகாராஷ்டிரா போக டிக்கெட் வேண்டும் என்றும், ஒரு டிக்கெட் இருநூற்றி இருபது ருபாய் என்றும் மேலும் இருநூறு ருபாய் கொடுத்து உதவுமாறு கேட்டார்.  இங்கே எனக்கு மொழி பிரச்சனை யாரும் உதவமுன்வரவில்லை என்று என் கையை பிடித்து கெஞ்சினார். உங்களுடைய விலாசத்தை தாருங்கள் ஊருக்கு போய் பணம் அனுப்புகிறேன் என்றும் கூறினார்.

எனக்கு இந்த நொடியும் என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த பெண்மனியும் இந்தியில் தொடர்ந்து கெஞ்சினார். அந்த சிறுமியை பார்த்தேன். அதன் கண்ணில் கண்ணீர் ஈரம் இன்னும் காயவில்லை. என்னை பரிதாபத்தோடு அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். மனம் கனத்தது.  ஒரு நொடி கூட யோசிக்கவில்லை, மேலும் முந்நூறு ருபாய் கொடுத்துவிட்டு, இதில் மொத்தம் ஐநூறு இருக்கிறது, குழந்தைக்கு முதலில் சாப்பாடு வாங்கி கொடுத்து விட்டு  பஸ்சில் ஊர் செல்லுங்கள் என்று கூறினேன். மிகவும் நெகிழ்ச்சியுடன் அவர்கள் என்னுடைய பணத்தை திரும்ப அனுப்புவதற்காக என் விலாசத்தை மீண்டும் கேட்டனர். நான் பரவாயில்லை பணம் வேண்டாம், பத்திரமாக  ஊருக்கு செல்லுங்கள் என்றேன். என் கையை பிடித்து இந்தியில் மீண்டும் ஏதோதோ கூறி. காட் ப்ளஸ் யூ என கடைசியாக ஆங்கிலத்தில் கூறிவிட்டு சென்றார்.  அவர்கள் நால்வரும் நிம்மதிபெருமூச்சுடன் புன்னகையை முகத்தில் சுமந்தவாறு பேருந்து நிலையத்தை நோக்கி நடப்பதை பார்த்த போது என் மனதில் அவ்வளவு சந்தோஷம். மற்றவர்களுக்கு எதிர்பாரமால் உதவி செய்து அவர்களின் முகத்தில் சந்தோசத்தை காணும் அந்த தருணம் எத்தகையது என்று அப்போது தான் எனக்கு தெரிந்து.

வீட்டிற்கு வந்தவுடன்  நடந்தவைகள் அனைத்தும் முதலில் அம்மாவிடம் கூறினேன். அவரும் இதை கேட்டவுடன் மிகவும் சந்தோஷப்படுவார் என எண்ணினேன். ஆனால் அவர் கூறியதோ எனக்கு அதிர்ச்சி அளித்தது.  “இதுபோல் நிறைய பேரை இப்படி நூதனமாக சேலம் பேருந்து நிலையத்திலும், ரயில் நிலையத்திலும் ஏமாற்றிக்கொண்டு இருகிறார்கள்” என்றும், அதில் ஏமாந்த எனக்கு  நன்கு தெரிந்த சில நபர்களின் பெயர்களையும் கூறியவுடன்  நான் உறைந்து போனேன். எவ்வளவு கொடுத்தாய் என்றார்? “ஐநூறு” என்றேன். இடையில் புகுந்த அப்பாவும் இது போல் நிறைய பேர் ஏமாந்து இருக்கிறார்கள் என கூறினார். அப்போது தான் நானும் ஏமாந்ததை அறிந்தேன்.

அப்போது கண்களில் நீர் வழிந்தவாறு என்னையே ஏக்கத்துடன் பார்த்த அந்த சிறுமி ஒரு நிமிடம் என் நினைவில் வந்து போனாள். என்னை அவர்கள் ஏமாற்றியது பெரிதாக அந்த நொடி தெரியவில்லை.  அதற்கு பதில் என்னுடைய பர்ஸை களவாடி இருந்தால் கூட இன்னும் சில நூறு ருபாய் தாள்களும், ஐநூறு ருபாய் தாள்களும் அவர்களுக்கு கிடைத்திருக்குமே? நானும் தொலைத்துவிட்டோம் என்று எண்ணி ஒரு நாள் மட்டும் வருத்தத்துடன் அதை மறந்திருப்பேன்.  ஆனால் அவர்களுக்கு உதவ நினைத்தது குற்றமா? எதற்காக அவர்கள் என் உணர்வுகளில் அவர்கள் விளையாட வேண்டும்?  அது தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

