
தேர்வு தொடங்கியது.
கேள்வித்தாள் ஒருகையில்,
பதில்தாள் மறுகையில்.
கேள்வித்தாளை அனாதையாக்கினேன்
பதில்தாளை மட்டும் தத்தெடுத்தேன்!
பக்கம் பக்கமாய் எழுத ஆரமித்தேன்.
ஒன்று
இரண்டு
முன்று
.
.
.
அடுக்கிக்கொண்டே போனேன்.
தேர்வு நேரம் முடிந்தது.
ஆசிரியர் ஆச்சர்யத்தோடு வாங்கினார்
கட்டப்படாத என் ஒற்றை பதில்தாளை.
பாவம்!
அவருக்கு தெரியாது
என் பாக்கட்டில் மீதமுள்ள
நான் எழுதிய கவிதை தாள்களை!
பாவம்!
யாருக்கும் தெரியாது,
கடைசி வரை அந்த கேள்வித்தாள்
என் கண்களினால் கற்பழிக்கப்படவில்லை என்று!

ஜனவரி 26, 2011 அன்று சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள ஜெயா டீ.வி அலுவலகத்தில் நுழைகிறேன். ஏதோ ஒரு ஐ.டி கம்பனியில் நுழைந்த ஒரு எண்ணத்தை தோற்றுவித்தது அங்கே இருந்த பாதுகாவலர்களின் அணுகுமுறையும், அதன் அலுவலகத்தின் நுழைவாயிலும். குடியரசு தினம் என்பதாலோ என்னவோ அன்று அவர்களின் வரவேற்பறையில் நடமாட்டம் கொஞ்சம் கம்மியாக இருந்திருக்க வேண்டும். சிறிது உரையாடலுக்கும், சிறிது காத்திருத்தலுக்குப் பின்பு நான் உள்ளே ஸ்டுடியோவிற்குள் அழைத்துச்செல்லப்படுகிறேன்.
சேலம்ஜில்லா.காம் என்ற இணைய தளத்தின் நிறுவனர் என்பதாலும், கூகிள் சான்றளிக்கப்பட்ட ஆட்வோர்ட்ஸ் நிபுணர் என்பதாலும் அதை பற்றி “தகவல்டெக்” என்ற நிகழ்ச்சிக்காக கலந்துரையாட வந்ததுதான் இந்த அழைப்பு. எதை பற்றி பேச போகிறோம், என்ன கேள்வி கேட்கப்படும் என்று எதுவுமே என்னிடம் கூறப்படவில்லை. குளிரூட்டப்பட்ட நிசப்தமான அறை. எனக்கான இடத்தில் அமர்த்து மைக் மாட்டப்பட்டு குரல் சரிபார்க்கப்படுகிறது. பளிச்சென்ற வெளிச்சம். மூன்று காமிராக்கள் என்னையே நோட்டமிடுகிறது. இது முகப்புதிது எனக்கு.
உள்ளே நுழையும் வரை என் மனதுக்குள் ஓடிக்கொண்டு இருந்தது இது தான். முதன் முறை காமிரா முன்பு அமர்கிறோம், சரியாக வருகிறதா என்று இரு நிமிடம் மானிடர் பார்ப்பார்கள் என எண்ணினேன். ஒவ்வொரு கேள்விக்கும் இடையே என்னை நான் தாயார் செய்துக்கொள்ள அவகாசம் கிடைக்கும் என நினைத்தேன். பதிலளிக்கும் போது ஏதேனும் தவறு நேர்ந்தால் மீண்டும் அதை பதிவு செய்வார்கள் என கருதினேன். ஆனால் அவற்றிற்கு எதுவும் வாய்ப்பளிக்காமல் “ரெடி, ஸ்டார்ட்” என்று மட்டும் தான் வந்தது ஒரு குரல். காமிரா ஓடத்துவங்குகிறது. நிசப்தம் உடைகிறது. நினைத்ததிற்கு முற்றிலும் நேர்மாறாக ஒரே டேக்கில் பதிவு செய்யப்பட்டது முழு நேர்காணலும்.