என் மனதில் எழுந்த ஒரே கேள்வி இது தான். இன்னொரு நாளில், அதே இடத்தில், வேறொரு வட இந்திய குடும்பமோ, அல்லது தமிழ் குடும்பமோ உண்மையாகவே இதே பரிதாப நிலையில், உணவில்லாமல், பசியில் வாடிய சிறுமியை அருகில் வைத்துக்கொண்டு என்னிடம் உதவி கோரினால், அதை நான் எப்படி எதிர் கொள்வது?

Comments (18)

மதுரை சரவணன்February 23rd, 2011 at 12:37 am

யாரோ ஒருவர் ஏமாற்றியது , நாம் உண்மையாய் இருந்தாலும் சந்தேகப்பட வைக்கிறது அதனாலே உண்மையானவர்களூக்கு உதவி செய்ய முடியாமல் போகிறது.. உங்கள் உதவி உண்மையானதாகத் தான் இருக்கும் .. வாழ்த்துக்கள்

BandhuFebruary 23rd, 2011 at 6:07 am

அது உண்மையாக ஏன் இருக்க கூடாது? அதே போல், பொய்யாக இருந்தாலும் உங்கள் இயல்பை விட்டு விட வேண்டாம்.

K.V.RudraFebruary 23rd, 2011 at 7:03 am

ஏமாந்ததை பெரிதாக நினையாதிங்க,நீங்கள் செய்ததை நாங்கள் பெரிதாக,நினைக்கிறோம்.”கடமையைச் செய் பலனை எதிர் பாராதே” சொன்னவன் கண்ணன்

IvanFebruary 23rd, 2011 at 7:55 am

என்ன சொல்வதென்றே தெரியவில்லை…………………….

பரிதாப உணர்வுகளை வைத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். இது முக்கியமாக குடும்பத் தலைவனாலேயா ஏற்படுத்தப்படுகின்றது. இதற்கு மனைவியும் பிள்ளைகளும் கட்டாயத்தின்பேரில் ஆளாகின்றனர். பெண் கொள்ளையர்கள் தனியே செயற்படுவது வேறு! இவர்கள் இவ்வாறு பெறும் பணத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் இவர்களும் வறுமையில் இருந்து மீண்டு விடலாம். ஆனால் முழுப்பணத்தையும் போதைக்கே பயன்படுத்துகின்றனர்.

வறுமையின் கீழ் உள்ளவர்கள் நேர்மையான‌வர்கள் எவரையும் இவ்வாறு ஏமற்றுவதில்லை. அவ்வாறானவர்களை தேடி உதவிசெய்யுங்கள்.

Rathnavel NatarajanFebruary 23rd, 2011 at 11:04 am

சரியான பதிவு.
நானும் இதே மாதிரி ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏமாந்திருக்கிறேன்.
டெல்லியிலிருந்து வருவதாக ஒரு தமிழ் பிராமண குடும்பம் முகவரியெல்லாம் கொடுத்து ஏமாற்றி விட்டு சென்றார்கள்.
நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

sagampariFebruary 23rd, 2011 at 7:25 pm

உணர்வுகளை வெளிப்படுத்துவதுதான் கவிதை. நல்ல ஆக்கம்.

sagampariFebruary 23rd, 2011 at 7:29 pm

ஆனால், எல்லோரையும் சந்தேகப்பட்டால், இது போன்ற உணர்வுகள் செத்துப்போய்விடும். அடுத்த முறை மறுதலித்தாலும் வேதனை நமக்குதான்.

madurai tamil GuyFebruary 24th, 2011 at 3:52 am

சில பேர் இப்படி ஏமாற்றி திரியலாம். ஆனால் எல்லோரும் அப்படி அல்ல. உங்கள் உதவும் குணத்தை மாற்றி கொள்ளாதீர்கள் ஆனால் உதவும் போது கொஞ்சம் விழிப்பாக இருங்கள். கையிலே பணம் கொடுப்பதற்கு பதிலாக உணவாகவும். பஸ் அல்லது ரயில் டிக்கெட்டாகவும் வாங்கி கொடுங்கள். ரயில் டிக்கெட் வாங்கி தரும் போது க்ரெடிட் கார்டு மூலம் வாங்கி தாருங்கள். ஏமாற்றுபவர்களாக் இருந்தால் அவர்கள் டிக்கெட் கேன்சல் செய்தால் அந்த மணீ ஆட்டோமேட்டிக்காக உங்கள் கார்டுக்கே வந்து விடும்.