அதில் பிப்ரவரி 09 அன்று ஒளிபரப்பான சேலம்ஜில்லா.காம் பற்றி நான் பேசியதன் முதல் பகுதி தான் உங்கள் பார்வைக்கு இங்கே. பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!
பின்குறிப்பு: என் முதல் தொலைக்காட்சி நேர்காணலிற்கு வாய்ப்பளித்த நிகழ்ச்சியாளர் பழனி அவர்களுக்கும், ஜெயா தொலைக்காட்சிக்கும் என் நன்றிகள்.

27 பிப்ரவரி, ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் ஐந்து மணியளவில் கொழும்பு கடற்கரையில் நண்பர்களுடன் நடந்து சென்றுக்கொண்டிருக்கையில் ஒரு இடத்தில் திடீர் கூட்டம் இருப்பதை கண்டோம். அருகில் சென்று பார்த்தால், ஆஸ்திரேலிய கிரிகெட் வீரர் ப்ரெட் லீயை சுற்றி ஒரு கூட்டம் மொய்த்துகொண்டு ஆட்டோக்ராப் வாங்கிக்கொண்டு இருந்தது. நான் பெரிதாக கிரிக்கெட் ரசிகனில்லை. கிரிக்கெட் மேல் பித்து பிடித்த கல்லூரி வாழ்விலிருந்து காரணமில்லாமல் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து விலகி வந்துவிட்டேன். அதில் நாட்டமில்லாததால் என்னவோ பிரெட் லீயை பார்த்தும் பெரிதான ஒரு துள்ளல் என்னுள் எழவில்லை. நாங்கள் கூட்டத்தருகே செல்லவும் ப்ரெட் லீ கூட்டத்தை விட்டு விலகி எதிர் பக்கம் செல்லவும் சரியாக இருந்தது.
நண்பர் ஒருவர், ப்ரெட் லீயுடன் நாம் அருகில் நின்று புகைப்படம் எடுத்து இருந்தால் நன்றாக இருந்துக்குமே என்றார். இன்னொருவரோ, சிறிது நேரத்திற்கு முன்னால் வந்து இருந்தால் முயற்சித்திருக்கலாம் இப்போது அவர் ரசிகர்களிடம் இருந்து விடை பெற்று சென்றுக்கொண்டு இருப்பதால் அது சாத்தியமில்லை என கூறினார். சில வினாடிகளில் நடந்தது தான் மேலுள்ள அனைத்தும்.
சரி முயற்சித்துதான் பார்ப்போமே என்று நான் விரைவாக அவரை நெருங்கிச்சென்று சென்று அவசர அறிமுகத்தோடு இந்தியாவிலிருந்து வருவதாக கூறினேன். அவரோ நினைத்ததற்கு எதிர்மாறாக, சட்டென்று என்னிடத்தில் திரும்பி கை குளிக்கியவாறு இந்தியில் ஏதோ கூறினார். (“தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்” என்று இந்தியில் அவர் கேட்டதாக பிறகு நண்பர் கூறினார்). எனக்கோ ஒன்றும் புரியாமல் எனக்கு இந்தி தெரியாது என்றேன். இந்தியாவில் இருந்துக்கொண்டு இந்தி தெரியாதா என அவர் ஆச்சர்யபட்டார். நான் தமிழ் நாடு என்றும் நாங்கள் தமிழ் பேசுவோம் என்றும் கூறியதும் வியப்பில் புன்னகைத்தார். அதுமட்டுமில்லாமல் கேட்டவுடன் புகைப்படத்திற்கு மறுப்பில்லாமல் சம்மதித்தார். அப்போது என் நண்பர் க்ளிக்கிய புகைப்படங்கள் தான் கீழே உங்கள் பார்வைக்கு.
போட்டோ கிரெடிட்: ஸ்ரீ நிதி ஹண்டே (www.enidhi.net)