எப்போது உதவவேண்டும் என்று வந்துவிட்டிர்களோ அப்போது உங்கள் மனசாட்சி சொன்னபடி நடங்கள். அந்த மனிதர் உங்களை ஏமாற்றி கூட இருக்கலாம் கொஞ்சம் யோசித்து பாருங்கள் அவர் ஏன் உங்களை ஏமாற்ற வேண்டுமென்று? இரு வேளை அந்த மனிதருக்கு எந்த வேலையும் இல்லாமல் இருந்திருக்கலாம் அதனால் தான் நாடகமாடி பணம் பெற்றிருக்கலாம். வேலை இருக்கும் யாரும் இந்த மாதிரி செய்யமாட்டார்கள்.

மீண்டும் சொல்கிறேன் நீங்கள் ஏமாற்ற படவில்லை ஒரு வேலையில்லாத ஆளூக்குதான் உதவி இருக்கிறீர்கள். மனமகிழ்சியுடன் இருங்கள். கடவுள் உங்களுகு வேண்டியதை அள்ளி வழங்குவான்

udayasanthiranFebruary 25th, 2011 at 12:36 pm

எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு .
அனுபவமே ஆசான்.
உங்கள் அனுபவம் எமக்குப் பாடம்.
உங்கள் நல்ல மனம் பாராட்டுதற்குரியது.
வாழ்த்துக்கள்.

பிரவீன்March 1st, 2011 at 1:27 pm

அனைவருக்கும் நன்றி.

dhaniMarch 1st, 2011 at 3:38 pm

ரொம்ப பெருமையா இருக்கு. அவங்க உங்களை எமாத்தி இருந்தாலும் அந்த குழந்தை உங்க பணத்துல சாப்பிட்டு இருக்கும் அது போதும் நமக்கு. இன்னும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

Selvakumar MMarch 7th, 2011 at 5:08 pm

நீங்கள் உதவிய பொழுது கிடைத்த சந்தோசம் உங்கள் மனதில் பதியவையுங்கள். உண்மையாக உழைத்த பணம் என்றும் வீணாக போகாது. உதவும் போது, தயவு செய்து நீங்கள் கொஞ்சம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். நன்றி

CKApril 11th, 2011 at 7:29 am

Praveen, finally, I managed to read your blog.I liked your conversational style of writing. You don’t try to preach but come out with feelings and experiences straight from the heart. I ma sure many of us have gone thru your bus stand experience. Like many have commented don’t lose your essential nature of helping people but be a bit cautious. Next time, if you can spare the time, tell them, you will buy the tickets to whichever place they want to go.

பிரவீன்April 18th, 2011 at 11:42 pm

என் வலைபூவிற்கு வருகை தந்தது மிக்க மகிழ்ச்சி செந்தில் சார். மிகவும் அருமையான யோசனை கூறியுள்ளீர்கள். நன்றி. மீண்டும் வருக 🙂

devarajanJuly 18th, 2013 at 3:04 pm

சேலத்தில் இதே மாதிரி அனுபவம் வேறு பாணியில் எனக்கும் ஏற்பட்டு இருக்கிறது

Vetri veeran sakkaravarthiApril 8th, 2014 at 4:31 pm

டியர் மர் . க.பிரவீன்
சலம் அளிக்கும்.
இ வான்ட் டு டாக் டு யு, பெகுசே யு ஆர் க்நோவ்லேட்கப்ளே பெர்சன் அண்ட் தட் அலசோ ப்ரோவேத். இப் யு லைக், கேன் இ கெட் யுவர் மெயில் அட்ரஸ். அண்ட் இ வான்ட் டு மீட் யு இன் பெர்சன்.
தேங்க்ஸ்,
வெற்றி வீரன் சக்கரவர்த்தி.

Shivani YuvanjalinJanuary 12th, 2017 at 6:18 pm

சரியான பதிவு.

campus eventsFebruary 3rd, 2017 at 11:25 am

எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு

Leave a comment

Your comment